Saturday, August 11, 2012

சதுரகிரிக்கு எப்போதெல்லாம் செல்லலாம்?

Posted On Aug 12,2012,By Muthukumar

சதுராசலம், சித்தர்கள் தேசம், சிவன்மலை, மூலிகைவனம் என்று பெரியோர்களால் போற்றப்படும் சதுரகிரி மலையில் கோயில் கொண்டுள்ளார், சுந்தர மகாலிங்கப் பெருமானார். மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் கோடியருகே மேற்பகுதி தட்டையான, சதுர வடிவிலான நான்கு மலைகள் உண்டு. நான்கு வேதங்களே சிவகிரி, விஷ்ணுகிரி, பிரம்மகிரி, சித்தர்கிரி என்ற பெயர்களில் மலைகளாகி நிற்க, அவற்றின் நடுவில் கம்பீரமாக அமைந்திருக்கிறது, சஞ்சீவிகிரி. இம்மலையே சதுரகிரி என்றனர் முன்னோர்கள். மூலிகைகள் நிரம்பிய மலையின் மேல் சிவபெருமான் வீற்றிருக்கிறார். சதுரகிரியை அகஸ்தியர் உள்ளிட்ட சித்தர்கள், ‘பஞ்சபூத லிங்கம்’ என்பர். இந்த மகாலிங்க மலையை ‘சித்தர்கள் வாழும் பூமி’ என்றனர் ஆன்றோர்.

 சிவன், அம்மையப்பர் உரு எடுத்தது இந்த தலத்தில்தான். அன்னை பார்வதி தேவி சந்தனக் குழம்பில் பரிஸ்தான லிங்கமதனை ஆக்கி, தவம் செய்து, சிவனுடன் இடப்புறம் அமர்ந்த தலமிது. ‘கல் லாலமரம்’ என்ற விருட்சத்தின் அடியில் சந்தன மகாலிங்கத்தை ஸ்தாபித்து அன்னை பார்வதி விரதம் இருந்த நாள் ஆடி அமாவாசை. இன்றும் சட்ட நாதமுனி, கோரக்க முனிவர் உள்ளிட்ட பதினெட்டு சித்தர்களும் தபசை கலைத்து, ஒவ்வோர் ஆடி அமாவாசையிலும் இங்குள்ள புனித ஆகாய கங்கை தீர்த்தம், கௌண்டின்ய தீர்த்தம், சந்திர தீர்த்தங்களில் உஷத் காலத்தில் நீராடி சந்தன மகாலிங்கத்தை சேவித்து இன்புறுகின்றனர் என்கிறது, அகஸ்தியர் நாடி.

‘‘ஆடி அமாவாசை திதியில் இந்த சந்தன லிங்கேஸ்வரரை தொழுதார்க்கு உறுதியாய் ‘காம்யலோகம்’ கிட்டும்’’ என்கிறார், அகஸ்தியர். காய கல்ப மூலிகைகள் நிறைந்த  வனப்பகுதியில், சுந்தர மகாலிங்க மூர்த்தியும் மலை உச்சியில் பெரிய மகாலிங்க மூர்த்தியும் கோயில் கொண்டுள்ளனர். சந்தன மகாதேவி சமேத சந்தன மகாலிங்கேஸ்வரரை தொழுதால், அனைத்து அபிலாஷைகளும் வாழ்வில் நிறைவேறும் என்கின்றனர் கோரக்கர் உள்ளிட்ட அனைத்து சித்தர்களும். 

கொல்லி மலையில் உள்ள கொல்லிப்பாவையை இந்தப் பெரிய மகாலிங்கேஸ்வரர் வீற்றிருக்கும் வனத்தில் வைத்தே கோரக்கர் என்ற புகழ்மிக்க சித்தர் உருவாக்கினார். பின் சிவனின் உத்தரவுப்படி, கொல்லி மலையில் தேவியை கோரக்கர் பிரதிஷ்டை செய்தார். கோரக்கர் தங்கி தவமியற்றிய குகை, இன்றும் கோரக்கர் குகை என விளங்குகிறது. இங்கு உறைகின்ற தாணிப்பாறை கணேசன், ராஜகாளி அம்மன், பேச்சி அம்மன் மூவரும் எப்படிப்பட்ட பேய் பிசாசுகளையும் விரட்டும் ஆற்றல் கொண்டவர்கள். பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் ‘ஜலஸ்நானம்’ செய்வது மிகவும் புண்ணியம் என்கிறது நாடி. ‘‘8 ஆடி அமாவாசை தொடர்ந்து வனதுர்க்கைக்கும் சங்கர நாராயண லிங்கமான இரட்டை லிங்கத்திற்கும், பிலாவடி கருப்பசாமிக்கும் அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தால், செல்வம் கொழிக்கும்; தொழில் விருத்தி அடையும். வம்சாவளியாக வரக்கூடிய சர்க்கரை நோய் கண்டிப்பாக குணம் ஆவதுடன், அந்த வம்சத்தினருக்கே இதய நோய், காமாலை போன்ற கொடிய நோய்கள் பாதிக்காது’’ என்கிறார், அகஸ்தியர். 

