Thursday, August 2, 2012

சொர்க்கம்-நரகம்-புனர் ஜென்மம்

Posted On Aug 2,2012,By Muthukumar
 மரணத்திற்குப் பிறகு மனிதனின் நிலை என்ன?
அவனுடைய ஆவி இப்போது இருப்பதைப் போலவே பூமியில் உலாவுகிறதா?
இல்லை, வான மண்டலத்திலே சொர்க்கத்திற்கோ, நரகத்திற்கோ போய் விடுகிறதா?
அதுவும் இல்லை என்றால், அது இன்னொரு ஜீவனாக உடனே பிறந்து விடுகிறதா?
இந்தக் கேள்விகளுக்கு எப்படியும் பதில் சொல்லலாம்.
உபந்யாசகர்கள் அவர்களுக்குத் தோன்றிய பதிலைச் சொல்கிறார்கள்.
ஆனால், மறுபிறவி என்கிற புனர்ஜென்மத்தைப் பற்றிக் காஞ்சிப் பெரியவர்கள் அழகாக ஒரு விளக்கம் தருகிறார்கள். அதனை அத்தியாயத்தின் இறுதியில் தருகிறேன்.
மனித உயிர் சொர்க்கத்துக்கோ, நரகத்திற்கோ போகிறது என்பதிலும், மறுபிறவி எடுக்கிறது என்பதிலும் இந்துக்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.
`சொர்க்கம், நரகம் என்ற இரண்டை ஏன் ஆண்டவன் படைக்க வேண்டும்?' என்று யாராவது கேட்டால், `உயிர் ஏன் போக வேண்டும்?' என்றே நான் அவர்களைத் திருப்பிக் கேட்பேன்.
ஒன்பது ஓட்டைக்குள்ளே ஊசலாடிக் கொண்டிருக்கும் ஒரு துளிக் காற்று ஒரு குறிப்பிட்ட தேதியில் வெளியேறுகிறது.
ஆக, அந்தத் தேதியை எவனோ நிர்ணயிக்கிறான் என்று தானே ஆகிறது.
அப்படித் தேதியை நிர்ணயிக்க ஒருவன் இருப்பானானால், மனித உயிருக்கு நீதியையும், அவன் நிர்ணயிப்பானல்லவா?
தவறு செய்தவர்கள் நரகத்திற்குப் போகும்படியும், நல்லது செய்தவர்கள் சொர்க்கத்திற்குப் போகும்படியும், அவன் நிர்ணயிக்கலாம் அல்லவா?
சொர்க்க-நரகத்தின் அமைப்பு, அதன் இருப்பிடம் பற்றி வேண்டுமானால் சர்ச்சை இருக்கலாம். ஆண்டவன் தான் நீதி வழங்குகிறான் என்பதில், விவாதத்துக்கே இடமில்லையே!
அவரவர்களின் கர்மாவுக்கு ஏற்றபடி நீதி வழங்கப்படுகிறது என்பதில் தவறில்லையே?
சிலரது மரணத்தையே நாம் பார்க்கிறோமே...
காந்தியை நேசித்த காமராஜ், காந்திஜீ பிறந்த நாளிலே மரணமடைந்தார்.
முருகனை நேசித்த சின்னப்பா தேவர், முருகனுக்கு உகந்த சஷ்டி நாளிலே காலமானார்.
இந்த இருவருமே சொர்க்கத்துக்குத்தான் போயிருப்பார்கள் என்பதை இவர்களது மரணமே சுட்டிக் காட்டுகிறதே!
படுக்கையில் நீண்ட நாட்கள் படுத்து அவதிப்படாதபடி, அந்தப் புண்ணிய மூர்த்திகளை இறைவன் வலி இல்லாமல் கொண்டு போயிருக்கிறான்.
`வாழ்ந்தால் இப்படி வாழ வேண்டும்' என்ற ஆசையை விட, `செத்தால் இப்படிச் சாக வேண்டும்' என்ற எண்ணத்தையல்லவா இந்த மரணங்கள் உண்டாக்கி இருக்கின்றன!
ஒருவனது வாழ்நாளிலேயே மரணத்துக்குப் பின்பு அவன் எந்த நிலையை எய்துவான் என்பதை, இந்துக்கள் கண்டு பிடிக்கிறார்கள்.
