Friday, September 9, 2011

மடப்புரம் , பத்திரகாளி.

Posted: 09 Sep 2011,Muthukumar,

நல்லதுக்கு இங்கே காலமில்லை. நீங்க பாட்டுக்கு , உங்க வேலையைப் பார்த்துக்கிட்டு போனா கூட, பாவம் அப்ராணின்னு எல்லாம் உங்களை யாரும் விட மாட்டாங்க.. வம்புக்கு இழுத்து , உங்களை கொஞ்சம் அழவைக்கிறதுல , அம்புட்டு சந்தோசம். நாங்க எல்லாம் எங்க ஏரியாவுல பிஸ்தாப்பா னு , ஒரு குரூப்பே திரியிது. அதுக்காக நம்ம ஏரியாவுலேயே இருந்தா பிழைக்க முடியுதா. முடியலையே... நம்ம ஏரியாவுலேயே இருந்துட்டா மட்டும், எங்கே நிம்மதியா இருக்க விடுறாங்க..!  நல்லா ஒருத்தர் இருந்துட்டா , நாலு பேரு அவரை கவுத்து விடத்தான்யா பார்ப்பாங்க... ! அதையும் சமாளிச்சுத்தான் வரணும்..எல்லோரும்!


  ,. கட்டப் பஞ்சாயத்து மாதிரி விவகாரங்களில் மாட்டிக் கொள்ளாது இருக்க

 நம் வாசகர்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். 

ஆலயம் இருக்கும் இடம் :  மடப்புரம் , மதுரை நகரை அடுத்து  வீற்றிருக்கும்  - பத்திரகாளி அம்மன் ஆலயம் . ஆயிரம் ஆண்டுகள் முந்திய பழமையான கோயில்.
ஆக்ரோஷத்தின் உச்சமாக இங்கே இருக்கும் அம்மன் - தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு - நான் இருக்கேன்யா ராசா உனக்கு என்று , நடமாடும் தெய்வமாக , அநியாயத்தை உடனே தட்டி கேட்கும் தேவியாக வரம் அளித்துக் கொண்டு இருக்கிறாள். 


கண்ணுகளா , நியாயம் உங்க பக்கம் இருந்தா மட்டும் - இங்கே போங்க.. இல்லையா , வம்பை விலை கொடுத்து வாங்குன கதை ஆகிடும். 
மதுரை மண்டலத்தில் மடப்புரம் காளி என்ற வார்த்தை கேட்டாலே துஷ்டர்களும் நடுங்குவர் என்பது வழக்கம். இதனால் இவ்வட்டாரத்தில் இக்காளி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.




செய்வினை, பில்லி, சூன்யம் ஆகியவற்றை இத்தலத்து அம்மன் தீயாய் பொசுக்கி விடுவதால் இத்தலத்து அம்மனை  ஏராளமானோர், தங்கள் குலதெய்வமாக வழிபடுகிறார்கள். 


பகைவர்களை வெல்லும் சக்தியையும் தருவதால் இத்தலத்து பத்ரகாளியம்மன் மிகவும் ஆக்ரோசமாக சக்தி உள்ளவர்.  ( மிக மிக உக்கிரம்! )


பத்ரகாளியம்மனை வணங்கினால் கோர்ட் சம்பந்தபட்ட வழக்கு விசாரணைகள் எளிதில் வெற்றி கிடைக்கிறது. 


வியாபார விருத்திக்காக இத்தலத்தில் வழிபடுவோர் நிறைய உண்டு. மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் எல்லாம் வழக்கமாக இத்தலத்தில் வழிபடுவதை அடிக்கடி பார்க்கலாம். 


பத்ரகாளியம்மன் தோற்றம்:
சம்கார தேவதையாக காட்சி தருகிறாள் பத்ரகாளியம்மன். கீழ்த்திசையை நோக்கி திரிசூலம் கீழ்நோக்கிப் பற்றி கலியுகத்தில் அநீதிகளை அழிக்கும் சம்கார தேவதையாக தனது தலையில் சுடர்விடும் அக்கினியையே கிரீடமாக கொண்டு உலகைக் காக்க உலா வரும் கோலத்தில் நின்று அருளாட்சி செய்கிறாள். வலக்கையில் பற்றிய கீழ்நோக்கி திரிசூலம் அநீதியை அழிக்கவும், தலையில் சூடிய அக்கினி அழித்தவற்றை மீண்டும் எழவிடாது சாம்பலாக்கவும் நின்ற நிலை தன்னை நாடி வரும் தன் மக்களை என்றும் எப்போதும் காத்து வரும் ஆயத்தநிலையை உணர்த்துகிறது.

