Saturday, August 11, 2012

யோக இரகசியங்கள் - சகஸ்ரார சக்கரத்தின் செயல் முறை

Posted On Aug 12,2012,By Muthukumar


மனிதன் சூட்சுமத் தன்மைகளை அறியும் ஆற்றல் உள்ளவன் என்பது பற்றி கடந்த பதிவுகளில் பார்த்தோம். இந்த பதிவில் மனிதனது சூட்சும தன்மை எப்படி செயற்படுகிறது என்று பார்ப்போம். பொதுவாக யோகம், சித்தர்கள் பற்றி அறிந்தவர்களுக்கு மனிதனில் ஆறு ஆதாரங்கள், குண்டலினி என்பன இருப்பது பற்றி அறிந்திருப்பார்கள். இது பற்றி விரிவாக நாம் இந்த பதிவில் கூறப்போவதில்லை, அது இதன் நோக்கத்திற்கு அமைவானது இல்லை. சூட்சும பார்வையுடன் நேரடியாக தொடர்புடைய சக்கரம் சகஸ்ராரமும் ஆக்ஞா சக்கரமும் ஆகும். 

இதுபற்றிய ஒரு யோக இரகசியத்தினை குருவருளால் கூறுவோம். 

இதில் சகஸ்ரார சக்கரம் என்பது உடலில் தலை உச்சியிற்கு மேல் பரவியுள்ள சூஷ்ம உடலில் காணப்படும் சக்கரமாகும். இதுவே மனிதனில் ஆன்ம ஒளியினை பிரகாசிக்க செய்யும் சக்கரமாகும். பொதுவாக கீழ் சக்கரங்கள் செயற்படும் வாழ்க்கை வாழ்பவர்களுக்கு சகஸ்ராரத்தின் ஒளி குறைந்த அளவிலும், ஒழுக்கம், தெய்வ உபாசனை செய்பவர்களுக்கு அதிகளவிலும் காணப்படும். தன்னை அறிந்து இறைவனை அறிந்தவர்களுக்கு இது வெளிப்படையாகவே தெரியும். இதனை குறிக்கவே சித்தியடைந்த மகான் களின் தலையின் பின்னால் ஒளிவடிவம் குறிக்கப்படுகிறது. இந்த மனிதனின் எண்ணங்களுக்கு தக்க வலிமையானதாக இருக்கம். தெய்வ உபாசனை செய்பவர்களுக்கு தெய்வ சக்தியுடையதாக இருக்கும். ஒருவன் தனது இச்சா சக்தியினை பிரயோகிக்கும் போது அந்த இடத்தை நோக்கி பாயும் தன்மையுடையது இந்த ஒளி. மனதினை ஏகாக்கிரப்படுத்தி ஒரு இடத்தில் பாய்ச்சினால் சலனிக்காமல் வலிமையுடையதாகும். தியான சாதனையின் போது இந்த ஒளி அசையாத சுடர் போல் சகஸ்ரார சக்கரத்தில் ஒன்றி மன இயக்கத்தினை கட்டுப்படுத்தும். இந்த ஒளி பிராண சக்தியுடன் கலந்து மற்றைய சக்கரங்களினூடாக பௌதீக உடலில் பாயும் போது உடல் சரிவர வேலை செய்கிறது.  அதேபோல் இந்த ஒளியினை எமது சூஷ்ம உடலினை தாக்கி விழிப்படையவைத்தால் சூஷ்ம உலகங்களை காணலாம். இதை எப்படி செய்வது?

முதலில் மனதின் இயக்கத்தில் செலவழியும் இந்த சகஸ்ரார ஒளியினை தியான சாதனையினால் ஒடுங்கச் செய்ய வேண்டும். பின் ஒடுங்கிய ஒளியினை இச்சா சக்தியினால் மன உடலிலும், பிராண உடலிலும் செலுத்த அந்தந்த கவசங்க்களுக்கு ஏற்ப சூட்சும பார்வை ஏற்படும். மனதின் உணர்வு இந்த சகஸ்ரார சக்கர ஒளியில்தான் உள்ளது. இந்த ஒளி பௌதீக கவசங்களை தாக்கும் போது பௌதீக உணர்வினை பெறுவது போல் சூட்சும கவசங்களை தாக்கும் போது சூட்சும உணர்வுகளை பெறலாம் என்பதே இதன் அடிப்படை. பௌதீகத்தில் தெய்வ சக்தி உறையும் இடம் சகஸ்ராரமாகும். 


No comments:

Post a Comment