சிலரைப் பார்த்து, `அட பாவி, நீ நரகத்திற்குத் தான் போவாய்!' என்கிறார்கள்.
`புண்ணியவானுக்கு நல்ல கதி கிடைக்கும்!' என்கிறார்கள், சிலரைப் பார்த்து.
இந்தக் கதி நிர்ணயம், அவர்களது வாழ்க்கையிலே அடங்கிக் கிடக்கிறது.
நான் அடிக்கடி சொல்வேனே ஒரு சாமியார் கதை, அது அப்படித்தான்!
இக வாழ்க்கையில் ஒரு மனிதன் ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கவே, பரலோகத்தைத் தீர்க்கதரிசிகள் காட்டினார்கள்.
`கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்' என்றாலும், இந்துக்களின் அனுமானத்தில் இருந்து, அவர்கள் விரும்புகிற பண்பாடு புரிகிறது.
மனிதனை நேர்வழியில் நடக்கச் செய்வதே, அவர்களின் மூலாதார நோக்கம்.
ஆனால் மறுபிறவி என்பது நிச்சயமாக இருக்கிறது.
`ஒன்றை விரும்புகிறவன், அது நிறைவேறாமல் செத்தால், அதை நிறைவேற்றிக் கொள்ள மறுபடியும் பிறக்கிறான்' என்கிறார்கள்.
தவறு செய்கிறவர்கள் இழி பிறப்பெடுத்ததாகக் கூறுகிறார்கள்.
இழி பிறப்பெடுத்த ஒருவன், அந்தப் பிறப்பில் தன்னுடைய கர்மாவை ஒழுங்காக நிறைவேற்றி விட்டால், அடுத்த பிறப்பில் உயர் பிறப்பெடுக்கிறான் என்கிறார்கள்.
இதிலே, நான் முதலில் கேள்வி கேட்டவாறு, ஒரே ஒரு ஐயப்பாடெழும்.
`ஒருவன் இறந்தபின் எவ்வளவு காலம் கழித்து மறு பிறப்பெடுக்கிறான்?' என்பதே அது.
அது அவனுடைய ஆசையையும், கருமத்தையும் பொறுத்தது.
எனது சகோதரர் ஏ.எல்.எஸ். மறைந்த அதே நாளில் எனது மகள் கலைச்செல்விக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த ஜீவனின் மறு பிறப்பே இது என்றே நம்பிக்கை தோன்றுகிறது. சரியோ தவறோ, அப்படி ஒரு எண்ணம் எனக்கு ஏற்படுகிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே எகிப்து நாட்டில் ஒரு விவசாயியைக் காதலித்த குற்றத்திற்காகக் கொலை செய்யப்பட்டாள் ஒரு பதினாறு வயது ராஜகுமாரி.
அவளை அடைத்திருந்த முதுமக்கள் தாழியை அண்மையிலே கண்டுபிடித்திருக்கிறார்கள்.
`ஆயிரம் வருஷம் கழித்து அவள் மறுபடியும், எகிப்து மன்னனைக் கட்டிக் கொண்டாள்' என்றும், `அந்த விவசாயி தான் எகிப்து மன்னனாகப் பிறந்தான்' என்றும் ஒருவர் எழுதியிருந்தார்.
இந்தக் கதைகள் உண்மையோ, பொய்யோ, ஜீவர்களைச் சிருஷ்டிக்கும் வேலையைச் சுலபமாக்கிக் கொள்ள ஆண்டவன் மறுபிறப்பை உண்டாக்கி இருக்கிறான் என்பதை நம்பலாம்.
ஆக, சொர்க்கம், நரகம், மறுபிறவி என்பதெல்லாம் வெறும் ஏமாற்று வித்தைகள் என்று கேலி பேசுவதை விட, வாழ்க்கைச் சாலையை ஒழுங்குபடுத்திக் கொடுக்கும் அற்புதங்கள் என்று ஏற்றுக் கொள்வதில் நியாயம் உண்டு.
`அது சரி, ஜீவன் தான் மறுபடி பிறக்கிறதே. மறுபடி பிறந்து அது பூமியில் தண்டனையை அனுபவிக்கப் போகிறதே, அதற்குச் சொர்க்கமும் நரகமும் எதற்கு' என்ற கேள்வி எழும்.