காளி நிற்கும் பீடம் நீளம் அகலம் உடையது. அதன் மேல் போருக்கு ஆயத்தமான நிலையில் தன் முன்னங்கால்களை தூக்கி பின்னங்கால்களை ஊன்றி அன்னையின் ஆற்றலை வெளிப்படுத்தும் சக்தி வடிவமான குதிரை நிற்கிறது.

அடைக்கலம் காத்த அய்யனார் : மூலஸ்தானத்தில் எழுந்தருளியிருக்கும் மூர்த்தி நின்ற கோலத்தில் காணப்படுகிறார்.இவரே இக்கோயிலின் காவல் தெய்வம். இத்தலத்தின் ஆட்சி தெய்வம் இவர் என்பதால் மிகவும் சக்தி தெய்வமென பக்தர்கள் பயபக்தியோடு கூறுகிறார்கள்
தலபெருமைகள் :  அம்பாளுக்கு நிழல் தரும் விதமாக பிரம்மாண்டமாக குதிரை வாகனம் இருக்கிறது. மற்ற கோயில்களில் குதிரை மீது இருக்கும் அய்யனார் இங்கு தனியாக சன்னதியில் அமர்ந்திருப்பது தனி சிறப்பு.




ஒரு பிரளய காலத்தில் மதுரை நகரம் வெள்ளத்தால் சூழப்பட்டு முற்றிலும் மறைந்து விட்டது. அப்போது மீனாட்சி அம்மன் மதுரைக்கு எல்லை காட்டவேண்டும் என்று இறைவனிடம் கேட்க, சிவபெருமான் தன் கழுத்தில் உள்ள நாகத்தை எடுத்து மதுரையை வளைத்தார்.

மேற்கே திருவேடகமும் தெற்கே திருப்பரங்குன்றமும் வடக்கேதிருமாலிருஞ்சோலையும் வைத்து எல்லையை வகுத்த இறைவன் கிழக்கில் தற்போது உள்ள மடப்புரத்தில் படத்தையும் வாலையும் ஒன்று சேர்த்து எல்லை காட்டினார். இதனால் நாகத்தின் வாயில் உள்ள விஷத்தை அம்மன் உண்டு இங்கு காளியாக எழுந்தருளினாள்.

அங்குள்ள அய்யனார் காவல் தெய்வம் அம்மனுக்கு தன் வாகனமாகிய குதிரையை தந்து அம்மனுக்கு நிழல் தந்து அடைக்கலம் தந்தார்.இதனால் அடைக்கலம் காத்த அய்யனார் என்று அவர் பெயர் பெற்றார். 

மிகப்பழமையான இத்தலத்திலுள்ள காளி பக்தர்களின் எண்ணற்ற வேண்டுதல்களை நிறைவேற்றி வருகிறாள்.


ஆரம்ப காலங்களில் சாமியாடிகள் கூடி களரி எனும் சாமி ஆடுவது வழக்கமாக இருந்தது. அம்மனை குளிர்ச்சியூட்ட எலுமிச்சம் பழங்களால் ஆன மாலை அணிவிக்கப்படுகின்றன. அம்மனுக்கு ஆடை அணிவித்தலும் படையலாக கருதப்படகிறது.


 காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். வாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோயிலில் ஆயிரக்கணக்கில் மக்கள் கூட்டம் கூடுகிறது. பௌர்ணமி பூஜை யன்று பாலாபிஷேகம். தமிழ் மாத முதல் செவ்வாய் தோறும் 1008 திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது.


 அநியாயமாக  உங்களுக்கு  தண்டனை , நியாயத்தின் பேரில் - வழக்கு, கோர்ட் , பஞ்சாயத்து என்று திணிக்கப்படுகிறதா? எங்கள் அம்மனின் சந்நிதிக்கு ஒருமுறை வந்து பாருங்கள்... ! வந்த இன்னல் பறந்து ஓடும், இனி வரவும் வராது..! கண்டிப்பாக நீதி கிடைக்கும்....!  இதை அனுபவித்து உணர்ந்த ஆயிர மாயிரம் பக்தர்களை நீங்கள் கோவில் வரும்போது காணலாம்!



No comments:

Post a Comment