Saturday, February 25, 2012

சிவனை தரிசனம் செய்ய உகந்த காலம் எது?

பிரதோஷ காலம் என்பது என்ன? சிவ தரிசனம் செய்ய, அது ஏன் விசேஷமாகச் சொல்லப்படுகிறது?
சிவனை வழிபட ஏற்ற காலம் மாலை நேரம்; அதிலும் சிறந்தது சோமவாரம்; (திங்கட்கிழமை) அதிலும் சிறந்தது மாத சிவ ராத் திரி, அதிலும் சிறந்தது பிரதோஷ காலம். பிரதோஷ காலத்தி ல் சிவதரிசனம் செய்பவர்கள், எல்லா தேவர்களையும் தரிசித்த பலனையும் பெறுவர்.
பிரதோஷ காலத்தில், சகல தேவர்களு ம், சிவதரிசனம் செய்ய வந்து விடுகின் றனர். அதனால், நம் வீடுகளில் தெய்வ வழிபாடு பிரதோஷ காலத்தில் அவசிய மில்லை.
பிரதோஷ காலங்களில் சிவதரிசனம் செய்வதால், சகல பாவங்க ளும் விலகி, புண்ணியம் கிடைக்கும்; சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்; சோமாஸ் கந்த மூர்த்தியை தரிசிப்பதால், இந்திரனு க்கு சமமான புகழ் கிட்டும்; பிரதோஷ காலத்தில் சிவாலயத்தில் செய்யப்படும் எந்த கைங்கர்யமும் பலவாகப் பெருகி, அளவற்ற பலனை கொடுக்கும்.
பிரதோஷ காலத்தில் சிவன் கோவில் வழியாகப் போனான் ஒருவன். போகும் போது வெற்றிலை பாக்கு போட்டுக் கொ ண்டே போனான். வெற்றிலை பாக்கு போ ட்ட பிறகு, விரலில் கொஞ்சம் சுண்ணா ம்பு இருந்தது.
அதை வழியிலிருந்த சிவன் கோவில் சுவரில் தடவி விட்டுப் போனான். ஆனா ல், அதுவே பெரும் புண்ணியமாகி விட்ட து.
இவன் தடவிய சுண்ணாம்பு, மதில் சுவரில் இருந்த ஒரு சிறிய பள்ளத்தை அடைத்து விட்டது. உடனே, சிவன் கோவிலில், கைங்கரியம் செய்த புண்ணி யம் இவனுக்கு சேர்ந்து விட்ட து.
இப்படியாக சிவ கைங்கர்யம், வழிபாடு எல்லாவற்றுக்குமே புண்ணியம் சொல்லப்படுகிற து. சிவன் கோவிலில், “சோம சூத்ர பிரதட்சணம்…’ என்று ஒன்று உண்டு. இது, கொஞ்சம் சிக்கலானது. புரிந்து கொள்வது கூட சிரமம்; புரிந்து செய்தால் புண்ணியம்.
பிரதோஷ காலத்தில் சிவ தரி சனம் செய்வது புண்ணியம். ¬முன் மண்டபத்தில் உள்ள நந்தியின் கொம்புகள் வழியாக சிவலிங்க தரிசனம் செய்ய வே ண்டும் என்பது சாஸ்திரம்.
சிரமப்பட்டாவது பிரதோஷ காலத்தில், சிவதரிசனம் செய் தால் புண்ணியம் கிடைக்கும். அதை விடுத்து, “டிவி’ பார்த்துக் கொண் டிருந்தால், “கரன்ட்’ செலவுதான்; புண்ணியம் கிடைக்குமா?