பகவத் கீதைப்படி, உத்தராயணத்தில் செத்தவர்களுக்கு மட்டுமே பிறப்பு உண்டு. தட்சிணாயணத்தில் செத்தவர்களுக்கு இல்லை.
தட்சிணாயணத்தில் செத்தவர்கள் பாவம் செய்தவர்களாக இருந்தால், அவர்களைக் கொண்டு போய் வைக்க நரகமும், புண்ணியவான்களைக் கொண்டுபோய் வைக்கச் சொர்க்கமும் இருக்கின்றன.
`சொர்க்கத்தில் சுகபோகப் பிருந்தாவனம் இருக்கும்' என்கிறார்கள்; `நரகத்தில் எண்ணெய்க் கொப்பறையும் செக்கும் இருக்கும்' என்கிறார்கள். இவையெல்லாம் உண்மையா?
இவையெல்லாம் மனிதனின் கற்பனா வடிவங்கள்.
சொர்க்க-நரகம் என்பது இறைவனின் நீதிமுறை என்றே எனக்குப் புரிகிறது. ஆனால், அதன் அமைப்பை யாரும் பார்த்ததில்லை.
ஆவிகளின் உலகத்தில் ஏதோ ஒரு இருப்பிடம் இருக்கத் தானே செய்யும்? அதற்கொரு வடிவம் கற்பனை செய்யப்பட்டிருக்கிறது.
சினிமாக்காரர்கள் அரண்மனை செட் போடும்போது, அவரவர் மனோ தர்மத்திற்கேற்பப் போடுவது போல், சொர்க்க நரகத்தையும் பலர் கற்பனை செய்திருக்கிறார்கள்.
நீதிமன்றம் எப்படி இருக்கும் என்பது, நீதிமன்றத்துக்குப் போகும்வரை யாருக்கும் தெரியாது. எல்லோரும் போய்ப் பார்த்த பிறகுதான் தெரிந்து கொள்ள முடியும்.
தண்டனையோ பரிசோ எதுவானாலும் சரி, அவற்றில் இருந்து தப்ப இக வாழ்க்கையில், `சூதாடுவதையும், குடிப்பதையும், தாசி வீட்டுக்குப் போவதையும் பாவங்கள்' என்று நான் கருதவில்லை. அவை மனிதன் தனக்குத்தானே விளைவித்துக் கொள்ளும் தீங்குகள்.
அடுத்தவனைக் கெடுப்பது, துரோகம் செய்வது, பிறன் மனை இச்சிப்பது போன்றவையே பாவங்கள் என்று இந்துப் புராணங்கள் கூறுகின்றன.
மாமிசம் உண்பதைக்கூட `மத விரோதம்' என்று அவை கூறியதில்லை.
சடலத்தை தூக்கிச் செல்லும்போது, `ஐயோ! புண்ணியவான் போய்விட்டாரே!' என்று பத்துப் பேர் சொன்னால், அந்த வார்த்தைகளே சொர்க்கத்தின் படிக்கட்டுகள்; `சண்டாளன் போய்விட்டான்' என்றால் நரகத்தின் படிக்கட்டுக்கள்.
அந்த நல்ல பெயரையே மனிதன் தேடிக் கொள்ளவேண்டும்.
இந்துக்களின் வேதங்களும், புராணங்களும் அதையே வலியுறுத்துகின்றன.
இதோ, காஞ்சிப் பெரியவர் பேசுகிறார்:
`மற்ற மதங்களில் இல்லாத பல அம்சங்கள் நம் மதத்தில் இருக்கின்றன. அதில் கர்மக் கொள்கை (Karmattheory) என்று ஒன்று சொல்கிறார்கள்-நம் மதத்திலிருந்தே வந்த பெளத்தம் போன்ற மதங்கள் இதை ஒப்புக் கொண்டாலும், ஏனைய மதங்களில் இந்தக் கொள்கை இல்லை.
`கர்மா தியரி' என்றால் என்ன?
