Wednesday, March 21, 2012

மவுனத்தால் வந்த நன்மை!

Posted On March 22,2012,By Muthukumar
யுகதர்மம் என்றுள்ளது. அந்தந்த யுகங்களில் தர்மமும் மாறுவதுண்டு. கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என, நான்கு யுகங்கள். தானே சென்று கொடுப்பர் கிருத யுகத்தில்; கூப்பிட்டுக் கொடுப்பர் திரேதா யுகத்தில்; வந்து கேட்டால் தான் கொடுப்பர் துவாபர யுகத்தில்; கசக்கிப் பிழிந்து கேட்டால்தான் கொடுப்பர் கலியுகத்தில்.
தர்ம தேவதைக்கு நான்கு கால்கள். கடந்த மூன்று யுகங்களில், மூன்று கால்கள் வெட்டப்பட்டு விட்டதால், இந்தக் கலியுகத்தில் தர்மம் ஒரே காலில், அதாவது கால் பங்கு தான் உள்ளது. முக்கால் பங்கு தர்மம் இப்போது இல்லை. இனி, அடுத்த கிருத யுகம் வரும்போது தான், தர்மம் முழு அளவில் இருக்குமாம். கலியுகமே இன்னும் பல வருஷங்கள் இருக்குமாம்.
கலிகாலம், முற்ற முற்ற இன்னும் பல கொடுமைகள் நடக்குமாம். இந்த கலியுகத்தில் என்னென்ன கொடுமைகள் நடக்கும் என்பதை, புராணங்களில் காணலாம். முந்தைய யுகங்களில், பொய் சொல்ல பயப்படுவர். ஒருவர், ஜெபம் செய்தபடி திண்ணையில் உட்கார்ந்திருந்தார். அந்த சமயம் ஒரு பசு மாட்டைக் கொல்வதற்காக துரத்தி வந்தான் ஒருவன். அந்த பசு மாடு, இவர் பக்கமாக ஓடி வந்து, பக்கத்து சந்து வழியாக ஓடி தப்பித்துக் கொண்டது.
ஜெபம் செய்தவரிடம் வந்து, "இந்தப் பக்கம் ஒரு பசு மாடு வந்து போயிற்றா?' என்று கேட்டான் துரத்தியவன். இவர் யோசித்தார்... "பசு மாடு இந்தப் பக்கம் போயிற்று என்றால் அது உண்மை. உண்மையைச் சொன்னால், அவன் பசு மாட்டை தேடிப் போய் கொன்று விடுவான்; அந்தப் பாவம் நம்மைச் சேரும். "பசு மாடு வரவில்லை என்றால் அது பொய்யாகி விடும்; அந்த பொய் சொன்ன பாவம் நமக்கு வரும்...' என்று யோசனை செய்தபடி பேசாமல் இருந்தார்.
பசுவை தேடி வந்தவன் இரண்டு, மூன்று தடவை கேட்டும், இவர் பதில் சொல்லவே இல்லை. "ஓகோ! இவர் செவிடு போலிருக்கிறது...' என்று நினைத்து திரும்பிப் போய் விட்டான். பசு மாடும் தப்பியது; தான் பதில் சொல்லாமல் மவுனமாக இருந்தது எவ்வளவு நல்லதாகப் போயிற்று என்று சந்தோஷப்பட்டார். மவுனமாக இருப்பதும் கூட நல்லதுதான். அதிகம் பேசப் பேச, அதுவே மனஸ்தாபத்தில் முடியும். அதனால்தான், சில பெரியவர்கள் மவுன விரதம் கடைபிடிப்பதுண்டு. வீண் பேச்சு பேசினால் தானே விரோதம் ஏற்பட வாய்ப்புண்டு.
வீட்டில் கூட, மவுன விரதம் இருந்தால், மனைவி மக்களிடம் பேசாமல் இருந்தால், வீண் விவாதம் இருக்காது. அதற்காக, பேசாமல் இருக்கவும் கூடாது. சந்தர்ப்பத்துக்குத் தகுந்தபடி சாமர்த்தியமாகப் பேச வேண்டும். முடியுமா உங்களால்? கடவுளைப் பற்றி பேசுங்கள்; அவன் குணாதிசயங்களைப் பேசுங்கள். புண்ணியம் உண்டு!

No comments:

Post a Comment