Tuesday, January 31, 2012

காஞ்சி: சித்ரகுப்தனுக்கு கோயில் !! எந்த திசையில் தீபம் ஏற்றவே கூடாது?



Posted On Jan 31,2012,By Muthukumar

கச்சபேஸ்வரர் கோவில் ! இதுவும் காஞ்சி அம்மன் கோயிலுக்கு அருகே நடந்து போகும் தூரத்தில் தான் உள்ளது. இதனை ஒரு சிவ விஷ்ணு ஆலயம் என்று கூட சொல்லலாம். காரணம் முக்கிய சிவன் சன்னதிக்கு எதிரிலேயே பெருமாளுக்கும் சந்நிதி உள்ளது.

கச்சபேஸ்வரர் கோவில்
" கச்ச" என்றால் ஆமை என்று பொருள். இந்த இடத்தில், பெருமாள் ஆமை வடிவில் வந்து சிவனுக்கு பூஜை செய்தார் என்பது ஐதீகம். இங்கு உள்ள கோயில் குளத்தில் ஏராளமான ஆமைகள் உண்டு.
கோயிலின் நுழைவு வாயில்
இந்த கோயிலில் நான் மிக ரசித்த விஷயம் ஒன்று உண்டு. சிவனை மிக வழிபட்ட வாழ்ந்து மறைந்த மனிதர்களான நாயன்மார்களுக்கு இங்கு சிலை இருப்பதுடன் அவர் எதனால் சிறப்பு பெற்றார் என்பதை ஓரிரு வரிகளில் எழுதி வைத்துள்ளனர். உதாரணத்துக்கு சில:

அதிபத்தர்: இந்த நாயன்மார் ஒரு மீனவர். கடலில் பிடிக்கும் முதல் மீன் சிவனுக்கு என்று கடலில் விட்டு விடுவாராம். இவரை சோதித்து பார்க்க ஒரு முறை முதல் மீன் தங்க மீனாக வர வைத்தாராம் சிவன். அதையும் " சிவனுக்கு" என்று சொல்லி கடலில் போட்டாராம் அதிபத்தர்.

புகழ் சோழர்: போரில் வென்ற தலைகளில் சடை முடியுடன் கூடிய தலை கண்டதும் சிவபக்தனை கொன்ற பாவம் தீர தீக்குள் புகுந்தவர்.


நாங்கள் சென்ற போது அங்கு ஒருவர் விஷ்ணு துர்கை சந்நிதி அருகே அருமையாக நாதஸ்வரம் வாசிக்க, அந்த பின்னணி இசையுடன் இந்த கோயிலை ஒரு வீடியோ எடுத்தேன் பாருங்கள்



கோபுரத்தில் அமர்ந்திருக்கும் கிளிகள்

***********
காஞ்சி பேருந்து நிலையத்துக்கு மிக அருகில் உள்ளது சித்ரகுப்தன் கோயில். நாங்கள் சென்ற ஞாயிறு காலை செம கூட்டம் ! சிறிய கோயிலாக தான் உள்ளது.உலகிலேயே சித்திர குப்தனுக்கு கோயில் இருப்பது இங்கு தான் என்பது குறிப்பிட தக்கது







இங்கே விளக்கு ஏற்றுவது குறித்து படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்:

கிழக்கே தீபம் ஏற்ற - துன்பம் ஒழியும் !

மேற்கே தீபம் ஏற்ற - கடன் தொல்லை/ பங்காளி பகை நீங்கும் !

வடக்கே தீபம் ஏற்ற - திருமண தடை/ கல்வி தடை நீங்கும் !

தெற்கு திசை நோக்கி மட்டும் தீபம் ஏற்ற கூடாதாம் !!

***

மேலும் இங்கு ஸ்ரீமன் நாராயணன் வாக்கு என்று, " கீழே உள்ளவற்றில் ஏதாவது ஒன்றை பின் பற்றினாலே போதும்... வாழ்வில் முன்னேறலாம் !" என்று போட்டிருந்தார்கள். ஆர்வமாய் ஒன்று தானே Follow செய்தால் போச்சு என்று படித்தால், எல்லாமே பின் பற்ற கஷ்டமாய் இருந்தது.. உதாரணத்துக்கு சில..

தன்னலமற்ற சேவை

அவா விடுத்தல்

பெற்றோர் பேச்சிற்கு முழுதும் கீழ்படிதல்

*****************
சித்ர குப்தன்   கோயிலுக்கு சற்று எதிரிலேயே எமனுக்கும் கோயில் உள்ளது. நாங்கள் சென்ற காலை பதினோரு மணிக்கே பூட்டியிருந்தது. அதிகம் திறப்பதில்லை என்றார்கள். மிக சிறிய கோயிலாக தான் தெரிகிறது. வெளியே உள்ள சுவரில் சிவன் ஓவியம் தான் உள்ளது. உள்ளே எம தர்மருக்கு விக்ரகம் இருக்கும் போலும் !!


சித்திர குப்தன் கோயில் எதிரில் உள்ள எமதர்மன் கோவில் 
*************



காஞ்சிபுரத்தில் உள்ள மற்றொரு நல்ல சிறு ஹோட்டலை அறிமுக படுத்துகிறேன். காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் அருகிலேயே உள்ளது அன்னபூர்ணா பவன் ஹோட்டல். பிராமண குடும்பம் ஒன்று அவர்களே சமைத்து பரிமாறுகிறார்கள். மதிய சாப்பாடு நாங்கள் சாப்பிட்டோம். குறிப்பாய் வத்தல் குழம்பு செமையாக இருந்தது. காய்கறிகளும் அருமை. நாற்பது ரூபாய்க்கு மிக நிறைவான சாப்பாடு. காஞ்சி காமாட்சி கோயில் சென்றால், வெளியே வந்த பின் நிச்சயம் இங்கு சாப்பிடலாம் நீங்கள் !




No comments:

Post a Comment