எந்தச் செயலுக்கும் பிரதியாக ஒரு விளைவு உண்டு. Cause and Effect என்பதாகவும், Action and Reaction என்பதாகவும் இவை தவிர்க்க முடியாத விதிகளாக இருக்கின்றன என்றும் `ஃபிஸிக்ஸில்' சொல்கிறார்கள். பெளதிகத்தில் சொல்வதையே மனுஷ்ய வாழ்க்கைக்கும் பொருத்தி கர்மக் கொள்கையை நம் ஆன்றோர்கள் கூறுகிறார்கள். பிரபஞ்சத்தில் ஜடமான பூதங்கள் போலவே சைதன்யம் என்ற அறிவுள்ள ஜீவர்களும் அடக்கம். இவை ஒன்று சேர்ந்தது தான் லோக வாழ்வு. எனவே ஒன்றுக்கு இருக்கும் நியதி, தர்மம் இன்னொன்றுக்கும் இருக்கத்தான் வேண்டும். மனிதனின் ஒவ்வொரு கர்மாவுக்கும் விளைவாக ஒரு பலன் உருவாக்கித்தான் தீர வேண்டும் என்பதே (Karmattheory) `பாவ கர்மம் செய்தால் அதற்கான தண்டனையை மனுஷ்யன் அனுபவிக்க வேண்டும். புண்ணிய கர்மம் செய்தால் அதற்கான நற்பலன் அவனை வந்தடையும்' என்கிறது நம் மதம்.
இம் மாதிரிப் பாவ-புண்ணியக் கர்மங்களை மனிதன் அனுபவிக்க வேண்டும் என்பதாலேயே அவனுக்கும் பல பிறவிகள் உண்டாகின்றன என்கிறது நம் மதம். நல்லது செய்ய வேண்டும். கெட்டது செய்யக் கூடாது என்பதைச் சகல மதங்களும் சொன்னாலும், அவை நம் மதம் மாதிரி இத்தனை அழுத்தம் கொடுத்து, காரணம், விளைவு (Cause and Effect) தொடர்பைச் சொல்லவில்லை. மறு பிறப்புக் கொள்கையை (Reincornation Theory) மற்ற மதங்கள் - பாரத தேசத்தில் தோன்றாத மற்ற மதங்களில் எதுவுமே - சொல்லவில்லை. அது மட்டுமில்லை, இதற்கு மாறாகப் பல தினுசான கருத்துகளைச் சொல்கின்றன. ஆனபடியால், அந்த மதஸ்தர்கள் மனிதனுக்குக் கர்மா தீருகிறவரை பல ஜென்மங்கள் உண்டு என்ற நம் கொள்கையைப் பலமாக ஆட்சேபிப்பார்கள்.
பொதுவாக அந்நிய மதத்தவர் கருத்து என்னவென்றால், `இந்த ஒரே ஜென்மத்தோடு மனுஷ்யனுக்குப் பிறவி தீர்ந்து விடுகிறது. இந்த ஜென்மா முடிந்த பின் அவன் உயிர் என்றைக்கோ ஒரு நாள் ஸ்வாமி கூறுகிற தீர்ப்பைக் கேட்பதற்காக ஓரிடத்தில் போயிருக்கும்.
அந்த நாளில் (Judgement Day) ஸ்வாமி இவன் இந்தப் பிறவியில் செய்த பாவ - புண்ணியங்களைக் கணக்குப் பார்த்து இவனை நித்தய ஸ்வர்க்க வாசகத்துக்கோ அல்லது நிரந்தர நரக வாசகத்திற்கோ (Eternal Damnation)அனுப்பி விடுவார்' என்பதாகும்.
என்னிடம் வந்த ஒரு வெள்ளைக்காரர் - இப்போதெல்லாம் தான் என்னிடம் நிறைய வெள்ளைக்காரர்கள் வந்தபடி இருக்கிறார்களே, அவர்களில் ஒருத்தர் - இவர் புத்தகம் கித்தகம் எழுதிப் பிரசித்தி பெற்றவர் - வேடிக்கையாகச் சொன்னார், அவருக்குப் பைபிளில் எங்கு பார்த்தாலும் கடவுள் அன்பே உருவானவர் (God is Love) என்று சொல்லிவிட்டு, இப்படிப் பட்டவர் ஒரு தப்புப் பண்ணியவனைத் துளிகூடக் கருணையில்லாமல், மீளவே வழியில்லாமல் நித்திய நரகத்துக்கு அனுப்புகிறார் என்று சொல்வது பொருத்தமில்லாமல் தோன்றியதாம். எனவே ஒரு பாதிரியாரிடம் சமாதானம் கேட்டாராம். அதற்குப் பாதிரியார் `நிரந்தரமாகக் காலியாகவே இருக்கிறது' என்றாராம்.
