Sunday, July 29, 2012

பூமிக்கு வந்த பொறுமை!

Posted On July 29,2012,BY Muthukumar
பொறுமைக்கு இலக்கணமானவள் பூமிமாதா. அவள், நமக்கு உணவு, உடைக்கான பயிர்கள், அனுபவிக்கத்தக்க பலவித பொருட்களை தந்திருக்கிறாள். நாம், அவள் மேல், நம் கழிவு களையெல்லாம் கொட்டுகிறோம், பொறுமையே வடிவாய் புன்னகை ததும்பும் முகத்துடன் ஏற்றுக் கொள்கிறாள். இவளே ஆண்டாளாக, ஆடிப்பூரத் தன்று பூமியில் அவதரித்தாள்.
ராமாவதாரத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவத்தால், லட்சுமி தாயார் மட்டும் சீதையாக அவதரித்தாள். கிருஷ்ணாவதாரத்தில் ருக்மிணியாக பிறந்தாள். விஷ்ணுவின் மற்றொரு மனைவியான பூமாதேவி, சத்யபாமாவாக பிறந்தாள். கிருஷ்ணா வதாரத்துடன், விஷ்ணுவின் அவதாரம் நிறை வடைந்தது. அவர், உலகத்துக்கு கீதையைப் போதித்திருந்தார். ஆனால், யாரும் அதைப் பின்பற்றுவதாக தெரியவில்லை. ஒருவேளை, தான் சொன்ன கீதை, மக்களுக்கு புரியவில்லையோ என்ற எண்ணத்தில் இருந்த வேளையில் தான், பூமாதேவி அவரை அணுகினாள்.
"ஐயனே... தாங்கள் ஒரு காலத்தில் வராகவதாரம் எடுத்து, ரண்யாட்சனால் கடத்தப்பட்ட என்னை மீட்டீர். ஆனால், என்னில் வசிக்கும் உயிரினங்கள், உலக ஆசையில் மூழ்கி, செய்யக் கூடாத பாவமெல்லாம் செய்கின்றன. நானும் எவ்வளவோ பொறுத்துத் தான் போகிறேன். இந்த உயிர்களை திருத்தி மீட்பதற்கு, தாங்கள் ஏதாவது செய்யக் கூடாதா?' என்றாள்.
விஷ்ணு, அவளது கோரிக்கையை ஏற்றார். லட்சுமியிடம், "நான் பூலோகத்தில் மீண்டும் அர்ச்சாவதாரமாக (சிலை வடிவம்) அவதரிக்க உள்ளேன். நீயும் என்னுடன் வர வேண்டும்' என்றார்.
லட்சுமி மறுத்து விட்டாள். "ராமாவதாரத்தில் உங்களோடு சீதையாக இருந்த என்னை சந்தேகப் பட்டீர்கள். கிருஷ்ணாவதாரத்தில், அந்த சத்யபாமா வோடும், இதர பெண்களோடும் இருந்து, என் மனதை படாதபாடு படுத்தினீர்கள். எனவே, இனி நான் உங்களோடு பூலோகத்துக்கு வருவதாக இல்லை' என்றாள். பூமாதேவியிடம், "நீயாவது வருகிறாயா?' என்றார் விஷ்ணு.
பொறுமையின் பிறப்பிடமாயிற்றே பூமாதேவி! மேலும், பகவானே தன்னிடம் கேட்கும் போது, அதிலும், தன்னில் வசிக்கும் உயிர்களை ஆசை நோயில் இருந்து மீட்பதற்காக கேட்கும் போது, விடுவாளா என்ன! "தங்களோடு வருகிறேன்' என கிளம்பி விட்டாள்.
"சரி... ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் புண்ணிய தலத்தில், நான் வடபத்ரசாயியாக அருள்செய்து வருகிறேன். அங்கே, என் பக்தரான விஷ்ணுசித்தர் இருக்கிறார். அவரது வளர்ப்பு மகளாக நீ இருந்து வா. சமயம் வரும்போது உன்னைத் திருமணம் செய் வேன்' என்றார்.
பூமாதேவியும், விஷ்ணுசித்தரின் கண்ணில் படும்படியாக, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள துளசி தோட்டத்தில், ஐந்து வயது சிறுமியாய் கிடைத்தாள். அந்த விஷ்ணு சித்தரே, "பெரியாழ்வார்' என போற்றப்படுபவர். குழந்தைக்கு, "கோதை' எனப் பெயரிட்டார்.
பூமியில் பிறந்த எல்லாருக்கும், மனிதர்கள் மீது காதல் வரும். ஆனால், கோதை தெய்வப்பிறவி யல்லவா! ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் உறையும் வடபத்ரசாயியை கிருஷ்ணராகக் கருதி, கணவனாக அடைய ஆசைப்பட்டாள். அதற்காக, கடும் விரதமிருந்தாள். ஸ்ரீவில்லிபுத்தூரை ஆயர்பாடி யாகவும், அங்குள்ள பெண்களை கோபியர்களா கவும், அவர்களில் ஒருவராக தன்னையும் இணைத்துக் கொண்டாள்.
மார்கழி மாதத்தில், தோழியருடன் இணைந்து நோன்பிருந்தாள். தன் தந்தை, அவ்வூர் இறை வனுக்கு அனுப்பும் மாலையை, தன் கழுத்தில் போட்டு அழகு பார்த்து அனுப்பி வைத்தாள். விஷ்ணுசித்தருக்கு இது தெரியவரவே, அவளைக் கண்டித்தார். ஆனால், வடபத்ரசாயியோ, "என் பக்தை கழுத்தில் அணிந்து அனுப்பும் மாலையே தான் வேண்டும்...' என்றார். தன் மகளுக்கு ஏற்பட்ட பெருமையை எண்ணி, ஆனந்தம் கொண்டார் பெரியாழ்வார்.
"எல்லாரையும் பெருமாள் ஆள்கிறார். ஆனால், நீ பெருமாளையே ஆண்டதால், "ஆண்டாள்' என பெயர் பெறுவாய்' என்றார். தன் விரதத்தை முடித்த ஆண்டாள், விஷ்ணுவின் <உத்தரவுப்படி, ஸ்ரீரங்கம் சென்று அவருடன் கலந்தாள்.
ஆண்டாள், பூமிக்கு வந்ததன் நோக்கம், இந்த உலக உயிர்களை, பிறவித்தளையில் இருந்து உய்விக்க வேண்டும் என்பதற்காகத்தான். அதனால் தான், அவள் திருப்பாவை பாடினாள். கீதை, படிப்பதற்கு சிரமமானது. அதிலுள்ள கருத்துக்களை உள்ளடக்கி, எளிமையாக திருப்பாவை பாடல்களை வடிவமைத்தாள். இந்தப் பாடல் களை தினம் ஒன்றாகப்பாடு வோர், வாழும் காலத்தில் நிம்மதி யையும், வாழ்வுக் குப் பின் பிறப் பற்ற நிலையையும் அடைவர்.

No comments:

Post a Comment