Friday, July 27, 2012

மனிதனின் சூட்சும தன்மை - மனிதன் சூட்சும பொறிகளை உடையவன்

Posted On July 27,2012,By Muthukumar
உலகில் உள்ள நமது பௌதீக உணர்வுகளால் அறியக்கூடிய எல்லாவற்றிற்கும் அடிப்படையாக சூட்சுமம் செயற்படுகிறது என்பது பற்றிசென்ற பதிவில் பார்த்தோம். இன்று மனிதனில் இந்த சூட்சுமத்தினை உணரக்கூடிய தன்மை உண்டா? என்பது பற்றிப் பார்ப்போம். 

சென்ற பதிவின் அடிப்படையில் மனிதனின் எந்தவொரு ஸ்தூல உணர்விற்கும் நிகரான சூட்சும உணர்வு இருத்தல் வேண்டும் என்பதனை அனுமானித்திருப்பீர்கள். 

மனிதன் உணர்வு எதன் மூலம் செயல் கொள்ளுகிறது, அதாவது கண் மூலம் பார்க்கிறோம் என்றால் கண் ஒளியினை ஏற்று மூளையில் செலுத்த மூளை அதனை படமாக்க அதனை உணர்வது மனம். மனதிற்கு உணர்வினை தருவது எது? ஆன்மா. 

மனமும் ஆன்மாவும் எமது பௌதீக கருவிகளால் உணரமுடியாதவை, அவை எப்படி தோற்றம் பெற்றது என்பது பற்றி எமது முன்னோர்கள் கூறுகிறார்கள். 

"மனித உடல் மூலப்பிரகிருதியால் ஆனது போல மனித மனமும் பிரபஞ்ச மனமாகிய மூலத்திலிருந்தே தோற்றம் பெற்றது, அதுபோல் ஆன்மா பரமான்மா எனப்படும் இறைவனில் இருந்து தோற்றம் பெற்றிருக்க வேண்டும். அதாவது சுருக்கமாக சொன்னால் எமது பௌதீக, சூட்சும கரணங்களுக்கு சரியான பிரபஞ்ச கரணங்கள் எம்மைச் சூழ, எம்மில் கலந்து உள்ளது என்று உணர்ந்திருந்தனர். இதையே "அண்டத்திலுள்ளதெல்லாம் பிண்டத்தில் உண்டு" என்று சித்தர்கள் கூறிவைத்தார்கள். இந்த சூஷ்ம நிலையினை உணர்ந்த முன்னோர்கள் இது ஏழு படிமுறைகளில் செயல் கொள்வதாக அறிந்துள்ளனர். இவற்றையே ஏழு உலகங்கள் என வர்ணித்து வைத்தார்கள், அவற்றின் தொடர்பினை ஏற்படுத்தும் மையங்கலே உடலில் உள்ள மூலாதாரம் முதல் சகஸ்ராரம் வரையிலான ஏழு ஆதாரங்களாகும். 

சாதாரணமாக மனிதனிற்கு பௌதீக உலகத்துடன் தொடர்பு கொள்ள கூடிய புலன்கள் மட்டுமே வளர்ச்சியடைந்திருக்கும். குண்டலினி யோக மொழியில் சொல்வதானால் மூலாதார சக்கரம் மட்டுமே விழிப்படைந்திருக்கும். ஆனால் இன்றைய நிலையில் பலர் தமது மூலாதாரசக்கரத்தினை பாழ்படுத்திய நிலையிலேயே வாழ்ந்து வருகிறார்கள். இது பற்றி தனிக்கட்டுரைத் தொடரில் ஆராய்வோம். இங்கு கூறவருவது மனிதனில் சூட்சுமப் பொறிகள் உண்டு என்பதே!