ஆனால், யோசித்துப் பார்த்தால் இதை நாம் ஏற்றுக் கொள்வது சிரமமாய் இருக்கும். சுவாமி கருணை காரணமாகப் பாவியைக் கூட நரகத்துக்கு அனுப்பவில்லை என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் அவர்கள் சித்தாந்தப்படி அவர் பாவியின் உயிரை எங்கே அனுப்ப முடியும்? அவர்கள் கொள்கைப்படி மறு ஜென்மம் இல்லையாதலால் பூலோகத்துக்கு மறுபடி அனுப்ப முடியாது. அதனால் பாவியையும் ஸ்வர்க்கத்துக்குத் தான் அனுப்ப வேண்டியதாகும். அப்படியானால் நாம் லோகத்தில் எந்தப் பாவத்தை வேண்டுமானாலும், எத்தனைப் பாவங்கள் வேண்டுமானாலும் கூசாமல் செய்து கொண்டே போகலாம். முடிவில் எப்படியும் ஸ்வாமி நம்மை ஸ்வர்க்கத்துக்கு அனுப்பி விடுவார் என்று ஆகும். அதற்கப்புறம் லோகத்தில் சகலரும் ஒழுங்கு தப்பித்தான் நடப்பார்கள்.
நம் மதப்படியும் கர்ம பலனைத் தந்து தீர்ப்புத் தருகிற பலதாதாவான ஈஸ்வரன் பரம கருணாமூர்த்தி தான். ஆனால், அதற்காக லோகம் அதர்மத்தில் மனமறிந்து விழட்டும் என்று விடுகிறவன் அல்ல அவன்.
அதனால் என்ன பண்ணுகிறான்?
நம் பாவ பலனை (புண்ணிய பலனையும் தான்) அனுபவிப்பதற்காக நம்மை, இன்னொரு ஜென்மா கொடுத்து மறுபடி இந்த உலகுக்கே அனுப்பி வைக்கிறான். ஸ்வர்க்க ஆனந்தம், நரகக் கஷ்டம் இரண்டும் இந்த உலகத்திலேயே தான் இருக்கின்றன. நாம் கலந்தாங்கட்டியாகப் பாவம், புண்ணியம் இரண்டும் போன ஜென்மாவில் பண்ணியிருப்பதால் இப்போது கெட்டது நல்லது இரண்டையும் சேர்த்து அனுபவிக்கிறோம். ரொம்பப் பாவம் செய்தவர்கள் ரொம்பக் கஷ்டப்படுகிறோம். பொதுவிலே ரொம்பக் கஷ்டப்படுகிறவர்கள் அல்லது சமமாகக் கஷ்ட-சுகம் உள்ளவர்கள்தான் இருக்கிறோமே தவிர, தாங்கள் பரம சுகமாக இருப்பதாக நினைக்கிறவர்கள் ரொம்பவும் துர்லபமாகவே இருக்கிறார்கள். இதிலிருந்தே நாம் அனைவரும் பொதுவில் பாவமே அதிகம் பண்ணியிருக்கிறோம் என்பது புரிகிறது.
பகவான், கருணை காரணமாக, இன்னொரு ஜென்மாவிலிருந்து இவன் பாவத்தைக் கழுவிக் கொள்வானா என்று பார்ப்பதற்காக, ஒரு பெரிய வாய்ப்பாக (Opportunity) பிறவியைக் கொடுக்கிறார். அதிலே ஒரு சாஸ்திரம், க்ஷேத்திரங்கள், இத்தியாதி வசதிகளை எல்லாம் கொடுத்து இவனுடைய அழுக்கைத் துடைக்க முன் வருகிறார். `இவன் கையாலாகதவன், ஒரு நாளும் தானாக முன்னேற மாட்டான்' என்று அடியோடு உதவாக்கரையாக நினைத்து இவனுக்குப் பாவியானாலும் கூட ஸ்வர்க்கத்தைக் கொடுத்து விடுகிறார் என்பதைவிட, இப்படி இவனைக் கூட நம்பி, உடன் தன்னைத் தானே கடைத்தேற்றிக் கொள்வான் என்று நம்பிக்கை வைத்துப் புனர் ஜென்மா தந்து, இதில் இவனுடைய தன் முயற்சிகளுக்குப் பல விதத்தில் கை கொடுக்க ஸ்வாமி முன் வருவதாகச் சொல்வது நன்றாக இருக்கிறது; பொருத்தமாக இருக்கிறது. அதுதான் பரம கருணையாகவும் இருக்கிறது. `எனக்கென்று முயற்சி என்ன இருக்கிறது; எல்லாம் உன் செயல்' என்று ஜீவன் சரணாகதி செய்கிற போது ஸ்வாமியே இவனை ஒரே தூக்காகத் தூக்கி விடுகிறார் என்பது வாஸ்தவம். ஆனால், இவனாக முயற்சியை விடுகிற சரணாகதியில் அனுக்கிரகம் செய்வது வேறு; இவனுக்கு முயற்சி செய்யவே லாயக்கில்லை என்று நினைத்து அனுக்கிரகம் செய்வது வேறுதான். புருஷ லட்சணம் என்று ஒன்று இருப்பதாக நினைக்கிற வரையில் அதில் ஜீவனை நம்பி விட்டு வைப்பதுதான் பரம கருணை. அதுதான் நிஜமான அனுக்கிரகம்.