துக்கம் தொடாதவனே யோகி

Posted On Feb 26,2012,By Muthukumar



கடைசியாக முடிவுரைக்கும் நான் காஞ்சிப் பெரியவர்களின் உதவியை நாடுகிறேன்.
`என்னது! பெரியவர்கள் உரையைப் போட்டே பக்கத்தை நிரப்புகிறாயா? எழுதுவதற்குச் சோம்பேறித்தனமா?' என்று கேட்கிறீர்களா?
இல்லை. நான் எதைச் சொல்ல விரும்புகிறேனோ, அதைப் பெரியவர்கள் முன்பே சொல்லியிருக்கிறார்கள்.
அதையே என்னுடைய பாஷையில், பேத்து மாத்துப் பண்ணுவதை விட, அப்படியே கொடுத்து விடுவது மரியாதை என்பதால் கொடுக்கிறேன்.
பெரியவர்களின் அரிய விஷயங்களைத் தேடி அலைய முடியாதவர்கள், இதன் மூலம் பயனடையட்டும் என்று நான் கருதுகிறேன்.
இப்போது `அர்த்தமுள்ள இந்து மதம்' வரிசை, ஒரு லட்சத்தைத் தாண்டிவிட்டது.
பெரியவர்களின் அற்புதக் கருத்துக்களை இதன் மூலம் பரப்புவது என் ஆசை.
இந்த கருவூலங்களைப் பரவலாக இளைஞர்களிடம் விநியோகிப்பது என் நோக்கம்.
இவற்றைப் படிப்பதன் மூலம், பெரியவர்கள் உரைகளை இளைஞர்கள் தேடிப் படிப்பார்கள் என்பது உறுதி.
துக்கத்தைக் குறைப்பதற்கும், ஒரு யோகத்தைக் கடைப்பிடிப்பதற்கும். அவர் சொன்ன வழிகளை மட்டுமே இதில் நான் எடுத்துத் தருகிறேன்.
அவர்கள் சொல்கிறார்கள்:
`நாம் எல்லோரும் பரம்பொருளைப் பற்றிய உண்மையான ஞானத்தைப் பெற முயல வேண்டும்.
இந்த ஞானம் என்பது என்ன?
பரம்பொருளைத் தவிர வேறு எதுவுமே இல்லை என்பதுதான்.
அந்த ஒன்று தான் இத்தனையாகவும் தோன்றுகிறது. இத்தனையான தோற்றங்களிலேயே மனதைச் செலுத்திக் கொண்டிருந்தால், சஞ்சலம், ஏற்றத்தாழ்வு இவற்றால் உண்டாகும் கஷ்டங்கள் எல்லாம் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கும்.
இத்தனை தோற்றத்திலிருந்தும் மனதைத் திருப்பி, இவற்றுக்குக் காரணமான ஒன்றையே அறியத் தொடங்கினால், எண்ணமும் பலவாறாக ஓடி அவதிப்படாமல் சஞ்சலங்கள் ஓயும்.
ஓடுற வஸ்து என்று பின் சலிக்கவோ, ஏற்றத் தாழ்வுக்கோ இடம் ஏது? அந்த நிலையிலேயே நித்திய சுகத்தைப் பெறலாம். அந்த நிலையைத்தான் ஞானம் என்கிறோம்.'
`உலக வாழ்வில்கூட, சுகம் வருவது போலிருக்கிறது. ஆனால், அது நிச்சயமாக நிலைத்து இருப்பதில்லை.
வெளியிலிருந்து வருகிற சுகத்தை, நாம் எப்படிச் சாசுவதமாக்கிக் கொள்ள முடியும்? வெளியிலிருந்து வருவது நமக்கு ஸ்வாதீனப் படாமல், நம் கைவிட்டு ஓடியும் விடும். அப்போது, அதனால் கிடைக்கிற சுகமும் போகத்தான் செய்யும்.
இப்படித்தான் அந்த நிமிஷம் சுகமாக இருப்பது அடுத்த நிமிஷமே மறைகிறது. அடர்ந்த மரத்தின் கிளைகள் ஆடுகிறபோது, இடுக்கு வழியாக கொஞ்சம் வெளிச்சம் வந்து பாய்ந்து விட்டு, அடுத்த நிமிஷமே நிழல் வந்து மூடிக்கொள்வது போலத்தான், உலகத்தின் துன்பத்துக்கு நடுவில் கொஞ்சம் சுகம் தலையை எட்டிப் பார்த்து விட்டு ஓடி விடுகிறது.
நிரந்தர சுகம் என்பது, உலகத்துக்கு காரணமான ஒன்றை அறிவதுதான்.
உலக வாழ்வில் சகல மனிதர்களுக்கும், அளவில்லாத கஷ்டங்கள் உண்டாகத்தான் செய்யும். பணக்காரன், பெரிய பதவியில் இருப்பவன் கஷ்டமில்லாமல் இருப்பதாக மற்றவர்கள் நினைக்கலாம். அப்படி நினைத்துத் தாங்களும் அவர்களைப் போல பணமும் பதவியும் பெறப் பாடுபடலாம்.
ஆனால், பணக்காரனை பதவியில் உள்ளவனைக் கேட்டால் தெரியும். அவனுக்கு எத்தனை கஷ்டங்களென்று.
நாம் திண்ணையில் இருக்கிறோம். விழுந்தால் சிராய்த்துக் கொள்வதோடோ, சுளுக்காவதோடோ போய் விடும்.
பணக்காரனும், பதவிக்காரனும் மாடி மேல் இருக்கிறார்கள். எனவே, அவர்கள் விழுந்தால் எலும்பெல்லாம் முறிந்து போகும். பிராணாபத்து ஆகும்.
ஒருவனுக்குப் பணமும், பதவியும் உள்ளபோதே அதனால் உண்டாகிற சிறிது சுகத்தோடு, தன் பணம் பதவி போகக் கூடாது என்ற கவலை, சுகத்தை விட அதிகமாக இருக்கிறது.
இதனால் தான் உலகத்தில் எவனுமே தான் சந்தோஷமாக இருப்பதாகச் சொல்லக் காணோம்! ஒவ்வொருவனும் தானே மகா புத்திசாலி, தானே ரொம்ப அழகு என்று நினைத்துக் கொண்டிருப்பது போல, அதிகம் துக்கமுள்ளவனும் தானே என்று நினைத்துக் கொண்டிருக்கிறான்.
துக்கம் நம் உடன்பிறப்பு, நம் பூர்வ கர்மவினையின் பயனாக இந்த துக்கங்களுக்கு, நாம் முன்னமேயே விதை போட்டிருக்கிறோம். இதிலிருந்து தப்ப வழியில்லை.
ஆனால், கர்மத்தினால் ஏற்படும் கஷ்டத்தைப் பொறுத்துக் கொண்டு, சாந்தமாக இருக்க வழி உண்டு. புதிதாகக் கர்ம மூட்டையைப் பெருக்கிக் கொண்டு எதிர்காலத்தில் கஷ்டத்தை அதிகமாக்கிக் கொள்ளாமலிருக்க வழி உண்டு. முதலில் சொன்ன ஞானம் அந்த வழி.
சித்தப்பிரமை பிடித்த ஜடமாகி விட்டால் கஷ்டம் தெரிவதில்லை. பைத்தியத்தின் கஷ்டம் வேரூன்றி நிற்பதில்லை. ஆனால், சித்தப்பிரமையில் நித்திய ஆனந்தமும் இல்லை. தூக்கத்தில் துக்கமுமில்லை. ஆனால், தூக்கத்தில் சுகமாக இருக்கிறோமென்று அறிவும் இல்லை.
ஞானிதான் எப்போதும் விழிப்பிலேயே இருக்கிறான். அவனது தேகத்தில் சிரமங்களே இராது என்பதில்லை. ஆனால், அவனுடைய மனத்தில் கிலேசமே இராது. வெளியே இருக்கிற சிரமம் அவன் உள்ளே பாதிப்பதில்லை.
துக்கம் என்பதே தன்னைத் தொடாமல் எவன் ஒருவன் இருக்கிறானோ, அவன் யோகி. பாபம், அதாவது மனத்தின் அசுத்தந்தான் துக்கத்திற்குக் காரணம்.
மனதில் உள்ள அசுத்தங்கள் எல்லாம் நீங்கினால், அது தானாகவே பரமாத்மாவின் பக்கம் திரும்பி விடும். ஒழுங்கினாலும், கட்டுப்பாட்டினாலும் தான் மனத்தின் அசுத்தங்களை அகற்ற முடியும்.
இந்தச் சரீரக் கூட்டிலிருந்து ஆத்மா பிரிந்து போவதற்கு முன்பு, சரியான கல்வியின் மூலமும் அப்பியாசத்தின் மூலமும் கட்டுப்பட்டு, ஒழுங்காக வாழ்ந்து அசுத்தங்களைப் போக்கிக் கொண்டு விட வேண்டும். அப்படி செய்து ஜயித்தால், கடைசியில் தேக வியோகமே பரமாத்மாவுடன் சேர்ந்து விடுகிற யோகமாகி விடும்.
யோகிக்கு அடையாளம் என்ன? பரமாத்மாவைச் சேர்ந்து விட்ட அவனது மனசு, வேறு எதையுமே சேர்த்துக் கொள்ள நினைக்காது.
மனசு அதற்கப்புறம் ஓடவே கூடாது. அப்படி ஆகிவிட்டால் தான், அதற்கப்புறம் இப்போது இந்த மனசினால் நமக்கு உண்டாகி இருக்கிற அத்தனை தொந்தரவுகளும் தொலைந்து போகும். அந்த நிலையைப் பெறுவதற்கு எதைச் சேர வேண்டும்? மனது எதிலிருந்து உற்பத்தியாயிற்றோ அதைத்தான் சேர வேண்டும்.
மனது, அதன் மூலத்தில் சேர்ந்து விட்டால் அங்கே அப்படியே கரைந்து போய்விடும்; அப்புறம் ஓடாது. அதுவே சகல தொந்தரவுகளிலிருந்தும் விடுபட்ட நிலை.
நதி இருக்கிறது. அதன் மூலம் உண்டான இடம் என்ன? சமுத்திரம். சமுத்திர ஜலம்தான் ஆவியாகப் போய், வேறொரு இடத்திலிருந்து நதியாக ரூபம் எடுக்கிறது. அந்த ஆறு ஓடாத ஓட்டமில்லை. இப்படி ஓடி ஓடிக் கடைசியில், தன் மூலமான சமுத்திரத்தில் வந்து விழுகிறது. அப்புறம்? அதற்குத் தனி ரூபம் உண்டா? ஓட்டம் உண்டா? ஒன்றும் இல்லை.
இப்படி நதிகளுக்கெல்லாம் மூலமாக இருந்து, முடிவில் அவற்றைத் தன்னிலே சேர்ந்துக் கொள்கிற சமுத்திரம் மாதிரி, தம் மக்களை எல்லாம் முடிவான சேர்க்கையில், யோகத்தில் தன்னோடு கரைத்துக் கொள்கிற ஒன்று இருக்கிறதா என்றால் இருக்கிறது; சமாதி நிலையில் ஞானிகள், யோகிகள் தங்கள் தனி மனசைக் கரைத்து விட்டு, வெளிப்பிரக்ஞையே இல்லாமல் இருக்கும் போது, அந்த வஸ்துவை விட்டு விட்ட மாதிரி நமக்குத் தோன்றினால் கூட உண்மையில் இது நீங்காத சேர்க்கைதான். உள்ளூர அந்தச் சேர்க்கையின் அனுபவமேதான்.
அவர் வெளிப் பிரக்ஞையோடு இருப்பது மாதிரி நமக்குத் தோன்றுகிற போது கூட, அதை அடைய வேண்டும் என்ற ஆசை எதுவுமே அவருக்கு இல்லை. ஏதாவது ஒன்று தனக்கு வேண்டுமென்று, கொஞ்சம் கொஞ்சம் ஒருவனுக்குத் தோன்றி விட்டால் கூட, அவன் யோகியில்லை. அவன் ஸ்வாமியைச் சேரவில்லை என்று அர்த்தம்.
யோகியின் அடையாளத்தை வேறு விதமாகவும் சொல்லலாம். அவனுடைய சித்தம் பரமாத்மாவிடமே நிலைத்து விட்டது என்றால், அதற்கப்புறம் எந்தப் பெரிய துக்கம் வந்தாலும் அது துளி கூட ஆடக் கூடாது. அசையக்கூடாது. அழக்கூடாது. இப்படியில்லாமல் சித்தம் கொஞ்சம் சலித்து விட்டால் கூட, அவன் பரமாத்மாவை அடையவில்லை என்றே அர்த்தம்.
யோகிக்கு அநேக துக்கம் வரும்; அதாவது ஊர் உலகத்துக் கெல்லாம் அது துக்கமாகத் தோன்றும். ஆனால், அவனுக்குத் துக்கம் லவலேசமும் தெரியாது. பட்ட கட்டை மாதிரி இருப்பான். பட்ட கட்டை என்பது கூடச் சரியல்ல. அது உணர்ச்சியே இல்லாத நிலையல்லவா? யோகி ஒருத்தன்தான், பூரண பிரக்ஞையோடு இருக்கிறவன். அவன் ஸ்தானந்தனாக இருக்கிறவன். அது வேண்டும், இது வேண்டும் என்பதே இல்லாமல் சதா ஆனந்தமாக ஒருவன் உட்கார்ந்து கொண்டிருந்துவிட்டால் அது தான் யோகம்.
அவனுக்கு ஸ்வபாவமாகவே கருணை மாத்திரம் சுரந்து கொண்டிருக்கும், யாரிடத்திலும் கோபம் வெறுப்பு வராது. இன்னொரு பிராணிக்குத் தன்னால் இம்மியும் ஹிம்சை வரக்கூடாது என்கிற எண்ணம் மட்டுமே இருக்கும்.
வெளி உலகத்தின் பார்வைக்கு, அவன் என்னென்ன காரியம் செய்தாலும் அதிலெல்லாம் அவனுக்குத் `தான் செய்கிறோம்' என்ற அகங்கார எண்ணமே இராது. சொந்தப்பற்றே இல்லாமல் பரம காருண்யம் மட்டுமே அவனுடைய காரியங்களில் இருக்கும். வெளியே பார்க்கிற காரியம் கடுமையாக இருந்தாலும் கூட, உள்ளுக்குள்ளே அதுவும் பரம காருண்யம் தவிர வேறாக இராது.
மகா யோகியான பரமேஸ்வரன் இப்படித்தான் சம்ஹாரம் செய்கிறார். நமக்கு அது கொடுமையாகத் தெரியலாம்.
ஒவ்வொரு ஜீவனும் எத்தனை பாப ஜீவனாயிருந்தாலும் சிறிது காலமாவது கர்ம கதியிலிருந்து விடுதலை அடைந்து தன்னிடம் லயித்திருப்பதற்கு அவர் சம்ஹாரம் செய்கிறார். தினமும் நமக்குத் தூக்கத்தைக் கொடுத்து, அந்த நேரத்தில் சுக துக்கங்களிலிருந்து நமக்கு விடுதலை தருகிற மாதிரி, இந்தச் சரீரம் விழுந்த பின்னும் கொஞ்ச காலம் சிரம பரிகாரம் தருகிறார்.
தினமும் தூங்கிவிட்டு மறுநாள் விழித்துக் கொண்டு பழையபடி நல்லது கெட்டதுகளில் விழுகிற மாதிரி இச் சரீரம் போய்ச் சிரம பரிகாரம் ஆனபின், இன்னொரு சரீரத்தில் விழித்துக் கொள்கிறோம். இந்த அலைச்சல், புனரபி மரணம்- கூடாது.
இந்தச் சரீரம் போனால், இன்னொரு முறை சரீரம் வரக் கூடாது. அப்படிச் செய்து கொள்ள வேண்டும். கட்டுப்பாடு, ஒழுங்கு, பரம கருணை, தபஸ், பூஜை, யக்ஞம், தானம் எல்லாம் அதற்குத்தான்.
குழந்தையாக இருக்கிற காலத்தில் இருந்தே இவற்றில் எல்லாம் பழக்கம் வேண்டும். அப்படிப் பழகினால்தான். கோடானுகோடி ஜனங்களை இந்த மாதிரி படிப்படியாக உயர்த்துவதற்கு முயன்றால்தான் எங்கேயாகிலும் ஒரு யோகி, ஒரு ஞானியாவது பூரணமாக உண்டாவார். அப்படி ஒருத்தர் உண்டாவதுதான் இத்தனை மனுஷ்ய சிருஷ்டிக்கும் பலன்.'
ஆகவே,
நிம்மதியற்ற மனிதனாக நீங்கள் இல்லாமல் ஒரு யோகியாக, ஞானியாக மாறுங்கள்.
கோடிக்கணக்கான மக்களைப் பழக்குவதற்குக் குருவாக மாறுங்கள்.
இந்திய சமுதாயத்தை ஆனந்த மயமான சமுதாயமாக்க ஒத்துழையுங்கள்.
உள்ளத்தில் உண்மை ஒளியைக் காண்பதற்கு உலகத்திற்கு வழிகாட்டுங்கள்.