சுருக்கமாக கூறுவதானால் 
  • மனிதனது பௌதீக உடலையும் தாண்டி மனிதனுக்கு சூட்சும உலகுடன் தொடர்பு கொள்ளும் ஆற்றல் உள்ளது.
  • அந்த ஆற்றல் மனதாலும், ஆன்மாவாலும் கட்டுப்படுத்தப்படுகிறது.
  • இந்த சூட்சும உலகு ஏழு படி நிலையில் உள்ளது, இதனையே ஏழு உலகங்கள் எனக் குறிப்பிடுகிறார்கள். இந்த ஏழு உலகங்களே காயத்ரி மந்திரத்தின் வ்யாக்ருதிகள் எனப்படும் பூர், புவஹ, ஸ்வஹ, மஹ, ஜன, தப, ஸத்யம் எனப்படுவன. சாதாரண காயத்ரியில் முதல் மூன்று வ்யாக்ருதிகளே உச்சரிக்கப்படும், காயத்ரி மந்திரத்தின் உண்மையான பயன்பாடே மனித பரிணாமத்தினை ஒவ்வொரு உலகமாக உயர்த்தி ஸத்யமாகிய பரமான்வுடன் ஒன்றுவதுதான் அல்லது சூட்சும உலகுடன் தொடர்புகொள்ளும் முறையினைக் கூறுவது.  சாதாரண நிலையில் பூர்- பூமி, புவஹ - பிராண உலகம், ஸ்வஹ - மானச உலகம் இவற்றை தொடர்பு கொள்ளும் சக்தியினைத்தரும், ஏனெனில் இவை மூன்றுமே மனித வாழ்வில் உடனடி தொடர்பில் உள்ளவை, இதற்கு மேலுள்ள உலகங்கள் ஆன்ம சக்தி வலுப்பெற்றவர்கள் மாத்திரமே தொடர்பு கொள்ளக்கூடியவை. காயத்ரி மந்திர சாதனை மூலம் சூஷ்ம உலகுடன் தொடர்புகொள்ளும் முறை பற்றியும் வேறொரு பதிவில் பார்ப்போம்.
  • ஆகவே மற்றைய உலகுடன் தொடர்பு தொடர்பு கொள்ள எமது சூஷ்ம உடலில் உள்ள மேற்கூறிய ஏழு நிலைகளை செயல் படுத்தினால் அந்தந்த நிலைக்கு ஏற்ற சூட்சும பார்வை, புலனுணர்வுகள் ஏற்படும். 
  • பௌதீக பார்வையினை பெற கண்களும் மூளையும் நரம்பும் உள்ளது போல், சூஷ்ம பார்வையினை பெற மனம், புத்தி, சித்தம், அஹங்க்காரம் என்ற அந்தக்கரணங்கள் உள்ளன. 
  • உதாரணமாக கனவு நிலையில் எமது கண்கள் செயற்படுவதில்லை, ஆனால் காட்சிகளை காண்கிறோம், எப்படி? சித்தமாகிய ஆழ்மனதில் பதிந்த எண்ணப்பதிவுகள் உறக்க நிலையில் மனதில் செயற்பட்டு காட்சிகளாகின்றது, அதனை புத்தியும் அஹங்காரமும் ரசிக்கின்றன. இதுபோல் குறித்த சூட்சும உலகில் ஒருவிடயத்தினைப் பற்றி மனதினை இருத்தி ஆன்மசக்தியினை செலுத்தினால் அந்த உலகத்திற்கான காட்சியினை காணலாம்.
  • எப்படியெனில் ஒருவருடைய கர்மா என்ன என அறிய முதலில் எமது பிராண, மன உடலில் கவனத்தினை செலுத்தி பின்னர் அதன் மூலம் ஒருவரை தொடர்பு கொள்ள அவரது கர்மா பற்றிய சம்பவங்கள் மனதில் திரைப்படம் போன்று ஓடத்தொடங்கும். 
  • இந்த அடிப்படையிலேயே சூட்சுமப் பார்வை செயற்படுகிறது. இதனையே சூஷ்ம திருஷ்டி எனக் கூறுவர்.

No comments:

Post a Comment