நிரந்தர நரகத்திற்கு ஸ்வாமி எவரையும் அனுப்புவதில்லை என்பது ஒரு தனிப்பட்ட பாதிரியாரின் அபிப்பிராயம் தான். அதுவேதான் கிறிஸ்துவம் முதலான `ஒரே பிறவி' மதங்களின் கோட்பாடு என்று சொல்வதற்கில்லை. ஒரே ஜென்மத்தில் ஒருத்தன் பண்ணுகிற புண்ணியத்திற்காக அல்லது பாவத்திற்காக அவனை ஸ்வாமி ஸ்வர்க்கம் அல்லது நரகத்திற்கு நிரந்தரமாக அனுப்பி விடுகிறார் என்பதுதான் அம் மதங்களின் பொதுக் கருத்து! அதிலும் நாம் பொதுவாகப் பாவமே பண்ணுவதால் நரக தண்டனை பெறுகிறவர்கள் தான் ஜாஸ்தியாக இருப்பார்கள் என்பதால் தீர்ப்பு நாளைக்கே ரொம்பவும் பயங்கரமான பெயர் - Dooms dayஎன்றே வைத்திருக்கிறார்கள். இது பகவானின் கருணைக்குக் குறைவாகத்தான் எனக்குத் தோன்றுகிறது.
நம் மதத்தின் புனர் ஜென்மக் கொள்கைக்கு ஆதரவாக ஒன்றை அழுத்தமாகக் காட்டலாம்.
வெள்ளைக்காரி ஒருத்தி என்னிடம் வந்து இந்த (Reincornation) விஷயத்துக்கு நிரூபணம் (Proof) கேட்டாள். நான் அவளிடம் வாதம் ஒன்றும் செய்யவில்லை. அப்போது மடத்து முகாமில் ஒரு பண்டிதர் இருந்தார். அவருக்கு இங்கிலீஷும் வரும். அவரிடம் அவளை அங்கே உள்ள பிரசவ ஆஸ்பத்திரிக்கு அழைத்துக் கொண்டு போய், அங்கே பிறந்திருக்கிற குழந்தைகளைப் பற்றிய விவரங்களைக் குறிப்பெடுத்துக் கொண்டுவரும்படி சொன்னேன். அவளும் அப்படியே பிரசவ ஆஸ்பத்திரிக்கு அவரோடு போய்விட்டு வந்து குழந்தைகளைப் பற்றிய குறிப்புகளைச் சொன்னாள். அதன்படி ஒரு குழந்தை கொழு கொழுவென்று இருந்தது. இன்னொன்று அவலட்சணமாக இருந்தது. ஒன்று உசத்தியான `வார்டில்' செளகரியமாகப் பிறந்தது. இன்னொன்று சொல்ல முடியாத கஷ்டங்களுக்கு நடுவே ஒரு பரம ஏழைப் பெண்ணுக்குப் பிறந்தது.