Sunday, February 19, 2012

அன்பே சிவம்!

post on உங்களுக்காக

Posted On Feb 19,2012,By Muthukumar
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி எந்த நாளில் வருகிறதோ, அது, "சிவராத்திரி' இரவு ஆகும். இதை, "மாத சிவராத்திரி' என்பர். அந்த இரவுகளில், மாசி சிவராத்திரி மகிமை மிக்கதாக இருப்பதால், அது, "மகா சிவராத்திரி' எனப்படுகிறது.
திருமாலை, "மகாவிஷ்ணு' என்பது போல சிவனை, "மகாசிவன்' என்பதில்லை. ஆனால், அவருக்கு விருப்பமான இரவு பொழுதுக்கு, "மகா' என்ற அடைமொழி சேர்த்துள்ளனர். இதற்கு காரணம் உண்டு.
சிவனுக்கு பல திருநாமங்கள் உண்டு. அதில் எட்டு மிக உயர்ந்தது. அதில் ஒன்று, "மகான்' என்பதாகும். பவன், சர்வன், ஈசானன், பசுபதி, ருத்ரன், உக்ரன், பீமன் ஆகியவை மற்ற பெயர்கள்.
கோவில்களில் சிவனுக்கு சிறப்பு பூஜை நடக்கும் போது, அஷ்டோத்திரம் எனும், 108 நாமங்களால் அர்ச்சிப்பர். இதில், கடைசி நாமம், "மஹதே தேவாய நமஹ!' இதையே, "மகாதேவன்' என்கின்றனர்.
பெரும்பாலான கோவில்களின் மூலஸ்தானத்தில் சிவன், லிங்க வடிவமாக இருக்கிறார். இந்த லிங்கத்தைக் கூட, "மகா லிங்கம்' என்பர். சிவனுக்கு ஏன் லிங்க வடிவம் தரப்பட்டது என்பதற்கும் காரணம் உண்டு.
"லிங்கம்' என்னும் சொல்லுக்கு, "அடையாளம்' அல்லது "அறிகுறி' என்று பொருள். விஷ்ணு, அம்பாள், முருகன் உள்ளிட்ட பிற தெய்வங்களுக்கு கண், காது, மூக்கு, வாய் என, எல்லா உறுப்புகளும், மனிதர்களைப் போலவே இருக்கிறது. ஆனால், லிங்கம் ஒரு நீள் வட்ட வடிவமாக இருக்கிறது. நாம் வானத்தை அண்ணாந்து பார்க்கிறோம். அதன் நான்கு மூலைகளையும் பார்த்தால் ஒரு வளைவு இருப்பதைப் பார்க்கலாம். இந்த பிரபஞ்சம் வளைந்திருப்பது போல, லிங்கமும் வளைந்துள்ளது. ஆக, பிரபஞ்சமே சிவனின் வடிவம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதனால் தான் அவரை, "மகேஸ்வரன்' என்றும் சொல்வர்.
மகேஸ்வரன் என்ற சொல்லுக்கு, ஆட்சி செலுத்து பவன், திமான் தலைவன் என்ற அர்த்தங்கள் உண்டு. ஈஸ்வரனை, "ஈச்வரன்' என்றே உச்சரிக்க வேண்டும். "ஈச்' என்றால், "உரிமை' என்று அர்த்தம். ஆக,"ஈஸ்வரன்' என்ற சொல்லுக்கு, "உரிமையாளர்' என்று பொருள். இந்த உலகத்துக்கே உரிமையாளராக இருக்கிறார் சிவன். அந்த ஈஸ்வரனுக்கு, "மகா' என்னும் அடைமொழி சூட்டி, "மகேஸ்வரன்' என்று பெருமைப்படுத்தியுள்ளனர்.
சிவனை, "மகாசிவன்' என்று அழைப்பதற்கு பதிலாக, "சதாசிவன்' என்ற பெயரால் அழைப்பர். இந்த சொல்லுக்கு ஒரு ஸ்பெஷாலிட்டி உண்டு. மகா கணபதி, மகாலட்சுமி, மகாசாஸ்தா, முருகனுக்கு கூட, "மகாசேனன்' என்ற பெயர்களெல்லாம் உண்டு. ஆனால், சிவனுக்கு மட்டுமே, "சதா' என்ற சிறப்புச் சொல் உண்டு. வேறு எந்த தெய்வத்தின் பெயரிலும், "சதா'வைப் பயன்படுத்து வதில்லை. "சதா' என்றால், "எங்கும், எப்போதும்' என்று பொருள் கொள்ளலாம். எங்கும் சிவம், எதிலும் சிவம், எப்போதும் சிவம்' என்று சதாசிவத்தைப் பொருள்படுத்தலாம். 11 மற்றும் 25 தலைகள் கொண்ட சதா சிவத்தை, சில கோவில் கோபுரங்களில் பார்க்கலாம்.
சிவன் என்பது மிகப் பழமையான சொல்லாகும். உலகின் முதல் நூல் என புகழப்படும் ரிக் வேதத்தில், "சிவ' நாமம் வருகிறது. அமரகோசம் என்ற சமஸ்கிருத அகராதியில், "சிவம்' என்றால் கல்யாணம், மங்களம், பத்ரம்(சுபம்) என்ற அர்த்தங்கள் சொல்லப்பட்டுள்ளன. இந்த வார்த்தைகளை உற்று நோக்கினால் நன்மை, மகிழ்ச்சி, சவுக்கியம், லட்சுமிகரம் என்றே பொருள் கொள்ளலாம். இவை அனைத்துக்கும் அடிப்படை அன்பு. அன்பிருக்கும் இடத்தில் தான் இவை அனைத்தும் இருக்கும். இதனால் தான், "அன்பே சிவம்' என்கின்றனர்.
கலியுகத்திற்கு மிகவும் தேவையானது அன்பு. சிவனை வணங்கினால் அன்பு ஊற்றெடுக்கும். சிவராத்திரி நன்னாளில், பிறர் மீது அன்பு செலுத்த உறுதியெடுப்போம்.

தமிழில் குரான் அருமையான இலவச மென்பொருள்

Posted On Feb 19,2012,BY Muthukumar

முஸ்லீம் நண்பரின் புராஜக்ட் ஒன்றுக்காக வலையில் மேய்ந்த போது அருமையான மென்பொருள் ஒன்று கிடைத்தது. இஸ்லாமியர்களின் புனித நூலான குரான், சிறப்பாக மென்பொருள் வடிவத்தில் அமைக்கப் பட்டுள்ளது. Zekr என்ற இந்த மென்பொருள் நேர்த்தியான வடிவமைப்புடன் எளிதாகப் பயன்படுத்தும் படியும் இருக்கிறது.

இந்த மென்பொருளின் மூலம் குரானை எளிதாகப் படிக்கலாம். சூராக்கள் (அத்தியாயங்கள்), ஆயத்துகள் வழியாக குறிப்பிட்ட வசனத்தைத் தேடலாம். சுராக்கள், ஆயத்துகளை முன்னோக்கி பின்னோக்கி செல்லலாம். குறிப்பிட்ட பக்கங்கள் வழியாகவும் தேடலாம். பிடித்த வசனங்களை புக்மார்க் செய்து கொள்ளலாம். மேலும் அனைத்து வசனங்களையும் ஆடியோ வடிவில் கேட்க முடியும். குரானை பல மொழிகளில் படிக்கவும் முடியும். மேலும் இந்த மென்பொருளை முற்றிலும் தமிழ் உள்பட சில மொழிகளில் பயன்படுத்த முடியும்.
இந்த மென்பொருளை கீழே உள்ள சுட்டியில் சென்று தரவிறக்கவும்.
http://zekr.org/quran/
இந்த மென்பொருளைப் பயன்படுத்த Java Runtime Environment தேவைப்படும். இல்லாதவர்கள் கீழே சென்று தரவிறக்குங்கள்.
http://www.filehippo.com/download_jre_32/

இந்த மென்பொருளில் இயல்பாக ஆங்கிலம் மற்றும் குறிப்பிட்ட மொழிகளில் குரானைப் படிப்பதாக இருக்கிறது. உங்களுக்கு தமிழ் மற்றும் பல மொழிகள் வேண்டுமானால் கீழே சென்று தரவிறக்க வேண்டும். அதாவது இவையெல்லாம் குரானை Translation செய்து காட்டும்.

தமிழ் மொழிக் கோப்பு - http://tanzil.net/trans/ta.tamil.trans.zip
பிற மொழிகளுக்கு - http://zekr.org/resources.html

பின்னர் இந்த மென்பொருளில் Tools->Add->Translation என்பதில் சென்று தரவிறக்கிய கோப்பைத் தேர்வு செய்தால் நீங்கள் தமிழில் குரானைப் படிக்கலாம். View->Layout இல் சென்று Mixed என்று வைத்துக் கொண்டால் மென்பொருளில் உருது மற்றும் தமிழில் குரானை எளிதாகப் படிக்கலாம்.
Tamil User Interface

இதன் இடைமுகத்தையும் தமிழிலிலேயே காணவும் பயன்படுத்தவும் முடியும். இதற்கு Tools மெனுவில் options செல்லவும். அதில் language என்பதில் தமிழைத் தேர்வு செய்தால் தமிழிலேயே இந்த மென்பொருளைப் பயன்படுத்தலாம்.
இந்த மென்பொருள் இஸ்லாமிய நண்பர்கள் மட்டுமின்றி குரானைப் பற்றித் தெரிந்து கொள்ள நினைப்பவர்கள் கண்டிப்பாகப் பயன்படுத்திப் பார்க்க வேண்டிய மென்பொருள்.


