Tuesday, September 20, 2011

வேண்டும் வரம் உடனடியாக அருளும் அபூர்வ ஆஞ்சநேயர் !



வேண்டும் வரம் உடனடியாக அருளும் அபூர்வ ஆஞ்சநேயர் !

Posted On  Sep 20, 2011,By Muthukumar

  
வாசக அன்பர்களுக்கு வணக்கம். நேற்றைய நமது திட்டை - குரு பகவான் ஆலயம் பற்றி படித்தவுடன் , உங்களில் நிறைய பேர் விரைவில் செல்ல வேண்டும் என்று முடிவு எடுத்து இருப்பீர்கள்.

அப்படி நீங்கள் செல்லும்போது , திட்டை செல்லும் வழியில் - பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் ஆலயம் உள்ளது. ஊருக்கு செல்லும்போது யாரிடமாவது வழி கேட்டால் ,  ஆஞ்சநேயர் கோவிலுக்கா , இல்லை சிவன் கோவிலுக்கா என்று கூட கேட்கின்றனர். திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலின் அருகில் உள்ளது நவநீத கிருஷ்ணன் ஆலயம் . இங்கு தான் இந்த ஆஞ்சநேயர் அருள் பாலிக்கிறார்.

இந்த கோவிலில் என்ன விசேஷம் என்று கேட்கிறீர்களா... கோவிலில் நுழையும்போதே , ஒரு சில பக்தர்களுக்கு அருள் வாக்கு சொல்வது போல , அர்ச்சகர் , நீங்கள் வந்த காரியத்தை கூறி திகைப்பில் ஆழ்த்திவிடுகிறார். உங்கள் காரியம் ஜெயம் உண்டாகட்டும் என்று மனமார வாழ்த்தி , ஆஞ்சநேயரை மனமுருக துதிக்கிறார்.

மிக முக்கியமான விஷயமாக , இங்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு - நீண்ட நாட்களாக , எட்டாக் கனியாக இருந்து வரும் திருமணப் பிரச்னை , உடனடியாக தீர்ந்து விடுகிறது... இதுஎன்னிடம் பல பேர் சொன்ன, முற்றிலும் உண்மையான விஷயம். 

தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு - உடனடியாக வரம் அளிப்பதில் , பிரசித்தி பெற்றவராக இந்த ஆஞ்சநேயர் விளங்குவதால் , வாய்ப்பு கிடைக்கும்போது - நீங்களும் ஒருமுறை சென்று வாருங்கள்.. !

இத் தலத்தில், வெகு அபூர்வமாக வடக்கு நோக்கிய திருமுகம் கொண்டு காட்சி தருகின்றார் ராம பக்த காரிய சித்தி அனுமன். மட்டை உரிக்காத தேங்காயை துணி கொண்டு இச் சந்நதியில் கட்டி விட்டு வந்தால் வேண்டுபவரின் காரியங்கள் இனிதே நிறைவேறும். இவருக்கு அபிஷேகம் செய்யும் பொழுது திருமுகம் படிப்படியாய் செந்தூர நிறத்திற்கு மாறுவதையும் காணலாம்.

விஷ்ணு அலங்காரப் பிரியர். சிவ பெருமான் அபிஷேகப் பிரியர். அனுமனோ ஸ்தோத்திரப் பிரியர். "ஸ்ரீராம ஜெய ராமா. ஜெய ஜெய ராமா" என்ற ஸ்தோத்திரம் எங்கெல்லாம் ஒலிக்கின்றதோ அங்கெல்லாம் பிரசன்னமாகின்றவர். தினம் இதனை 21 முறை உச்சரிக்க அனுமனின் ஆசி பரிபூரணமாய் கிடைத்திடும்.

பஞ்ச முக அனுமன் வழிபாடு குடும்பத்தில் ஒற்றுமையை தந்து வாழ்வை வளமாக்கிடும். நெடு நாட்களாக தீராத நோய்கள் அனைத்தையும் தீர்த்திடும். வினைகளால் ஏற்பட்ட ரோகங்களை போக்கிடும். ஜோதி சொரூபமான இவரை வழிபட்டால் குடும்பத்தில் நிலவும் கஷ்டங்கள் அனைத்தையும் தீர்ப்பார் என்பது நிச்சயம்.

அனுமனை பூஜித்தால் மனதில் உள்ள குழப்பங்கள் யாவும் தீரும். பணக் கஷ்டங்கள் விலகும். ஆஞ்சநேயர் பூஜை மற்றும் விரதங்களுக்கு ஏற்ற நாள் செவ்வாய் மற்றும் சனிக் கிழமைகளும்தான். இவ்விரு நாட்களும் அனுமன் கோவிலில் அமர்ந்து அனுமன் சாலீஸா அல்லது ராம சரிதம் படிக்கலாம். அனுமனுக்கு இஷ்ட நாமமான ராம நாமம் பாராயணம் செய்யலாம்.
====================================

ஹனுமான் அருள் பெற வேண்டுமென்று எண்ணுபவர்கள் - ஸ்ரீ ராம ஜெயம் - என்று பேப்பரில்  - 1008 , அல்லது 10008 , அல்லது 100008 முறை - எழுதி , அதை மாலையாக தொடுத்து , ஆஞ்சநேயருக்கு அணியலாம். 

குழந்தைகளுக்கு நல்ல கல்வி, மதிப்பெண் பெற வேண்டுவோர் , உயர் கல்வி வேண்டுவோர் ,  IIT - IIM , UPSC என்று எய்ம்  பண்ணுபவர்களுக்கு ஸ்ரீ ராம ஜெய மாலை அணிவித்தல் மிக நல்ல பலன்களைத் தரும். 

குழந்தையாக இருக்கும்போது , அருகில் இருக்கும் ஆஞ்சநேயருக்கு மாலை சாத்துவதாக வேண்டிக்கொண்டு , குழந்தை வளர்ந்து எழுத படித்தவுடன் , அதன் கையாலேயே எழுதி நேர்த்திக்கடன் செலுத்துவது நல்லது. 

1 comment:

  1. கும்பகோணம் - தஞ்சாவூர் அருகிள் கிட்டத்தட்ட 30 கி.மீ. தொலைவில் திட்டை எனும் ஊரில் ( நவநீத கிருஷ்ணன் ஆலயத்தில்) இந்த அனுமன் கோவில் அமைந்துள்ளது

    ReplyDelete