Tuesday, June 9, 2015

தேவேந்திரன் துதித்த மகா லக்ஷ்மி அஷ்டகம்


Posted By Muthukumar,On June 9,2015

தோத்திரப்பாக்கள் அர்த்தம் அறிந்து ஜெபிக்கப்பட வேண்டியவை, ‘தத் ஜெப; ததார்த்த பாவனம்” அர்த்தம் அறிந்து தியானிக்கப்பட வேண்டியவை. அந்த வகையில் மகாலக்ஷ்மி எனும் ஸ்ரீ தத்துவத்தினை விழிப்பிக்கச் செய்ய வல்ல தோத்திரம் மகா லக்ஷ்மி அஷ்டகம்.
இந்தப்பதிகளில் மகா லக்ஷ்மி அஷ்டகத்தின் சுருக்கமான பொருளையும் அதன் யோக தத்துவ விளக்கத்தினையும் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரர் அருளிய படி காண்போம், விரிவாக படிக்க எண்ணுபவர்கள் சென்னை ஆத்மா ஞான யோக சபா பதிப்பித்த ஆன்மீக படைப்பு –06 வாங்கி கற்கவும். சபா செயலாளரிடம் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.


முதலாவது சுலோகம்
நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே
சங்கு சக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷ?மி நமோஸ்துதே


பொருளுரை:
பிரபஞ்ச பெரும் மாயா சக்தி வடிவினளே! ஸ்ரீ தத்துவம் எனும் லக்ஷ்மீ பீடத்திற்குரியவளே! தேவர்களால் வணங்க்கப்படுபவளே, கைகளில் சங்கு, சக்கரம், கதையினை தாங்கியவளே, மகா லக்ஷ்மியே உனக்கு எனது நமஸ்காரம்!

விஷேட யோக வித்யா உரை:

ஆன்ம கொடிகளை பிரபஞ்ச பரிணாமத்தில் செலுத்தி விளையாடும் பராசக்தியின் ஒரு திரிபு சக்தி வடிவமே மகா லக்ஷ்மீ. அவள் கைகளில் வைத்திருக்கும் தாமரை புஷ்பம் பிரபஞ்சத்தின் குறி, பிரபஞ்சத்தை அவளே தாங்கியிருக்கிறாள் என்பது அதன் கருத்து, அவள் நின்றிருக்கும் நீர் பிரபஞ்ச சாகரம், பிரபஞ்சமெல்லாம் தோன்றுவதற்கு ஆதாரமானது ஆகாயதத்துவம், அந்த ஆகாய தத்துவத்தில் இருந்து உண்டான தாமரையே பிரபஞ்சம், இதனை நடத்துபவள் மகாலக்ஷ்மி, பிரஞ்சத்தின் எண்ணற்ற அண்டக்கோளங்கள் தாமரை இதழ்கள், மீண்டும் தாமரைமேல் மகாலக்ஷ்மி வீற்றிருப்பது தானே பிரபஞ்சத்தின் ஆதார சக்தி என்பதை காட்டவே, ஆகவே பிரபஞ்ச மாயா சக்தியும் அவளே, மாயையினுள் ஆன்மாக்களை உட்படுத்தும் அவளே விடுவிக்கவும் செய்கிறாள், எதன் மூலம் செய்விக்கிறாள் “ஸ்ரீ” தத்துவத்தின் மூலம். ஸ்ரீ தத்துவம் என்பது ஆன்மாக்களை எல்லாவித போகங்களையும் அளித்து திகட்ட செய்து பரிணாமத்தில் உயர்த்தும் அம்பிகையின் விளையாட்டு, இதற்கு லக்ஷ்மியின் கடாட்சம் அவசியம், மகாலக்ஷ்மியின் அருளை பெறும் ஆன்மாக்கள் இன்பமயமான உலக வாழ்வினை அனுபவித்து இறுதியில் மாயையிலிருந்து வெளியேற்றி முக்தியினை அளிப்பாள். இதை தருவதற்கான சக்திகளை குறிப்பது சங்கு, சக்கரம், கதை என்பன, சங்கு நாத பிரம்மம், சக்கரம் பிரபஞ்ச இயக்கம், கதை வீரம், இந்த மூன்றையும் மகாலக்ஷ்மிஇணை உபாசிப்பவர்கள் பெற்று, தேவர் போன்ற குறைவற்ற இன்பத்தினை பெற்று பரிணாமத்தில் முன்னேறுபவர்கள் ஆகின்றனர்.