உனக்குள்ளே நிம்மதி

Posted on Feb 19,2012,By Muthukumar

`தேடுங்கள்; கண்டடைவீர்கள்' என்பது ஏசுநாதர் வாக்கு.
`எங்கே நிம்மதி? அங்கே கிடைக்குமா? இங்கே கிடைக்குமா?' என்று தேடினால் நீங்கள் காணமாட்டீர்கள்.
அது உங்கள் உள்ளத்துக்கு உள்ளேயே ஒளி மயமாக நிற்கிறது.
பாண்டவர்களும், வனவாசம் புரிந்தார்கள்; ராமனும் வனவாசம் சென்றான்; தேவர்களும் ஒளிந்து வாழ வேண்டியிருந்தது.
கேட்பவர்களுக்கெல்லாம் வரம் கொடுத்த சிவபெருமானுக்கும் நிம்மதியற்ற காலம் இருந்தது.
நிம்மதிக் குறைவு என்பது எல்லோருக்கும் ஒரு நாள் வந்தே தீர்கிறது.
பணக்காரனாயினும், ஏழையாயினும் வாழ்க்கைப் பயணத்தில், ஏதோ ஒரு சக்கரத்தில் காலைக் கொடுத்து விடுகின்றான்; கொஞ்சக் காலம் அவனை வாட்டி எடுக்கிறது.
ஜீரணிக்கத் தெரிந்தவனுக்கு மலை கடுகளவு; அது தெரியாதவனுக்கு கடுகு மலையளவு.
கொஞ்சம் மெளனத்தைக் கடைப்பிடியுங்கள். அதில் ஒருவகை நிம்மதியுண்டு.
`மெளனம் கலக நாஸ்தி' என்பார்கள்.
அளந்து பேசி, அளந்து வாழ்கிறவனுக்கு அதிகபட்ச ஆசை கிடையாது.
ஆசை குறையக் குறையத் துன்பமும் குறைந்து போகிறது.
வாழ்க்கை கட்டுக்குள் வந்தால், மனமும் கட்டுக்குள் வந்து விடுகிறது; துன்பமும் கட்டுக்குள் நின்று விடுகிறது.
எதுவும் அளவு கடந்து போகும்போதுதான் ஒரு எதிரொலியைக் கொண்டுவந்து காட்டுகிறது.
இருட்டு வெளிச்சம், இன்பம் துன்பம் இரண்டையும் சமமாகக் கருதும்படி பகவான் கீதையிலே போதித்தான்.
பகலிலே, குருடனுக்கும் கண் தெரியும். ஆனால், இருட்டிலே எவனுக்குக் கண் தெரிகிறதோ அவனே ஞானி.
முதுகு சொரணையற்றுப் போய் எவனுக்கு வலி தெரியாமல் போய் விடுகிறதோ, அவனே நிம்மதியடைந்தவன்.
`உடம்பிலுள்ள எல்லா வாசல்களையும் செம்மையாக அடக்கி, மனத்தை உள்ளேயே நிலை நிறுத்தி, உயிரை அறிவோடு நன்றாக நிலைநாட்டித் தியானத்தைக் கைக்கொண்டு என்னையே நினைத்தவனாய் எவன் தன்னை மறந்து விடுகிறானோ, அவன் பரம்பொருளை அடைகிறான்' என்கிறான் பகவான் கீதையிலே.
நீங்கள் பரம்பொருளை அடைகிறீர்களோ இல்லையோ... நிம்மதியை அடைகிறீர்கள்.
பகவத்கீதையிலே, `க்ஷேத்ரம்' பற்றியும் `க்ஷேத்திரக்ஞன்' பற்றியும் பேசப்படுகிறது.
`க்ஷேத்திரம்' என்பது உடல், `க்ஷேத்திரக்ஞன்' என்பது உயிர்.
எது நிம்மதி இழக்கிறது? க்ஷேத்திரமா? க்ஷேத்திரக்ஞனா?
உடலுக்கு நிம்மதி இல்லையென்றால், மருத்துவன் உண்டு. உயிருக்கு நிம்மதி இல்லையென்றால் நீங்களே மருத்துவர்கள்.
கட்டிக் கொடுத்த சோறும், சொல்லிக் கொடுத்த புத்தியும் தலைமுறைக்கு வரமாட்டா.
இந்த நூலில் கண்டபடி, நீங்கள் நடந்து கொண்டு விட்டாலும் கூட, உங்களை நீங்களே வாதித்துக் கொண்டிருந்தால் நெஞ்சுக்கு நிம்மதி வராது.
ஆன்மாவின் சொரூபத்தை உணர்ந்து. அதன் இயக்கத்திற்கு ஒத்துழைப்பதுதான் தேகம் என்பதை அறிந்து ஒழுங்காக இயங்கினால், நிம்மதி நெஞ்சுக்குள்ளே இருப்பதைக் காணலாம்.
அது ஒன்றும் கடையில் விற்கும் கத்திரிக்காய் அல்ல... வசதியுள்ளவன் வாங்கிக் கொள்வதற்கு!
மீண்டும் சொல்கிறேன், மனசுதான் காரணம்.
ஒன்றைச் `சரி' என்று நினைத்து விட்டால் மனசு நிம்மதியடைகிறது. `தவறு' என்று நினைத்து விட்டால் மனசு தாவிக் குதிக்கிறது.
அதனால்தான், `நடப்பதெல்லாம் நன்மைக்கே' என்கிறார்கள்.
நல்ல மனைவியின் மேல் சந்தேகப்பட்டே, வாழ்க்கையை அழித்துக் கொண்டவர்களும் உண்டு.
மோசமான மனைவியையே முழுக்க நம்பி, நிம்மதியாக வாழ்ந்து முடித்தவர்களும் உண்டு.
பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்துப் புத்தி கெட்டு அலைந்தவர்களும் உண்டு; இருநூறு ரூபாய்ச் சம்பளத்தில் இணையற்ற அமைதி கண்டவர்களும் உண்டு.
அழுக்கு வேட்டியைத் துவைத்துக் கட்டுவதிலே ஆனந்தம் அடைந்தவர்களும் உண்டு; சலவை வேட்டியிலும் சரிகை இல்லையே என்று சலித்துக் கொண்டவர்களும் உண்டு.
மனது எந்த ஒன்றைக் காண்கிறதோ அப்படியே ஆகிவிடுகிறது.
அற்புதம் என்று அது முடிவு கட்டிவிட்டால், அது அற்புதமாகவே ஆகிவிடுகிறது.
மோசம் என்று தோன்றி விட்டால், மோசமாகவே காட்சி அளிக்கிறது.
பல நேரங்களில் மனது, தன் கணக்கை மாற்றிக் கொள்கிறது. நானே முதற் கட்டத்தில் ஒருவரைப் பற்றிப் போடுகிற கணக்கை மறு கட்டத்தில் மாற்றிக் கொண்டிருக்கிறேன்.
மாறுதல் மனிதன் இயற்கை. அதில் இன்பம் தோன்றும்போது உடனடியாக நிம்மதி.
`இந்தப் பேரிடியை என்னாலே தாங்கவே முடியாது' என்று சில சமயங்களில் சொல்கிறோம். ஆனாலும், நாம் உயிரோடு தான் இருக்கிறோம்.
காரணம் என்ன? மனசு, வேறு வழி இல்லாமல் அதைத் தாங்கிவிட்டது என்பதே பொருள்.
உலகத்தில் எது தவிர்க்க முடியாதது?
பிறந்த வயிற்றையும் உடன் பிறப்புகளையும்தான் மாற்ற முடியாதே தவிர, பிற எதுவும் மாற்றத்திற்குரியதே.
நானே சொல்லி இருக்கிறேன்... `ஜனனத்தையும் மரணத்தையும் தவிர அனைத்துமே மறுபரிசீலனைக்குரியவை' என்று.
மனைவியை மாற்றலாம். வீட்டை மாற்றலாம்; நண்பர்களை மாற்றலாம்; தொழிலை மாற்றலாம். எதையும் மாற்றலாம்.
மாறுதலுக்குரிய உலகத்தில் நிம்மதி குறைவதற்கு நியாயம் என்ன?
மனது நம்முடையது; நாம் நினைத்தால் அதை மாற்றிக் கொள்ளலாம்.
நமக்கு முன்னால் வாழ்ந்து செத்தவர்களெல்லாம், ஆயுட் காலம் அமைதியாக இருந்து செத்தவர்களல்ல.
இனி வரப் போகிறவர்களும், நிரந்தர நிம்மதிக்கு உத்தரவாதம் வாங்கிக் கொண்டு வரப் போகிறவர்களல்ல.
`அவரவர்க்கு வாய்த்த இடம்
அவன் போட்ட பிச்சை;
அறியாத மானிடர்க்கு
அக்கரையில் பச்சை'
எந்த துன்பத்திலும் சிக்கிக் கொள்ளாதீர்கள்.
மனத்தை எளிமையாக வைத்திருங்கள்.
கவலைகளற்ற ஒரு நிலையை மேற்கொள்ளுங்கள்.
நிரந்தரமான நிம்மதிக்கு ஈஸ்வரனை நாடுங்கள்.
`நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி
நினைத்தால் எல்லாம் உனக்குள்ளே!'

Thursday, February 16, 2012

தூக்கத்தில் நிம்மதி- கவியரசு கண்ணதாசன்

Posted On Feb 16,2012,By Muthukumar
`தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே- அந்தத் தூக்கமும் அமைதியும் நானா னால்...' என்றொரு பாடலைக் கேட்டிருப்பீர்கள்.
இது ஷேக்ஸ்பியர் வரிகளின் தமிழாக்கம்.
ரோமியோ ஜுலியட்டில்...
Sleep Dwell upon Thine Eyes
peace in Thy Breast
Would I were Sleep and Peace
So Sweet to Rest
`தூங்குவது போலும் சாக்காடு; தூங்கி
விழிப்பது போலும் பிறப்பு' - என்றான் வள்ளுவன்.
தூக்கத்தில் கிடைக்கும் மயான அமைதி வேறு எதிலே கிடைக்கப் போகிறது! அது கவலைகளை மூடி வைக்கிறது! கண்ணீரை ஒத்தி எடுக்கிறது; நாளையப் பொழுது பற்றிய கேள்விக் குறிகளை நிறுத்தி வைக்கிறது.
மானிட தர்மத்தை ஒழுங்காக நிறைவேற்றவே, மனிதன் அடிக்கடி தூங்கித் தூங்கி விழித்து எழுகிறான்.
நோயாளியைக் கேள்வி கேட்கும் டாக்டர், `தூக்கம் வருகிறதா? பசி எடுக்கிறதா?' என்று இரண்டு கேள்விகளைத் தானே கேட்கிறார்.
உறக்கம் கெட்டவன் வாழ்க்கையே நரகம்.
தலையணைக்குக் கீழே துயரங்களைப் புதைத்து வைத்துக் கொண்டு, திரும்பிப் படுப்பவனுக்கு வேறு எந்த வகையிலே நிம்மதி?
மாத்திரை சாப்பிட்டுத் தூங்குகிறவன், கவலைகளைச் சாகடிக்கவில்லை; நரம்புகளைச் சாகடிக்கிறான்.
மரணம் இறுதியாக வரும்வரை, வாழ்க்கையின் மூன்றில் ஒரு பகுதி தூக்கமாக இருக்க வேண்டும்.
அதற்கென்ன வழி?
`வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?'
- பாடு; தூங்கிவிடு.
செத்துப் போனால் யாரும் கூட வரப் போவதில்லை; இருக்கின்ற காலத்தில் துடிப்பென்ன? திகைப்பென்ன?
நடப்பது நடக்கட்டும்; நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து விடு; நிம்மதியான தூக்கம் வரும்.
எப்படிப் படுத்தால் தூக்கம் வருமோ அப்படிப் படு.
ஆனால், ஆடவன் குப்புறப் படுத்தாலும் படுக்கலாம்; பெண் மல்லாந்து படுக்கக் கூடாது; ஒருக்களித்துத்தான் படுக்க வேண்டும்.
அதனையும் முந்திய அத்தியாயத்தில் சொன்னபடி இடது கையில்தான் படுக்க வேண்டும். அப்போதுதான் இதயம் சுகமாக இயங்கும். சுவாசம் லகுவாக வெளிவரும்.
தூக்கத்தில் கனவே வரவில்லையென்றால் மிகவும் நல்லது; அது ஆழ்ந்த தூக்கம்.
ஆழ்ந்த தூக்கத்தின் மறுபகுதி தான் கனவு வருவது.
மேலே உத்திரம் உள்ள வீடாக இருந்தால், உத்திரத்துக்கு நேரே தலையை வைக்காதே; கனவு வரும்.
தலையணைக்கு அடியில் கொஞ்சம் விபூதியோ, குங்குமமோ வைத்துக் கொண்டு படு; கெட்ட கனவு வராது.
படுக்கப் போகும்போது பூஜை செய்துவிட்டுப் படு; பயமோ கவலையோ இருக்காது.
யாரையும் திட்டிவிட்டு, அதே கோபத்தோடு போய்ப் படுக்காதே; தூக்கம் வராது.
சாப்பிட்ட பிறகு, கொஞ்சம் குறுநடை போட்டுப் படு; தூக்கம் வரும்.
பக்கத்தில் நண்பனோ, மனைவியோ படுத்திருந்தால், நல்ல விஷயங்களைப் பேசிக் கொண்டே படு; தூக்கம் வரும்.
எந்தக் காரணம் கொண்டும், இரவிலே மணிக்கு மணி அடிக்கும் கடிகாரம் வைக்காதே; அது தூக்கத்தைக் கெடுப்பதற்கென்றே கண்டு பிடிக்கப்பட்டது.
சுகமான மிருதுவான சங்கீதத்தைக் கேட்டுக் கொண்டே படு; தூக்கம் வந்து விடும்.
மலேசியாவில் `கோங்கான் கீரை' என்றொரு கீரை இரவிலே தரப்படுகிறது. அதை மட்டும் காலை - இரவிலே சாப்பிடலாம்; அதைச் சாப்பிட்டு விட்டுத் தூங்கினால் எந்த இடிச் சத்தமும் எழுப்பாது.
வாயுப் பதார்த்தங்களை இரவிலே சாப்பிடாதே; நள்ளிரவில் அது வயிற்றைப் புரட்டும்.
நான் இருபத்தெட்டு வருஷங்களாக இரவிலே இட்லி அல்லது தோசைதான் சாப்பிடுகிறேன்.
அண்மையில் ஒரு நாள், சாப்பாடு சாப்பிட்டுப் பார்த்தேன்; அன்று சுகமாக தூக்கம்! காரணம் அதில் உளுந்து இல்லை.
சர்க்கரை வியாதி இல்லாதவர்கள், தேங்காய்ப் பாலும் ஆப்பமும் சாப்பிட்டுவிட்டுப் படுக்கலாம். தேங்காய்ப் பாலிலுள்ள மதமதப்பில் நல்ல தூக்கம் வரும்.
சட்டையோ, பனியனோ, போட்டுக் கொண்டு இரவிலே தூங்கக் கூடாது. பூச்சிகள் உள்ளே போனால் ஒரு தடவைக்கு மூன்று தடவை கடிக்கும்.
என்னதான் குளிரடித்தாலும் சடலத்தை மூடுவது போல் உடலை மூடிக் கொள்ளக் கூடாது; மூக்கு மட்டும் வெளியே சுத்தமான காற்றைச் சுவாசிக்க வேண்டும்.
இரவிலே படுப்பதற்கு முன், பால் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் நான்கு வெள்ளைப் பூண்டுப் பற்களைக் கடித்துத் தின்று விட்டுப் பால் குடிக்க வேண்டும்.
அதனால் வயிற்றில் இருக்கும் வாயு பகவான், காலையில் தன் மூதாதையர்களோடு ஐக்கியமாகி வெளியேறி விடுகிறான்.
அமுங்கி அமுங்கி `ஜோல்ட்' அடிக்கும் மெத்தையில் யாரும் படுக்கக் கூடாது.
உடம்பின் நடுப்பகுதி தாழ்ந்தும், மேலும் கீழும் உயர்ந்தும் இருந்தால் புரண்டு படுப்பது சிரமம். அதனால் அடிக்கடி விழிப்பு வரும்.
வழுவழுப்பான தரையில் பாயை விரித்துப் படுப்பது வெகு சுகம்.
எங்கள் கிராமங்களில் பர்மாவில் இருந்து ஒரு பாய் வாங்கி வருவார்கள். `பர்மாப் பாய்' என்று. மகாராஜாக்களின் மெத்தைகள் எல்லாம் அதனிடம் பிச்சை வாங்க வேண்டும்.
இப்போது `பத்தமடைப் பாய்' ஓரளவு அந்த நிலையில் இருக்கிறது.
வசதி உள்ளவர்கள், கடம்ப மரக் கட்டிலில் பாய் இல்லாமல் படுத்தால், உடம்பு வலியெல்லாம் தீர்ந்து விடும்.
வெட்ட வெளியில் படுக்கிறவர்கள், வேப்பங் காற்றில் படுக்க வேண்டும்.
இப்போது வேப்ப மரங்களே குறைந்து வருகின்றன. தோட்டம் உள்ளவர்கள் வேம்புகளை நட்டு வையுங்கள்.
இரவில் படுக்கும் போது, `ஆலிவ் எண்ணெய்' என்று ஒரு எண்ணெய் இருக்கிறது. அதை முகத்தில் தடவிக் கொண்டு படுத்தால் காலையில் களை இழந்த முகம் கூடப் பிரகாசமாக இருக்கும்.
சினிமா நடிகைகள் முகத்தைக் கழுவும் போது அந்த எண்ணெய் போட்டுத்தான் கழுவுகிறார்கள். அதனால் `கருப்பி சிவப்பி' யாகத் திகழ்கிறார் கள்.
எல்லாவற்றிற்கும் மேலாகச் சாயங் காலத்தில் மூன்று மைல் நடந்தோ, நன்றாக விளையாடி விட்டோ, குளித்துவிட்டுச் சாப்பிட்டு விட்டுத் தூங்குங்கள்; ஒரு பயலையும் கேட்க வேண்டாம்.
காலையில் விழிக்கும் பொழுது யார் முகத்திலும் விழிக்க விரும்பாவிட்டால், விழிக்கும்போது இரண்டு உள்ளங் கைகளையும் நன்றாகச் சூடேற்றி முகத்தில் தேய்த்து விட்டு அந்தக் கைகளைப் பாருங்கள்; அதுவே ஒரு சூரிய நமஸ்காரம்.

Monday, February 13, 2012

தகுதியானவர்களுக்கு உதவுங்கள்!-பிப். 18 – காரியார் குருபூஜை!