`ஜென்மாவின் கடைசியில் பகவான் ஒருத்தரை நிரந்தரமாக நரகத்துக்கு அனுப்புவது ஒரு பக்கம் இருக்கட்டும்; அது நமக்கு கண்ணுக்குத் தெரியாத விஷயம்; இப்போது பல ஜென்மங்களில் ஆரம்பத்தைப் பிரசவ ஆஸ்பத்திரியில் பிரத்யட்சமாகப் பார்த்தாயே இதிலே ஏன் இத்தனை ஏற்றத் தாழ்வுகள்? ஏன் ஒன்று தரித்திரியத்திலும், இன்னொன்று சம்பத்திலும் பிறக்க வேண்டும்? ஏன் ஒன்று ஆரோக்கியமாகவும், இன்னொன்று அவலட்சணமாகவும் இருக்க வேண்டும்?
ஜீவனுக்கு ஒரே ஒரு ஜென்மா தான் உண்டு என்ற உங்கள் மதக் கொள்கையை ஒப்புக் கொண்டால் அவை ஜனிக்கிற போதே இத்தனை பாரபட்சங்கள் இருப்பதைப் பார்க்கிற போது ஸ்வாமி கொஞ்சங்கூடக் கருணை இல்லாது, புத்திசாலித்தனம் இல்லாமல் மனம் போனபடி கன்னா பின்னா என்று காரியம் செய்து கொண்டிருக்கிறார் என்று தானே ஆகிறது? அப்படிப்பட்ட ஸ்வாமி கருணை செய்வார் என்று நம்பி எப்படிப் பக்தி செலுத்துவது? பூர்வ ஜென்மப் பாப-புண்ணியங்களை ஒட்டிப் புனர்ஜென்மா அமைகிறது என்ற கொள்கையைத் தவிர, நீ பார்த்த ஏற்றத் தாழ்வுக்கு என்ன காரணம் சொல்ல முடியும்?' என்று கேட்டேன்.
அவள் ரொம்பச் சந்தோஷத்தோடு நான் சொன்னதை ஏற்றுக் கொண்டு போனாள்.
ஆனால், நவீன காலத்தவர்களுக்கு இந்த விளக்கங்கள் (Explanations) போதாது. ஸயன்ஸ்படி ப்ரூப் கேட்பார்கள். அப்படிப் பார்த்தாலும் இப்போது `பாரா ஸைகாலஜி'க்காரர்கள் இந்த விஷயத்தில் நிறைய ஆராய்ச்சி பண்ணி, ஜன்மாந்தரங்கள் உண்டு என்பதற்கு ஆதரவாக அநேக விஷயங்களைச் சொல்கிறார்கள்.
உலகம் முழுக்க இவர்கள் சுற்றி வந்ததில் எத்தனையோ இடங்களில் பூர்வ ஜென்மத்தில் இப்போதைய இடத்துக்குத் துளிகூடச் சம்பந்தமேயில்லாமல் வேறு எங்கேயோ இருக்கப் பட்ட தூர தேசங்களில் தாங்கள் பார்த்தவற்றை நினைவாகச் சொல்கிற பல பேர் இருக்கிறார்கள். அந்த விவரங்களை எல்லாம் மறக்காமல் சொல்கிறார்கள்.
இவர்கள் சொல்வது உண்மைதானா என்று பரிசோதித்துப் பார்ப்பதற்காக `பாராஸைகாலஜி'க்காரர்கள் அந்தந்த ஊர்களுக்குப் போயிருக்கிறார்கள். போனால் அங்கே ஆச்சரியப்படுகிற மாதிரி இவர்கள் சொன்ன அடையாளங்களை, இவர்கள் பூர்வத்தில் சம்பந்தப்பட்டிருந்த மனுஷ்யர்களைப் பார்க்கிறார்கள். இது மாதிரி ஒன்று, இரண்டு அல்ல - ஏகப்பட்ட கேஸ்கள் இருக்கின்றன.
நமக்கெல்லாம் முற் பிறவி சமாசாரங்கள் அடியோடு மறந்து போய் விட்டன. ஆனால், வெகு சிலருக்கு நினைவு இருக்கிறது. அநேகமாக இப்படிப்பட்டவர்கள் பூர்வ ஜென்மத்தில் இயற்கையாகச் செத்துப் போகாமல்(Natural Death) அதாவது நோய் நொடி வந்து செத்துப் போகாமல், கொலை செய்யப்பட்டவனாகவோ, அல்லது திடீரென்று ஒரு விபத்தில் சிக்கிக் கொண்டு அப்போதே மரணமடைந்தவர்களாகவோ இருக்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்....'

1 comment: