Thursday, August 9, 2012

படிப்பில் கவனம் மாணவர்களே…(ஆக., 10 – ஆடிக்கிருத்திகை)

Posted On Aug 9,2012,By Muthukumar
முருகப்பெருமானுக்குரிய விரதங்களில், கார்த்திகை விரதம், நட்சத்திர அடிப்படையில் அனுஷ்டிக்கப்படுவதாகும். ஒவ்வொரு மாதமும், கார்த்திகை நட்சத்திரத்தில் இவ்விரதம் மேற் கொள்ளப்பட்டாலும், சூரியன் தெற்கு நோக்கி தன் பயணத்தை துவங்கும், தட்சிணாயண துவக்க மாதமான ஆடியில் கொண்டாடப்படுவது மிகவும் சிறப்பு. கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில், தந்தையான சிவபெருமானுக்கு திருவண்ணாமலையில் தீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது. அதுபோல, மகனுக்கு ஆடி மாத கார்த்திகையன்று விழா எடுக்கின்றனர்.
முருகப்பெருமான், சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து உருவான தீப்பொறியில் பிறந்தவர். ஆறு குழந்தைகளாகப் பிறந்த அவரை, ஆறு கார்த்திகை பெண்கள் வளர்த்தனர். அவர்களுக்கு சிவபெருமான் நட்சத்திர அந்தஸ்தை அளித்தார். அவர்கள் இணைந்து, கார்த்திகை நட்சத்திரமாக வான மண்டலத்தில் ஜொலிக் கின்றனர். அவர்கள் இந்தப் பதவி பெற்ற வரலாறை கேளுங் கள்.
ஒரு சமயம் சிவ பெருமான், பிருங்கி முனிவர், நந்தி தேவர் உள்ளிட்ட சிலருக்கு, அஷ்டமா சித்திகள் அடைவது பற்றிக் கூறிக் கொண்டிருந்தார். அச்சமயம் நிதர்த்தனி, அப்ரகேந்தி, மேகேந்தி, வர்தயேந்தி, அம்பா, துலா ஆகிய ஆறு பெண்கள் அங்கு வந்தனர். தங்களுக்கும் அஷ்டமா சித்தியை உபதேசித்தருளுமாறு வேண்டினர். இறைவனுக்கு அதில் உடன் பாடில்லை. ஆனால், அருகில் இருந்த உமையவள் இரக்கம் கொண்டு, அவர்களுக்கும் உபதேசிக்கும் படி சிவனிடம் பரிந்துரைத்தாள்.
இதை ஏற்ற சிவன், அவர்களுக்கும் அஷ்டமா சித்திகளை அடைய, பஞ்சாட்சர மந்திரமான, "சிவாயநம' என்று உள்ளன்புடன் ஜெபிக்க வேண்டும் என்றும், அந்த மந்திரத்தின் பெருமை குறித்தும் உபதேசித்துக் கொண்டிருந்தார். ஆனால், கிடைத்த வாய்ப்பை அந்தப் பெண்கள் தவற விட்டனர். அவர்கள் பாடத்தைக் கவனிக்காமல், கவனத்தை சிதற விட்டனர். இதை கண்ட சிவனுக்கு கோபம் வந்து விட்டது...
"பாடம் நடக்கும் போது கவனிக்காமல் கவனம் சிதறிய நீங்கள், பட்ட மரத்திற்கு ஒப்பாவீர்கள். பட்ட மங்கைகளான நீங்கள், கற்பாறைகளாக மாறுவீர்கள்' என்று சாபம் அளித்தார். அதிர்ந்து போன அந்த மங்கையர், தங்களுக்கு விதிக்கப்பட்ட சாபத்திற்கு விமோசனம் வேண்டினர். சிவன் அவர்களிடம், "நீங்கள் கருங்கற்பாறைகளாய் ஆயிரம் ஆண்டுகள் பூமியில் இருங்கள். அதன்பின், குரு வடிவில் காட்சியளித்து, உங்களுக்கு சாப விமோசனம் அளிக் கிறேன்' என்றார்.
அவ்வாறே சிவன் எழுந்தருளி, கார்த்திகை பெண்களுக்கு சாப விமோசனம் அளித்தார். அத்தலமே, சிவகங்கை மாவட்டத்திலுள்ள பட்டமங்கலம் ஆகும். "பட்டமங்கை' என்ற பெயரே பட்டமங்கலம் ஆனதாகக் கூறப்படுகிறது. இங்குள்ள சிவாலயத்தில், கார்த்திகை பெண்களை தரிசிக்கலாம். இதன்பின், முருகனை வளர்க்கும் பாக்கியம் பெற்ற இவர்கள், வான மண்டலத்தில் கார்த்திகை நட்சத்திரமாகும் அந்தஸ்தை பெற்றனர். கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்ட முருகனுக்கு, "கார்த்திகேயன்' என்ற பெயர் வந்தது.
ஆடிக்கிருத்திகை விரதம் மேற்கொள்வோர், மேலான பதவிகளை அடைவர். நாரத மகரிஷி, 12 ஆண்டுகள் இவ்விரதம் இருந்து, எல்லா முனிவர்களுக்கும் மேலாக, நினைத்தவுடன் சர்வ லோகங்களுக்கும் சஞ்சாரம் செய்யும் பதவி பெற்றார். இந்நாளில், முருகனுக்குரிய கந்த சஷ்டிக் கவசம், சண்முகக் கவசம் படிப்பதும், கந்த புராணம் கேட்பதும் நல்லது. இந்நாளில் முருகனுக்கு அபிஷேகம் செய்து, வழிபட வேண்டும்.
ஆசிரியர்கள் வகுப்பு நடத்தும் போது, பாடத்தை கவனமாகக் கேட்க வேண்டும் மாணவர்கள். இல்லாவிட்டால், வீட்டில் வந்து எவ்வளவு தான் படித்தாலும், மனதில் ஏறாது. இறுதியில் தோல்வியைத் தழுவி, காலம், பணத்தை வீணாக்க நேரிடும். பெற்றவர்களின் வெறுப்புக்கு ஆளாகி மனக்கசப்பு ஏற்படும். வெற்றி பெற்றவர்கள் மத்தியில், அவமானமாகவும் இருக்கும். கார்த்திகை பெண்களின் வரலாறு, இதைத் தெளிவாக மாணவர்களுக்கு எடுத்துரைக்கிறது.
ஆடிக்கிருத்திகையன்று முருகனை, மாணவர்கள் அவசியம் வணங்க வேண்டும். ஒருமித்த மன நிலையைத் தருமாறு அவரிடம் கேட்க வேண்டும். ஒருமனப்பட்ட மனதுடன் வகுப்பை கவனிப்பவர்களும், படிப்பவர்களும், முருகன் அருளால் வெற்றி வாகை சூடுவர்.

No comments:

Post a Comment