Posted On Feb 13,2012,By Muthukumar
நாம் படிப்பது, கை நிறைய சம்பாதிக்க மட்டுமல்ல, தனக்குப் போக மிஞ்சியதை, தகுதியானவர்களுக்கு தர்மம் செய்வதற்கும் தான்! இதை, தன் வாழ்க்கையில் நிரூபித்துக் காட்டியவர், காரியார் எனும் புலவர்.
திருக்கடையூர் எனும் திருத்தலத்தை அறியாதவர்கள் மிகக்குறைவே. அபிராமி பட்டர் என்பவர், இங்குள்ள அமிர்தகடேஸ்வரர் கோவிலில் அருள்பாலிக்கும் அம்பாள் அபிராமியின் பக்தர், கோவிலில் பணி செய்து வந்தார். ஒரு கட்டத்தில், அம்பாள் மீது கொண்ட பக்தியால் பித்துப் பிடித்தவர் போல் ஆகி விட்டார். அவரது நடவடிக்கையில் சிலர், அதிருப்தி கொண்டனர்.
ஒரு சமயம், சரபோஜி மகாராஜா கோவிலுக்கு வந்தார். அப்போது, அம்பாளின் திருமுகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பட்டருக்கு, அது பூரண சந்திரன் போல் இருப்பதை உணர்ந்தார். அம்பாளின் அழகில் லயித்துப் போய் அமர்ந்திருந்தார். அந்த நேரத்தில், சரபோஜி மகாராஜா அங்கு தரிசனத்துக்காக வந்தார். ஒவ்வொரு அமாவாசை திதியன்றும், அவர் அம்பாளை தரிசிக்க வருவது வழக்கம். அவர் வந்ததைக் கவனிக்கவில்லை பட்டர்.
அங்கே இருந்தவர்கள், "நீங்கள் வந்தும், எழுந்து நின்று மரியாதை செய்யாமல் இருப்பதைக் கவனித்தீர்களா! உங்களுக்கே இந்தக் கதி என்றால், இங்கிருக்கும் மற்றவர்களை இவன் கவனிப்பானா! அம்பாளின் தீவிர பக்தர் போல காட்டிக் கொண்டு, ஒரு பணியும் செய்யாமல் இப்படியே <உட்கார்ந்திருக்கிறான்...' என்றனர்.
பட்டரிடம், "பட்டரே... என்ன செய்கிறீர்கள்? நான் வந்ததைக் கவனிக்கவில்லையா? இன்று என்ன திதி என்று தெரியும் தானே...' என்றார் மகாராஜா.
அம்பாளின் முகத்தை நிலவாகக் கற்பனை செய்து கொண்டிருந்த பட்டர், மன்னர் வந்திருப்பதைப் பார்க்காமலேயே, "இன்று பவுர்ணமி' என்றார். மன்னருக்கு கோபம் வந்து விட்டது.
"இன்று இரவு நிலா வராவிட்டால், உமக்கு தண்டனை அளிப்பேன்...' எனச் சொல்லி, சென்றார். அன்றிரவு, தன் காதணியைக் கழற்றி, வானில் எறிந்து, நிலாவாக ஒளிரச் செய்தாள் அம்பாள்.
இந்தக் கோவிலில் தான் சிவபெருமான் அமிர்தகடேஸ்வரர் என்ற பெயரில் அருளுகிறார். மார்க்கண்டேயனை, மரணத்தில் இருந்து காப்பாற்ற, எமனை எட்டி உதைத்த ஊர் இது. இந்த சிவனின் அரும்பெரும் பக்தரே காரியார். இவர் பெரும் புலவர். பல சிவத்தலங்களுக்கு திருப்பணி செய்து வந்தார். புதிய கோவில்கள் கட்டவும் ஏற்பாடு செய்தார். அமிர்தகடேஸ்வரர் மீது, அருமையான பாடல்களை இயற்றியவர். இன்னும் பல நூல்களை எழுதிய இவர், சிவனைப் புகழ்ந்து, தன் பெயரால், "காரிக்கோவை' என்ற நூலை எழுதினார்.
அக்காலத்தில், நூல்களை மன்னர்களிடம் வாசித்து காட்டுவது புலவர்களின் வழக்கம். மன்னர்களும் அவற்றுக்காக பரிசுகளை வாரிக் கொடுப்பர். காரியாரும், தன் கோவை நூலை சேர, சோழ, பாண்டிய மன்னர்களிடம் வாசித்துக் காட்டினார். எல்லா நாட்டு மன்னர்களும், அந்நூலில் பொதிந்திருந்த கருத்துக்களை பாராட்டினர்.
ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல என்ற வகையில், காரியாருக்கு பொன்னையும், பொருளையும் அந்த மன்னர்கள் வழங்கினர். அவர், தனக்காகவோ, குடும்பத்துக்காகவோ அதைச் செலவழிக்கவில்லை. சிவன் கோவில் திருப்பணிகளுக்கு வழங்கினார். மேலும், ஏழைகளுக்கும், சிவனடியார்களுக்கும் வழங்கினார்.
தகுதியானவர்களுக்கு செய்யப்படும் தானம், அதைப் பெறுபவர்களுக்கு மட்டுமின்றி, நாட்டுக்கும் பயன்படும். ஒரு ஏழை மாணவனுக்கு தானம் செய்தால், அவன் குடும்பம் மட்டுமின்றி, நாட்டுக்கும், அவன் நன்மை செய்ய ஏதுவாக இருக்கும். அடியார்களுக்கு வழங்கினால், கோவில், குளங்கள் நன்மை பெறும். அதன் மூலம் அன்பும், பக்தியும் தழைக்கும்.
இவ்வாறு காலம் முழுக்க, தன் புலமைக்கு கிடைத்த பரிசுகளை, மற்றவர் நலனுக்காகவே செலவழித்தவர் காரியார். அந்த திருமகனாருக்கு மாசி பூராடம் நட்சத்திரத்தில், சிவாலயங்களில் குருபூஜை நடத்தப்படும். நாயன்மார் சன்னிதியில் இவர் வீற்றிருப்பார்.
இவரது குருபூஜை நன்னாளில், நாமும் தகுதியானவர்களுக்கு தானம் செய்து, அபிராமி மற்றும் அமிர்தகடேஸ்வரரின் அருளைப் பெறுவோம்.

