Thursday, July 19, 2012

நாலு பேர் போன வழியில்…

Posted On July 20,2012,By Muthukumar
சில தெய்வங்களை தரிசித்தாலே புண்ணியம்; சில ஸ்தலங்களுக்கு சென்றாலே புண்ணியம்; சில தீர்த்தங்களில் ஸ்நானம் செய்தாலே புண்ணியம். நம் வாழ்நாளில் எத்தனையோ நாட்களை வீணாக கழிக்கிறோம். இன்றைய நாள் போனால், மீண்டும் வராது. ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்ததும், "இன்றைய நாள் நல்ல நாளாக கழிய வேண் டும்...' என்றும், இரவு படுக்கும்போது, "இன்றைய தினம் பகவான் அருளால் நன்றாக சென்றது...' என்றும், பகவானுக்கு நன்றி சொல்லி தூங்கச் செல்ல வேண்டும். அதற்கென்று தனி சுலோகங்களும் உள்ளன.
மானிட ஜென்மா போனால், "மீண்டும் என்ன ஜென்மாவோ?' என்று கவலைப்பட வேண்டும். புண்ணியம் சம்பாதித்தவனுக்கும் இந்த கவலை இருக்கும். ஆனாலும், அவனுக்கு நற்கதி கிடைக்கும். "ஓ... அவனா? மகா புண்ணியசாலியாச்சே...' என்று, பலர் சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட புண்ணியசாலிகள், கடைசி காலத்தில் சிரமமில்லாமல் மரணமடைவர். இவர்கள், மேல் உலகம் போவதற்கு அர்ச்சிரா மார்க்கமாக போவர். அது சுகமான வழி. இதெல்லாம் கருட புராணத்தில் உள்ளது.
தீயவர்களுக்கும் என்ன மார்க்கம், என்ன தண்டனை என்பதெல்லாம் இதில் உள்ளன. பாவம் செய்யவும் வேண்டாம்; இந்த தண்டனைகளை அனுபவிக்கவும் வேண்டாமே! பாவம் செய்வதற்கு பல வழிகள் இருந்தாலும், புண்ணியம் சம்பாதிக்கவும் பல வழிகள் உள்ளன. அந்த வழியைப் பின்பற்றலாமே!
நாலு பேர் போன வழியில், நாமும் போக வேண்டும். நாலு பேர் என்பது, அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்க வாசகர் போன்றோர், பகவானை வழிபட்டு நற்கதி அடைந்தவர்கள். அதே வழியை நாமும் பின்பற்றி, நற்கதியடையலாம். இது, உயர்ந்த தத்துவம்.
கீழான தத்துவமும் உள்ளது. ஒருவன் மரணமடைந்தால், அவனை நாலு பேர் தூக்கிச் செல்வர். அதேபோல், நாம் மரணமடைந்தாலும், நாலு பேர் தூக்கிக் கொண்டு போவர். அந்த நாலு பேர் போன வழியில், நாமும் போக வேண்டும் என்பது கீழான உவமானம்.
"நாம் நல்லதையே நினைப்போம்; நல்லதையே கேட்போம்; நல்லதையே செய்வோம்...' என்ற மனோபாவம் இருக்க வேண்டும்.
மூன்று குரங்கு பொம்மையில், ஒன்று - வாயை மூடிக் கொண்டிருக்கும்; ஒன்று - கண்களை மூடிக் கொண்டிருக்கும்; ஒன்று - காதுகளை பொத்திக் கொண்டிருக்கும். இது ஏன்? கெட்டதை பேசாதே, கெட்டதைப் பார்க்காதே, கெட்டதை கேட்காதே என்ற மூன்றையும் நமக்குச் சொல்லித் தருகிறது. ஏன் குரங்கை வைத்து இதை கூறினர் என்றால், மனம் குரங்கு போன்றது. அதை அடக்கத்தான் இந்த மூன்றும். மனம் அடங்க வேண்டும். தியானம்தான் அதற்கு வழி!

No comments:

Post a Comment