Saturday, July 28, 2012

மனக்கண்ணை திறந்து வையுங்கள்!

Posted On July 29,2012,By Muthukumar
பூனை கண்ணை மூடிக் கொண்டால் பூலோகம் இருண்டுவிடுமா என்ன?
இந்தப் பழமொழியை அநேகமாக நீங்கள் எல்லோருமே கேள்விப்பட்டிருப்பீர்கள். பூனை கண்களை மூடிக் கொண்டால் உலகம் இருட்டாகிவிடாது என்பது உண்மைதான். ஆனால் பூனைக்கு எல்லாமே இருட்டாகத்தான் இருக்கும் அல்லவா? யார் என்ன சொன்னாலும் அதுவாகக் கண்ணைத் திறந்து பார்க்கும் வரை உண்மை அதற்குத் தெரியாதல்லவா?
இந்தப் பூனை போன்றதுதான் நம் மனமும். அதில் ஒரு விஷயத்தைப் பதித்துவிட்டால், பிறகு யார் என்ன சொன்னாலும் அது தன்னை மாற்றிக் கொள்வது கடினம். அதனால், ஆழ்மனதில் ஒரு விஷயத்தைப் பதிக்கும்போதே நாம் பலமுறை யோசித்து சரியான கட்டளையை மட்டுமே அதில் பதிப்பது நல்லது.
அரோக்யமாக இருந்த பெண்மணி திடீரென்று உடல்நலம் குன்றிப் போனார் என்று. உறவினர் ஒருவர் அவளிடம் காரணம் கேட்டார்? தன் உடல்நலக் குறைவுக்கு அவள் சொன்ன காரணம் என்ன தெரியுமா?
என் மகள் உடல் நலமில்லாமல் ஊரில் இருந்து வந்திருந்தாள். அவள் கஷ்டப்படும்போது நான் மட்டும் ஆரோக்யமாகவா வலம் வருவது என நினைத்தேன். நானும் கஷ்டப்படுவதுதான் சரி என்று அப்படியே இபுருப்பதாக நினைக்க ஆரம்பித்தேன். இப்போது அவள் குணமடைந்துவிட்டாள். ஆனால் என்னால்தான் அந்த மனநிலையில் இருந்து மாற முடியவில்லை.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். எந்த நோயும் இல்லாத ஒருவர் நோயாளியாகத் தன்னை நினைத்து நினைத்து நிரந்தர நோயாளியாகவே ஆகிவிட்டார் என்றால் ஆழ்மனம் எப்படிப்பட்டது என்று உங்களுக்கே புரியும்.
நீங்கள் ஏதாவது கிராமத்துப் பக்கம் செல்பவராக இருந்தால் அதிகாலை வேளைகளில் ஒரு காட்சியை அங்கே பார்க்கலாம்.
இருள் விலகாத வேளையில், வைக்கோல் அல்லது ஏதாவது விவசாயப் பொருளைச் சுமந்தபடி மாட்டுவண்டி அசைந்தாடிச் சென்று கொண்டிருக்கும். அந்த வண்டியை சற்று நெருங்கிப் பார்த்தீர்கள் என்றால், வண்டியை ஓட்டுபவரின் கை கயிறைப் பிடித்தவாறு இருக்க, அவரோ உறங்கிக் கொண்டு இருப்பார். விடியலுக்கு வெகு நேரம் முன்பாகவே எழுந்துவிட்ட களைப்பு அவருக்கு. ஆனால் வண்டியை இழுக்கும் மாடு, தடம் மாறாமலும், எதிரே வரும் வாகனங்களில் மோதிவிடாமலும் சென்று கொண்டிருக்கும், அது எப்படி? ஓட்டுபவரின் கட்டுப்பாடு இல்லாமல் மாடுகள் வண்டியை இழுத்துச் செல்வது எப்படி?
பலமுறை பழகிவிட்டதால்தான் அல்லவா? உங்கள் மனமும் அப்படித்தான். ஒருமுறை பழகிவிட்டால் அதன்பின்னர் அதனை மாற்றுவது கடினம்.
உடல்நலம் முழுமையான ஆரோக்யத்துடன் இருக்கும் பலர், உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பது போலவும், ஏதோ நோய் வந்திருப்பது போன்றும் நினைத்து இல்லாத நோயை இருப்பதாகக் கருதி தங்கள் ஆரோக்யத்தைத் தாங்களே கெடுத்துக் கொள்வதும் இப்படிப்பட்டதுதான்.
படிப்பது, கேட்பது, பார்ப்பது இப்படிப் பல விஷயங்களை உள்வாங்குகிறது மனம். அதில் எதை அதனுள் பதிப்பது? எதை விலக்குவது? சரியாக வழிகாட்ட வேண்டியவர் நீங்கள்தான்.
உதாரணமாக சர்க்கரை நோயாளிக்கு அடிக்கடி பசிக்கும், தாகமும் எடுக்கும் என்று ஒரு விஷயத்தை நீங்கள் ஏதோ ஒரு புத்தகத்தில் படிக்கிறீர்கள். அல்லது யார் மூலமோ கேள்விப்படுகிறீர்கள்.
அதற்கு ஒரு சில நாட்களுக்குப் பின் ஒருநாள் ஏதோ காரணத்தால் உங்களுக்கு கொஞ்சம் அதிகமாகப் பசிக்கிறது. வெம்மை அதிகமாக இருப்பதால் தாகமும் எடுக்கிறது. ஆனால் உங்கள் மனம் உடனடியாக என்ன நினைக்கும் தெரியுமா?
“ஒருவேளை, நமக்கு சர்க்கரை நோய் வந்திருக்குமோ?’ என்ற எண்ணம்தான் முதலில் வரும். அதன்பிறகு நிஜமாகவே அடிக்கடி பசிப்பதாகவும் இன்னும் என்னவெல்லாம் அறிகுறிகள் உண்டோ அவையெல்லாம் தெரிவதாகவும் தோன்றும்.
ஒருசில நாட்கள் அதே பதட்டத்துடன் இருப்பீர்கள். மருத்துவரிடம் போனால், ஆமாம் என்று சொல்லிவிடுவாரோ என்று போவதையே தவிர்ப்பீர்கள்.
மெதுவாக அந்த நினைவே உங்கள் உடலில் ஏதாவது பாதிப்பை ஏற்படுத்தும். மற்றவர்கள் வற்புறுத்தலால் டாக்டரிடம் செல்வீர்கள். எல்லா டெஸ்டுகளையும் செய்துவிட்டு அவர் சொல்வார், உங்களுக்கு எந்த நோயும் இல்லை. அடிக்கடி டென்ஷன் ஆவீர்கள் போலிருக்கிறது. அதனால் கொஞ்சம் அல்சர் வர ஆரம்பிக்கிறது அவ்வளவுதான்!
இப்போது சொல்லுங்கள், இல்லாத நோயை இருப்பதாக நீங்கள் நினைத்ததற்குக் காரணம் எது? உங்கள் மனம் தானே...!
இங்கே ஒரு விஷயத்தை யோசித்துப் பாருங்கள். உங்கள் ஆழ்மனதை நேர்மறை எண்ணங்களை மட்டுமே பதித்துக் கொள்ளுமாறு பழக்கியிருந்தால், உங்களுக்கு இந்த சங்கடம் வந்திருக்காது அல்லவா?

No comments:

Post a Comment