Sunday, February 12, 2012

வள்ளலார் ஒரு வாழ்வியல் சகாப்தம்

வள்ளலார் பிறந்த பிறகுதான் பயிர்ச் செடிகளுக்கும் ஒரு பாசமுள்ள அன்னை உண்டு என்று உலகுக்குத் தெரிந்தது. அக த்தே கருத்தும், புறத்தே வெளுத்த மனிதர் களை சகத்தே திருத்த தெய்வமாக பிறந்த வர்தான் வள்ளலார். ‘ஜுவகாருண்ய ஒழு க்கமே கடவுள் வழிபாடு, பசி நெருப்பை அணைப்பதே ஜுவகாருண்யம்’ என்ற புதி ய வேதத்தை தோற்றுவித்தவர். இந்தியா வில் 7 லட்சம் கிராமங்களில் வாழும் உயிர்களை காக்க தமிழகத்தில் அன்னதா னம், சம்போஜனம் என்ற விதைகளை முதலில் விதைத்தவர் வள்ளலார்தான். பொருளை அள்ளி அள்ளிக் கொடுத்த வள் ளல்களை விட அருளை அள்ளி அள்ளி வழங்கிய அருட்பிரகாசரை உலகமே வியப்புடன் பார்த்தது, பார்க்கிறது!
ஆன்மிகப் பேரொளி வள்ள லார் ராமலிங்கர் 1823 ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தே தி மாலை ஐந்தரை மணிக் கு, தென்ஆற்காடு மாவட்டம் மருதூரில் வசித்த இராமை யா-சின்னம்மை தம்பதியரு க்கு தோன்றினார். வள்ளலா ர் என்று அழைக்கப்படும் இராமலிங்க சுவாமிகள் ஞானி மட்டுமல்ல. சமுதாயத்தில் புரட்சிகரமான மாறு தல்கள் செய் யவே அவதரித்தார். இராமலிங்கர் குழந்தையாக இருந்த போதே, பெற்றோர் இறந்து விட்டனர். எனவே, இராமலிங்கரை அவருடைய தமையனார் சபா பதி வளர்த்தார். இராமலிங்கருக்கு பள்ளிப் படிப்பில் நாட்டம் இல் லை. சிறு வயதிலேயே இராமலிங்கருக்கு ஆன் மிக நாட்டம் அதிகம் இருந்தது. ஐந்து வயதிலேயே சந்தநயம் மிக்க பக்திப் பாடல்களை இனிய குர லில் பாட தொடங்கினார். சென்னை கந்தர் கோட் டத்தில் சரமாரி பொழியும் பாடலைக் கேட்டு, “ படிக்காதவன், முரட்டுப்பிள் ளை” என்று கருதிய சபாபதி இவற்றைக் கண்டு வியந்தார்.
வீட்டு மாடி அறையில் கண்ணாடி முன் விளக்கை ஏற்றிவைத்து அந்த வெளிச்சத்தில் படித்து வந்தார் இராமலிங்கர். அங்குதான், ஒன்பது வயதில் இராமலிங்கருக்கு ‘ஞானோதயம்’ கிடைத்தது. ‘ஒரு நாள், கண்ணாடியில் இருந்து அருட்சோதி கிளம்பி என்னை சூழ்ந் தது. இறையருளின் ஈடு இணையற்ற கருணையில் பரவசப்பட் டேன்’ என்று பக்தர்களிடம் தெரிவித்து ள்ளார், இராமலிங்கர்.
அண்ணன் சபாபதியின் ஆன்மிக சொற் பொழிவுகளின் போது உதவியாளராக செயல்பட்டு வந்தார் இராமலிங்கர். ஒரு நாள் இராமலிங் கரை சொற்பொழிவா ற்றக் கூறினார் சபாபதி. திருஞான சம் பந்தர் பற்றி இராமலிங்கர் சொற் பொழி வாற்றினார். மெய்மறந்த கூட்டம் ‘12 வய திலேயே அந்த ஞானமா!’ என போற்றி துதித்தது. பல பகுதிகளிலும் இராமலி ங்கரின் அருளுரைகள் தொடர்ந்தன.
வள்ளலார் பாதை: மக்கள் மனதில் வள்ளல் வள்ளலார் ஆனார். அவர் அருள்மனம் பல மதத்தினரும் கூடி வழிபடும் ஞானசபை ஆயி
வள்ள‍லார் தனது திருக்கரங்களால் ஏற்றிய அடுப்பு
ற்று. வடலூரில் வசிக்க ஆரம் பித்த இராமலிங்கர், 1867 மே 23 ல் ‘தர்மசாலை’யைத் தொ டங்கி ஏழை எளியோர்க்கு உணவு, மருத்துவ சேவை அளித்து அருளுரைகளையும் நிகழ்த்தி வந்தார். அங்குதான், இராமலிங்கரின் தெய்வீக சக் தி சித்து வேலைகளாகப் பொ ங்கி பிர வாகித்தது.
கவிஞர், சமூக சீர்திருத்தவா தி, மறுமுறை கண்ட வாசகம், ஜுவகாரு ண்ய ஒழுக்கம் என்ற நூல்களை இயற்றிய நூலாசிரியர், உரையாசிரியர், பதிப் பாசிரியர், போதாகாசிரியர், சித்த மருத்துவர், அருள் ஞானி, கல்வெட்டு ஆராய்ச்சியாளர், தமிழகத்தில் முதல் திருக்குறள் வகுப்பு நடத்தியவர், மும்மொழி கல்வியை கொண்டுவந்தவர், முதல் முதியோர் கல்விக்கு வித்திட்டவர் என்று பல சிறப்பு பெயர்களை பெ ற்றார்.
ஆழ்மன வழிபாடு, தியா னம் பற்றிய வழி காட்டுதல் கள் போன்றவை ‘வள்ள லார் பாதை’ என்று பிரசித்தி பெற ஆரம்பித்தது. அவரது பன்முக ஞானமும், முதன் மையும் நம்மை வியக்க வைக்கின்றன. 1867 ல் இராமலிங்க அடிகளாரின் பாடல்களை ‘திருஅருட்பா’ என்ற பெயரில் வெளியிட்டார் அவரது முதல் சீடரான வேலாயுத முதலியார்.
வள்ளலாரின் கொள்கைகள்: மதங்களின் மூன்று முக்கிய அம்சங் கள் தத்துவம், ஒழுக்கம், சடங்குகள். இவற்றில் மக்களிடம் மதவெறி யைத் தூண்டுவது சடங்குகளே எனக் கண்டு அவற்றை ஒதுக்கி, மனித இனங்களை இணைப்பது ஒழுக்க நெறியே என்பதை உணர் ந்து 1865 ஆம் ஆண்டு சமரச சன்மார்க்க சங்கத்தை வள்ளலார் நிறு வி னார். அதன்படி எல்லோரும் பின்பற்றக்கூடிய கொள்கைகளை யும், வாழ்க்கையின் ரகசியங்க ளையும் கூறினார்.
“நாம் எல்லா உயிர்களிடமும் அன்பாக இருக்க வேண்டும். உயிர்க் கொலை செய்தலும், புலால் உண்ணுதலும் கூடாது. சாதி, மதம், குலம் என்ற வேற்று மைகளை பார்க்கக் கூடாது. மக்கள் அனைவ ரும் ஒற்றுமை யுடன் வாழ வேண்டும். கொலை , கோபம், சோம்பல், பொய், பொறாமை, கடுஞ்சொல் கூடாது, பதட்ட ப் படக்கூடாது” என்பவை, இராமலிங்கரின் முக்கிய கொள்கைகள்.
அருட்பெருஞ்சோதி: இராமலிங்க சுவாமிகள் வடலூரில் தரும சா லை ஒன்றை அமைத்தார். அங்கே தினமும் அன்னதானம் செய்யும் வழக்கத்தைத் தொடங்கி வைத்தார். அது இன்றும் தொடர்கிறது.
1870ல் வடலூரில் மேட்டுக்குப்பம் கிராமத்தி ல், “சத்திய ஞானசபை” என்னும் கோவிலைப் புது முறையில் கட்டினார். அதனுள், விளக்கு ஒன்றும், விளக்கின் முன் கண்ணாடி ஒன்றை யும் கட்டினார். விளக்கின் முன் ஏழு திரைகள் வைத்து மறைக்கப் பட்டிருக்கும். இதனை ஒவ்வொன்றாக நீக்கிய பிறகு தோன்றும் விளக்கொளியை “அருட் பெருஞ்சோதி” ஆண்டவராகக் கருதி வழி படுமாறு மக்களை இராம லிங்க அடிகள் கேட்டுக் கொண்டார்.
1872 ஜனவரி 25 ல் ‘ஞானசபை’ துவக்கப்பட்டது. அதனுள்தான் இந்த
அருட்பெருஞ்சோதி, தனிப்பெருங்கருணை
“அருட்பெருஞ்சோதி”  உள்ளது. ஏழு மாயைகளை அகற்றினால் தெய் வீகப் பேரொளியைக் காணலாம் என்பதே தத்துவ விளக்கம்.
சத்மார்க்கம் என்ற வடமொழிச் சொல் லே தமிழில் சன்மார்க்கம் என உருமா றிற்று. சத் என்றால் நிலைத்திருப்பது, உண்மை என்று பொரு ள்படும். சன் மார்க்கம் என்பது எல்லா மதங்களும் கூறும் நிலையான, உண்மையான ஒழுக்கம். இச்சன் மார்க்க சமயம் கலப் பதற்கு, சுத்த மானது. எனவேதான் வள் ளலாரின் இயக்கம் சமரச, சுத்த சன் மார்க்க, சத்திய சங்கமாக மலர்ந்தது.
அதனால்தான் திருமணம் நடந்தும் முத லிரவு அன்றே மனைவியிடம் “உடல் மீதான ஆசையை ஒழித்து விடு. நான் சன்மார்க்கத்தை நாடு பவன். சிற்றின்பத்துக்கு அடிமையாக மாட்டேன்” என்றார். சன்மார்க்க த்தின் இரு கண்கள் அன்பும், அறிவும்தான். அன்பு முற்றிய நிலையில் அருளாகவும், அறிவு முற்றிய நிலையில் அறியாமை இரு ளை அகற்றும் சோதியாகவும் மலர் கிறது. இதுவே அருட்பெருஞ் சோதியாகும். இந்த அருட் பெரு ட்சோதியை வழிபடத் தேவை யானது தனிப்பெருங்கரு ணை, தயவு, தொண்டு, உயிர் இரக்கம் மட்டுமே.
மண்ணில் பிறந்த விருட்சம்: விக்கிரகங்களுக்கு முன்நின்று பரவ சமாகப் பாடி, அதற்காகப் படையல் செய்து, தான் செய்யும் பாவங் களுக்குப் பரிகாரமாக காசுகளை கொட்டிக் குவிப்பதுதான் பக்தி என்று இருக்கும் இக்காலத்தில் எல்லா உயிர்களிடத்திலும் கடவுள் இருப்பதை அறி வதே ஈசுவர பக்தியாகும் என்று பக்திக்கு புதிய பரிணாமத்தை கொடுத்தவர் வள்ளலார்.
வள்ளல் பெருமான் வறட்டு ஆத்திகரும் அல்ல. முரட்டு நாத்திகரும் அல்ல. இரண்டிற்கும் இடைப்பட்டவர். மனிதனை தினம் தினம் வதைக்கும், பயமுறுத்தும் பிணிகளில் ஒன்று பசிப்பினி, மற்றொ ன்று மரணப்பினி. இந்த இரண்டையும் எதிர்த்து குரல் கொடுத்தவர் வள்ளலார்.
ஜோதியில் கலந்தார்: தாம் 51 ஆவது வயதில் உலக வாழ்வை விட்டுச் செல்லப் போவதாக சீட ர்களிடம் கூறி, அவர்களைப் பக் குவப்படுத்தினார். மறைவதற்கு 3 மாதங்களுக்கு முன்பிருந்தே சாப்பிடும் உணவின் அளவைப் படிப்படியாக குறைக்கலானார். முடிவில் தேன் மட்டும் அருந்தினார்.
1874 ஜனவரி 30… அது, நள்ளிரவில் புனிதமான பூச நட்சத்திரம் உதி க்கும் புனிதநாள். இராமலிங்கர் அன்று நிகழ்த்திய சொற்பொழிவில், “அன்பர்களே! அருட்பெருஞ்சோதி எப்போதும் எரியும் படி பார்த்துக் கொள்ளுங்கள். இறைஜோதியுடன் ஐக்கியமா கப் போகிறேன். அறையை வெளியில் தாழ்ப்பா ள் போட்டு விடுங்கள். மீண்டும் கதவைத் திற க்கும்போது அறை காலியாக(இருந்தது) இருக் கும்” என அறிவித்தார். அறைக்குள் புகுந்து கத வை உட்புறமாகப் பூட்டிக் கொ ண்டார். அதிர்ந்த பக்தர்கள், சிறிது நேரம் கழித்து அறையைத் திற ந்தனர். உள்ளே அவர் இல்லை. மாயமாக மறை ந்திருந்தார்.
அடிகளாரின் மறைவு பற்றி அரசாங்கத்துக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அப்போது தென் ஆற்காடு மாவட்டக் கலெக்டராக இருந்த ஜே. எச். கார்டி ன்ஸ் மற்றும் சில அதிகாரிகள், டாக்டர் ஆகியோ ருடன் சென் று விசாரணை நடத்தினார். பின்னர் அவர் அரசாங்கத்துக்கு அவர் அனுப்பிய அறிக் கையில், “இராமலிங்கர், இறைவனோடு ஐக்கி யமாகி விட்டதாக அவர் மீது பக்தி கொண்டவர்கள் நம்புகிறார்கள். ஒரு மதத் தலைவர் பற்றி கருத்து வேற்றுமை எழுதுவது இயற்கை என்றாலும், அவருடைய பாடல்களைப் பொறுத்தவரை, அவை மிக உயர்தரமானவை” என்று குறிப்பிட்டுள்ளார்.
வள்ளலார் ஏற்றிவைத்த அருட்பெருஞ்சோதியு ம் அவர் தொடங்கிய ஆன்மிக மறுமலர்ச்சி சேவைகளும் இன்றும் ஒளி வீசிக் கொண்டிரு க்கின்றன. இவரது சேவையை கருத்தில் கொ ண்டு 2007 ஆகஸ்ட் 17 ல் அரசு வள்ளலார் தபால் தலையை வெளியிட்டு சிறப்பித்தது.
முடிவுரை: இறைவனுக்கு எப்படி முடிவுரை எழுத முடியும். இந்த சிறிய கட்டுரைக்கு மட்டு மே இது முடிவுரை. வள்ளலார் ஒவ்வோர் இதய த்திலும் நீக்கமற வாழ்ந்து வருகிறார். வீதி தோறும் தர்ம சாலைகள் தோற்றுவிதார். மரணத்தை ஒழுக்கத்தால், நித்திய கரும விதிகளா ல், சாகாக் கல்வியால், தத்துவ நிக்கிரகத்தால் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை உதயமாகி இருக்கிறது வள்ளலார் என்ற சகாப்தத் தால்.! மாணி க்க வாசகரிடம் உருகி ஞானப் பாதையில் நடந்து, சைவ சித்தாந்த எல்லைகளைக் கடந்து, சன் மார்க்கம் என் னும் சிகரத்தை தொட்டவர் வள்ளலார்.
சிந்தைக்கு அருட்பெருஞ்சோதி என்றார். செயலுக்கு தனிப் பெருங் கருணை என் றார். சிந்தையின் ஞானத்தை செயலின் சக்தியாக மாற்ற அவர் அமைத்தது சத்திய ஞானசபை. ஜுவகாருண்யமே கடவுள் வழிபாடு என்ற சத்தியவாக்கின் பிரதிபலி ப்பே அவரது சத்திய தருமச் சாலை. சாதி, மத, சமயம் கடந்த சன் மார்க்கப் பாதையே சமரச, சுத்த, சன்மார்க்க சத்திய சங்கம். இந்த சரணத்தை இயற்றியது வள்ளலார். இதுவரை யாரும் கூறாதது; வாழ்ந்து காட்டாதது.
உயிர்களிடத்து அன்பு செய், பசிபோக்கு, தயவுகாட்டு அவற்றுக்கு மனதாலும் தீங்கு நினைக்காதே என்ற வள்ளலாரின் புதிய சிந்தனை கள், புதிய கண்ணோட்டங்கள் உலகம் முழுவதும் பரவினால் தீவிர வாதம் மறையும்; பயங்கரவாதம் அழியும்; உல கம் செழிப்படையும்.!
.

சுமை தீர்ப்பார் சுப்பிரமணியர்!