‘‘இங்குள்ள நடுக்காட்டு நாகரையும் வெள்ளை விநாயகரையும் ஞாயிற்றுக்கிழமையன்று வரும் சங்கடஹர சதுர்த்தியில் அஸ்தமன வேளையில், வெண்பட்டு சாத்தி கொழுக்கட்டை நிவேதனம் செய்து எருக்கம்பூவினால் ஹோமம் செய்பவருக்கு சித்தர்கள் காட்சி கிடைப்பதுடன், கண் நோய், சிறுநீரக கோளாறு, உயர் ரத்த அழுத்தம் போன்றவையும் நீங்கும்’’ என்கிறார், கோரக்கர்.

நாக கன்னி தவம் செய்யும் இடம் தற்போது நாக கன்னி காவு என்று இன்றும் அழைக்கப் பெறுகிறது. இங்கு ஆதிசேஷன் மனைவி சிவனை குறித்து தவம் செய்து, இந்த பூமியை தாங்கும் ஆதிசேஷனுக்கு பலமும், உற்சாகமும் தருகிறார். இந்த ஸ்தலத்தில் திருமணத் தடையான நாகதோஷம், காலசர்ப்ப தோஷம், கிரஹண தோஷம், சந்தான தோஷம் போன்றவையும் விஷ ஜந்துக்களினால் ஏற்படும் உபாதையும் விலகும் என்கிறது சித்தர் வாக்கு. 

மலைச் சாரலில் உள்ள தவசிகள் குகையில் சித்தர்கள் இன்றும் தவம் செய்து வருகின்றனர். மிகுந்த ஒல்லியான உடல் கொண்டவர் உள்ளே சென்றால், சுமார் எழுநூறு மீட்டர் தூரம் சென்ற உடன் கூட்டல் குறிபோல நான்கு வழிகள் பிரியும். இதில் பூமியை நோக்கி சரியும் வழியில் 200 மீட்டர் சென்றால் ஒளி வடிவ உடல் தாங்கி, நிர்வாண கோலத்தில் தவபுருஷர்களும் சித்தர்களும் தவம் செய்வதை காணலாம். இவர்களின் தவத்திற்கு யாரும் இடையூறு செய்யாதபடி சித்தர் பரிவாரங்களும் வனதேவதைகளும் வண்டு, கரடி, புலி போன்ற வடிவங்களில் பாதுகாப்பு தருகின்றனர்.

உண்மையான பக்தியும் விசுவாசமும் திடமான மனமும் கொண்டு குகைக்குள் சென்றால், சித்தர்களை சேவிக்கலாம் என்கிறது நாடி. இதனை பின்பற்றி சித்தர்களை தரிசித்தவர்கள் உண்டு. அவர்களை நான் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் சந்தித்தும் இருக்கின்றேன்.

‘‘ஊழிற் பெருவழி யாதுள’’ என்கிறார், ஒருவர். ‘‘விதி வழி மதி செல்லும்’’ என்கின்றார் இன்னொரு சித்தர். ‘விதி வலிது’ என்கிறது ஜோதிடம். ஆனால், விதியையே திகைக்க வைக்கும் ஆற்றல் பக்திக்கு உண்டு. சதுரகிரி சென்று அங்கு கல்லால விருட்சமடியில் கொலுவிருக்கும் சிவனுடன் ஏனைய இறையையும் பெரியோர் ஆலோசனையுடன், தொழுதால், கோள் என்ன செய்யும், விதி என்ன செய்யும்? தோற்று ஓடி ஒளியும்.

சுண்ணாம்பு காளவாயில் இட்டு ஒரு நாயன்மாரை அரசன் கொடுமைபடுத்துகின்றான். அவருடன் கல்லை கட்டி கடலில் தள்ளுகிறான். ஆனால் அவரோ ஆனந்தமாய் பாடுகின்றார். ஈசன் திருவடியை எண்ணி, அப்பர் அப்படி பாடியது மகாலிங்க நாதனை எண்ணித் தான் என்கிறார் குதம்பை சித்தர்.

சதுரகிரி என்பது திருக்கைலாயத்தை விட புனிதமானது எனப் போற்றுகிறார் நாரதர். பிரம்ம கிரி நின்று சரஸ்வதி மாதாவும் தெய்வீக லிங்கனாம், மகாலிங்கானாம், சுந்தர மகாலிங்கனை வீணை மீட்டி அவர் ஆராதனை செய்து வருகிறார். 

ஆடி அமாவாசை, சித்திரை மாத பௌர்ணமி தினம், மார்கழி திருவாதிரை நட்சத்திரத்திலும் இந்த சதுரகிரி ஈசனை தொழ, ‘விண்ணோர் பலரும் வரக்கண்டேன்’ என்கின்றார் அகஸ்தியர். ராவணேஸ்வரன், கும்பகர்ணன், ராமன், தசரதன், இக்ஷ்வாகு, யயாதி போன்ற பெரியோர்களும் வருணன், குபேரன் போன்ற தேவர்களும், நாராயணன், திருமகள், யமன் உள்ளிட்ட நித்ய சூரிகளும் குழுமி நிற்கின்றனர் என்றால், சதுரகிரி நாதனை தொழ நாம் ஏன் காலந் தாழ்த்த வேண்டும்?

No comments:

Post a Comment