Tuesday, April 10, 2012

புனித நீராட புறப்படுவோம்!

Posted On April 11,2012,By Muthukumar
"விஷு' என்ற சொல், சூரியன் குறிப்பிட்ட சில ராசிகளில் நுழையும் காலத்தைக் குறிக்கும். மேஷத்தில் நுழையும் காலம் சித்திரை விஷு, துலாமில் நுழையும் காலம் ஐப்பசி விஷு. ஒன்று வெயில் காலம், இன்னொன்று மழைக் காலம். இரண்டுமே சூரியனை சார்ந்து இருக்கிறது. சித்திரையில், வெயில் தாளாமல் தவிக்கும் போது, சூரியனை கரித்துக் கொட்டாதவர்கள் இல்லை. "என்னமா வெயில் அடிக்குது!' என்பர். ஐப்பசியில் மழை கொட்டும் போது, "இந்த மழை அழுது வடியுறதை எப்பதான் நிறுத்துமோ!' என்று சலித்துக் கொள்கிறோம்.
ஆனால், இதிலுள்ள உண்மையை புரிந்து கொண்டால், சூரியனை வாழ்த்துவோம். மழை காலத்தில், நம் கண்ணுக்குத் தெரியாத, எவ்வளவோ நுண்கிருமிகள் உற்பத்தியாகின்றன. இவை, மனிதனுக்கு கேடு செய்பவை. இவற்றை அழிக்க, வெயில் சுட்டெரித்தால் தான் முடியும். எனவே தான், "அக்னி நட்சத்திர காலம்' என்ற ஒன்றைக் கூட, இறைவன் நமக்கு அருளியுள்ளான். இந்தக் காலம் சித்திரையில் துவங்குகிறது.
அதே நேரம், அதிக வெயில், மனிதனுக்கு சில வெப்ப நோய்களையும் தந்து விடுகிறது. அதனால் தான், சித்திரை முதல்நாளில், புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதை வழக்கமாக்கினர். அதிலும், தாமிரபரணியில் நீராடுவது மிக மிக புண்ணியத்தையும், உடல் வலுவையும் தரும்.
கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி உள்ளிட்ட, உலகிலுள்ள எல்லா புண்ணிய நதி தேவியரும், சிவபெருமானை சந்தித்து, "ஐயனே... பாவம் செய்த பலரும், எங்களுள் வந்து நீராடுவதால், சுமை தாளாமல் அவஸ்தைப் படுகிறோம். எங்கள் சுமையைக் குறைக்கும் வழி சொல்லுங்கள்...' என்றனர்.
"பெண்களே... நீங்கள், சூரியன் மேஷத்தில் புகும் சைத்ர மாசம் (சித்திரை) முதல் நாளில், தாமிரபரணியில் மூழ்குங்கள். உங்கள் பாவங்கள் அனைத்தும் மறைந்து விடும்...' என்றார் சிவன்.
"தாமிரபரணிக்கு அப்படியென்ன சிறப்பு?' என்று, நதி தேவியர் கேட்டனர்.
"கயிலாயத்தில் என் திருமணம் நடந்த போது, எல்லா மக்களும் அங்கு கூடினர். எனவே, உலகம் சமநிலை இழந்தது. யாராவது ஒருவர் பொதிகைக்கு சென்றால், உலகம் சமப்படும் என, நான் சொன்னேன். யாரும் முன்வராத நிலையில், ஒரே ஒருவர் மட்டும் தியாக உணர்வுடன் பொதிகை மலைக்கு செல்ல ஒப்புக் கொண்டார். அவரே அகத்தியர். அவர், தன் மனைவி லோபமுத்திரையை, புனித நீராக உருமாற்றி, ஒரு கமண்டலத்தில் அடைத்திருந்தார். குடகுமலைக்கு சென்ற சமயம், விநாயகர் அந்த கமண்டலத்தை தட்டி விட்டார். அது, காவிரி எனும் பெயரில் ஓடியது. அதிர்ச்சியடைந்த அகத்தியர், வேகமாக கமண்டலத்தை எடுத்தார். எஞ்சிய நீருடன் பொதிகை வந்தார். அந்த மலையின் உச்சியில், மீதி நீரை ஊற்றினார். அது தாமிர பரணியாக பெருக்கெடுத்தது. அந்த ஆற்றின் கரையில், சித்திரை முதல் நாளில், நான் அவர்களுக்கு திருமணக் காட்சியளித்தேன். அந்த நன்னாளில், தாமிரபரணியில் புனித நீராடி, இந்த திருமணக் காட்சியைக் காண்பவர்கள், நற்கதியடைய வேண்டும் என்று, அவர் என்னிடம் வேண்டினார். அந்த வரத்தை அவருக்கு அளித்தேன்...' என்றார்.
இப்போதும், சித்திரை விஷுவன்று நள்ளிரவில் அகத்தியருக்கு, சிவபார்வதி திருமணக்கோலம் காட்டியருளும் நிகழ்ச்சி, தாமிரபரணியின் முதல் தலமான பாபநாசம் பாபநாசநாதர் கோவிலில் நடக்கிறது. திருநெல்வேலியில் இருந்து, 50 கி.மீ., தொலைவில் இவ்வூர் உள்ளது. நவகைலாயங்களில், இது சூரியனுக்குரிய தலம் என்பதால், இங்கு நீராடுவது இரட்டிப்பு நன்மையைத் தருகிறது.
இந்தக் கோவிலில் மட்டுமே அகத்தியரை, அவரது மனைவி லோபமுத்திரையுடன் தரிசிக்க முடியும். அகத்தியர் அருவி, அகத்தியர் கோவில் ஆகியவையும் பொதிகை மலையில் உள்ளன.
புனிதமான தாமிரபரணியில் நீராட புறப்படுவோமா!

No comments:

Post a Comment