Posted On Feb 12,2012,By Muthukumar
தைப்பூசத் திருவிழா, நம் சுமையை இறைவனிடம் ஒப்படைக்கும் நன்னாளாகத் திகழ்கிறது. வாழ்க்கையில் மனிதன், பல கஷ்டங்களை அனுபவிக்கிறான். அந்தக் கஷ்டத்தை சிலரிடம் சொல்லி, ஆறுதல் தேட முயற்சிக்கலாம். ஆனால், அந்த சிலர், எந்தளவுக்கு நம்பிக்கைக்கு உரியவர்களாக இருப்பர்... அவர்கள், நம் கஷ்டத்தையே அவர்களுக்கு சாதகமாக்கி, ஆதாயம் தேட முயற்சிக்கலாம்; கேலி செய்யலாம்.
ஆனால், கடவுள் அப்படியல்ல... கல்லாயிருந்தாலும்; கருணையோடு நம் குறையைக் கேட்பான். அவன் முன்னால் அமர்ந்து கண்ணீர்விட்டு, கவலையைத் தெரிவித்தால், நம் மனச்சுமை இறங்கி விடும். இதையே தான், முருக பக்தர்கள் காவடி எடுத்து கடன் தீர்க்கின்றனர். காவடியில் என்ன இருக்கிறது? பால், பன்னீர், சந்தனம், புஷ்பம், மீன் (மச்சகாவடி), பாம்பு (சர்ப்பக்காவடி), சேவல் ஆகியவற்றை காவடிச் சுமையாகக் கொண்டு செல்கின்றனர்.
ஒரு தண்டத்தில், இரண்டு புறமும் கலசம் அல்லது பானை கட்டி, அதனுள் அபிஷேகப் பொருட்களை இடுவர். சேவல் காவடியாக இருந்தால், அதை காவடியின் ஒருபுறம் கட்டி வைக்கின்றனர். இப்பொருட்களின் தாத்பர்யம் என்ன?
ஒரு உயிர் பிறந்ததும் தாயிடம் பால் குடிக்கிறது. சற்று வயதான பின், பசுவின் பால் குடிக்கிறது. இறப்பதற்கு முன், உயிர் வதைக்கும் போது, பால் ஊற்றுகிறோம். மறைந்த பிறகு, சதையிலும் பால் ஊற்றப்படுகிறது. "முருகா... என் பிறப்பு முதல், இறப்பு வரை சுமை தான். அச்சுமையை தாங்குபவனாக என்னுடன் வா...' என்றழைப்பதே பால் காவடி தத்துவம்.
"உலகத் துன்பங்களால் சூடேறிக் கிடக்கும் என் மனதின் சூட்டை தணித்து வை...' என, முருகனை வேண்டுவது, பன்னீர் மற்றும் சந்தனக்காவடி தத்துவம்.
"என் வாழ்க்கைப் பாதையில் மனைவி, குழந்தைகள், உற்றார், உறவினர் என, எத்தனையோ பேர் உதிரிப்பூக்களாய் வந்திருக்கின்றனர். என்னுடன் அவர்களையும் கரை சேர்...' என்று வேண்டுவது புஷ்பக்காவடி தத்துவம்.
"மீன் போல் பிறவிக் கடலில் கிடந்து தத்தளிக்கிறேன். கருடனைக் கண்டு மிரளும் பாம்பைப் போல், வாழ்க்கை என்னும் புற்றுக்குள் கிடந்து தவிக்கிறேன். இந்த பிறவியில் இருந்து என்னை மீட்டு, உன்னோடு சேர்த்துக் கொள்...' என்பது மச்ச, சர்ப்பக்காவடி தத்துவம்.
"விடியலுக்காக காத்திருக்கும் சேவல் போல், பிறவியாகிய இருளில் இருந்து, எனக்கும் எப்போது விடிவு காலம் வரும்?' என்று கேட்டு சேவல் காவடி எடுக்கிறோம்.
நம்மை மனக் கவலைகளில் இருந்து மீட்டு, சுமையை, தானே ஏற்றுக்கொள்ளும் கருணை தெய்வமாக விளங்குபவர் கந்தப்பெருமான்.
"கந்தன்' என்ற சொல்லுக்கு, "பகைவர்களின் பராக்கிரமத்தை வற்றச் செய்பவர்' எனப் பொருள் கூறுகிறது வடமொழி நிகண்டு. பகைவர் என்றால் எங்கோ வெளியில் இருந்து வருபவர் அல்ல; நம் மனமே நமக்குப் பகையாக இருக்கிறது; தேவையில்லாததை எல்லாம் சிந்திக்கிறது. இந்த மனப்பகைவனிடம் இருந்து, நம்மைக் காப்பவன் கந்தன்.
"கந்து' என்றால் "யானையைக் கட்டிப்போடும் தறி' என்று பொருள். <உயிர்கள் என்னும் யானைகளை, ஆசைகளில் இருந்து மீட்டு, அவர்களைக் கட்டிப் போடுபவன் என்பதால் அவர், "கந்தன்' ஆனார்.
"கந்து' என்ற சொல்லுக்கு, "பற்றுக்கோடு' என்ற பொருளும் இருக்கிறது. உயிர்கள் கந்தப்பெருமானை பற்றிக் கொண்டால், அவர்கள் பிறவிச் சுழலில் இருந்து மீள்வர்.
இந்த உலக வாழ்க்கை, மாயையானது; ஆனாலும், இங்கு கிடைக்கும் தற்காலிக சுகத்திற்காக, மனிதன் இதை விட மறுக்கிறான்; இறந்தாலும், மீண்டும் இங்கேயே வந்து பிறக்கிறான்.
கந்தப்பெருமானை மனதார வணங்குபவர்களுக்கு, இந்த துன்பம் இராது. அவர்கள் அந்தக் கந்தனுடனேயே கலந்து விடுவர்.
தைப்பூசத் திருநாளில் காவடி எடுத்து, முருகன் கோவில்களுக்கு செல்வோம். நம் மனச் சுமையை பெருமானிடம் இறக்கி வைப்போம்; நம் பணிகளைத் தொடர்வோம்; மற்றதை அவன் பார்த்துக் கொள்வான்.

புண்ணியம் செய்தால்…

Posted On Feb 12,2012,By Muthukumar
பிறவி ஜென்மம் நன்றாக அமைய வேண்டும் என்று எல்லாரும் விரும்புவர்; ஆனால், அவரவர் விருப் பப்படி அது அமைவதில்லை. காரணம், பூர்வ ஜென்ம பாவ - புண்ணியங்கள்.
புண்ணிய கர்மா செய்திருந்தால், அடுத்த ஜென்மாவில் குறை எதுவுமின்றி சுகமாக வாழலாம்; பாவ கர்மா செய்திருந்தால், ஏதோ ஒரு ஏழ்மையான இடத்தில் சில ஊனங்களுடன் பிறக்க வேண்டி இருக்கும். அப்போது தெய்வத்தை நிந்தித்து பயனில்லை.
சிறு வயதிலேயே சிலர் புத்திசாலிகளாகவும், சிலர் முட்டாள்களாகவும் இருப்பர். சிலர், உடல் ஊனத்தோடு பிறக்கின்றனர். இதற்கெல்லாம் காரணம், பூர்வ ஜென்ம பாவங்கள் தான்.
தங்கள் பிள்ளைகளை சரியானபடி வளர்த்து, பாவ- புண்ணியங்களைப் பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும்; பிள்ளைகளும், பூர்வ ஜென்மத்தின் பாவ, புண்ணியங்களுக்கு தகுந்தபடி பிறந்து வளரும்.
நாம் பூர்வ ஜென்மத் தில் செய்த பாவ, புண்ணியங்கள், நாம் மறு ஜென்மம் எடுக்கும் போது, அவைகளின் பலனை கொடுக்கிறது. இப்படிப் பட்ட பூர்வ ஜென்ம பாவ, புண்ணியங்களை சேர்த்து வைத்து, சஞ்சித கர்மா என்பதை அனுபவிக்க வேண்டும்.
இந்த சஞ்சித கர்மாவை, ஒரே ஜென்மத்தில் அனுபவித்து ஒழித்து விட முடியாது. இதில், ஒரு பாகம் மட்டுமே இந்த ஜென்மத்தில் அனுபவிக்க வேண்டும். இதற்கு, பிரார்த்த கர்மா என்று பெயர்.
ஒரு அசட்டுப் பிள்ளையைப் பார்த்து, "ஹூம்! எனக்குன்னு இந்த பிராப்தம் வந்திருக்கு பாரு...' என்கின்றனரே... அதுதான் சஞ்சித கர்மாவின் ஒரு பாகம். மீதியுள்ள பாகம், அடுத்து வரும் ஜென்மாக்களில் தொடரும். ஆனால், இந்த ஜென்மாவில் செய்யும் பாவ- புண்ணியங்களுக்கு, அனுமி கர்மா என்று பெயர். இந்த கர்ம பலன், சஞ்சித கர்மாவுடன் சேர்ந்து விடும்.
அதனால், சஞ்சித கர்மா எப்போதும் போல் குறையாமலே இருக்கும். நாம் அனுபவிப்பது பிராப்த கர்மாவின் பலன். நாம் செய்யும் நல்ல கர்மாவின் பலனை, அடுத்த ஜென்மத்தில் அனுபவிக்க வேண்டும். அதேபோல் பாவ கர்மா செய்திருந்தால், அதையும் அடுத்த ஜென்மாவில் அனுபவிக்க வேண்டியிருக்கும்.
புண்ணியமோ, பாவமோ எதைச் செய்தாலும் பலனை அனுபவிக்கத் தான் வேண்டும். அதனால் தான், "பாவத்தை செய்யாதே...' என்கின்றனர். ஆனால், சுயலாபத்துக்காக பாவங்களை செய்கின்றனர்.
"வேண்டாம்டா... இது மகா பாவம்; இதைச் செய்யாதே...' என்றால் கேட்பதில்லை. பாவ காரியங்களை செய்வதில் ஒரு சந்தோஷம். இந்த பாவங்களில், பரிகாரமே இல்லாதது பஞ்ச மகா பாவங்கள்.
அதனால், "வாழ்க்கையில் எந்தவித பாவமும் செய்யாதே...' என்கின்றனர். ஒரு ஜீவனுக்கு ஏதாவது துன்பம் செய்தாலும் அது பாவம்; அதற்கான பலனை அனுபவிக்க வேண்டும் என்றுள்ளது.
எதையெல்லாம் செய்தால் புண்ணியம்; எதையெல்லாம் செய்தால் பாவம் என்று சாஸ் திரங்களில் சொல்லப்பட்டுள்ளன.
கூடுமான வரையில் அவைகளை தெரிந்து, வாழ்க்கையை நடத்தினால் நல்லது; பாவத்தை செய்து பரிகாரம் தேட வேண்டாம்; கடவுளுக்கு பயந்து நடக்க வேண்டும்!