Saturday, February 25, 2012

துக்கம் தொடாதவனே யோகி

Posted On Feb 26,2012,By Muthukumar



கடைசியாக முடிவுரைக்கும் நான் காஞ்சிப் பெரியவர்களின் உதவியை நாடுகிறேன்.
`என்னது! பெரியவர்கள் உரையைப் போட்டே பக்கத்தை நிரப்புகிறாயா? எழுதுவதற்குச் சோம்பேறித்தனமா?' என்று கேட்கிறீர்களா?
இல்லை. நான் எதைச் சொல்ல விரும்புகிறேனோ, அதைப் பெரியவர்கள் முன்பே சொல்லியிருக்கிறார்கள்.
அதையே என்னுடைய பாஷையில், பேத்து மாத்துப் பண்ணுவதை விட, அப்படியே கொடுத்து விடுவது மரியாதை என்பதால் கொடுக்கிறேன்.
பெரியவர்களின் அரிய விஷயங்களைத் தேடி அலைய முடியாதவர்கள், இதன் மூலம் பயனடையட்டும் என்று நான் கருதுகிறேன்.
இப்போது `அர்த்தமுள்ள இந்து மதம்' வரிசை, ஒரு லட்சத்தைத் தாண்டிவிட்டது.
பெரியவர்களின் அற்புதக் கருத்துக்களை இதன் மூலம் பரப்புவது என் ஆசை.
இந்த கருவூலங்களைப் பரவலாக இளைஞர்களிடம் விநியோகிப்பது என் நோக்கம்.
இவற்றைப் படிப்பதன் மூலம், பெரியவர்கள் உரைகளை இளைஞர்கள் தேடிப் படிப்பார்கள் என்பது உறுதி.
துக்கத்தைக் குறைப்பதற்கும், ஒரு யோகத்தைக் கடைப்பிடிப்பதற்கும். அவர் சொன்ன வழிகளை மட்டுமே இதில் நான் எடுத்துத் தருகிறேன்.
அவர்கள் சொல்கிறார்கள்:
`நாம் எல்லோரும் பரம்பொருளைப் பற்றிய உண்மையான ஞானத்தைப் பெற முயல வேண்டும்.
இந்த ஞானம் என்பது என்ன?
பரம்பொருளைத் தவிர வேறு எதுவுமே இல்லை என்பதுதான்.
அந்த ஒன்று தான் இத்தனையாகவும் தோன்றுகிறது. இத்தனையான தோற்றங்களிலேயே மனதைச் செலுத்திக் கொண்டிருந்தால், சஞ்சலம், ஏற்றத்தாழ்வு இவற்றால் உண்டாகும் கஷ்டங்கள் எல்லாம் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கும்.
இத்தனை தோற்றத்திலிருந்தும் மனதைத் திருப்பி, இவற்றுக்குக் காரணமான ஒன்றையே அறியத் தொடங்கினால், எண்ணமும் பலவாறாக ஓடி அவதிப்படாமல் சஞ்சலங்கள் ஓயும்.
ஓடுற வஸ்து என்று பின் சலிக்கவோ, ஏற்றத் தாழ்வுக்கோ இடம் ஏது? அந்த நிலையிலேயே நித்திய சுகத்தைப் பெறலாம். அந்த நிலையைத்தான் ஞானம் என்கிறோம்.'
`உலக வாழ்வில்கூட, சுகம் வருவது போலிருக்கிறது. ஆனால், அது நிச்சயமாக நிலைத்து இருப்பதில்லை.
வெளியிலிருந்து வருகிற சுகத்தை, நாம் எப்படிச் சாசுவதமாக்கிக் கொள்ள முடியும்? வெளியிலிருந்து வருவது நமக்கு ஸ்வாதீனப் படாமல், நம் கைவிட்டு ஓடியும் விடும். அப்போது, அதனால் கிடைக்கிற சுகமும் போகத்தான் செய்யும்.
இப்படித்தான் அந்த நிமிஷம் சுகமாக இருப்பது அடுத்த நிமிஷமே மறைகிறது. அடர்ந்த மரத்தின் கிளைகள் ஆடுகிறபோது, இடுக்கு வழியாக கொஞ்சம் வெளிச்சம் வந்து பாய்ந்து விட்டு, அடுத்த நிமிஷமே நிழல் வந்து மூடிக்கொள்வது போலத்தான், உலகத்தின் துன்பத்துக்கு நடுவில் கொஞ்சம் சுகம் தலையை எட்டிப் பார்த்து விட்டு ஓடி விடுகிறது.
நிரந்தர சுகம் என்பது, உலகத்துக்கு காரணமான ஒன்றை அறிவதுதான்.
உலக வாழ்வில் சகல மனிதர்களுக்கும், அளவில்லாத கஷ்டங்கள் உண்டாகத்தான் செய்யும். பணக்காரன், பெரிய பதவியில் இருப்பவன் கஷ்டமில்லாமல் இருப்பதாக மற்றவர்கள் நினைக்கலாம். அப்படி நினைத்துத் தாங்களும் அவர்களைப் போல பணமும் பதவியும் பெறப் பாடுபடலாம்.
ஆனால், பணக்காரனை பதவியில் உள்ளவனைக் கேட்டால் தெரியும். அவனுக்கு எத்தனை கஷ்டங்களென்று.
நாம் திண்ணையில் இருக்கிறோம். விழுந்தால் சிராய்த்துக் கொள்வதோடோ, சுளுக்காவதோடோ போய் விடும்.
பணக்காரனும், பதவிக்காரனும் மாடி மேல் இருக்கிறார்கள். எனவே, அவர்கள் விழுந்தால் எலும்பெல்லாம் முறிந்து போகும். பிராணாபத்து ஆகும்.
ஒருவனுக்குப் பணமும், பதவியும் உள்ளபோதே அதனால் உண்டாகிற சிறிது சுகத்தோடு, தன் பணம் பதவி போகக் கூடாது என்ற கவலை, சுகத்தை விட அதிகமாக இருக்கிறது.
இதனால் தான் உலகத்தில் எவனுமே தான் சந்தோஷமாக இருப்பதாகச் சொல்லக் காணோம்! ஒவ்வொருவனும் தானே மகா புத்திசாலி, தானே ரொம்ப அழகு என்று நினைத்துக் கொண்டிருப்பது போல, அதிகம் துக்கமுள்ளவனும் தானே என்று நினைத்துக் கொண்டிருக்கிறான்.
துக்கம் நம் உடன்பிறப்பு, நம் பூர்வ கர்மவினையின் பயனாக இந்த துக்கங்களுக்கு, நாம் முன்னமேயே விதை போட்டிருக்கிறோம். இதிலிருந்து தப்ப வழியில்லை.
ஆனால், கர்மத்தினால் ஏற்படும் கஷ்டத்தைப் பொறுத்துக் கொண்டு, சாந்தமாக இருக்க வழி உண்டு. புதிதாகக் கர்ம மூட்டையைப் பெருக்கிக் கொண்டு எதிர்காலத்தில் கஷ்டத்தை அதிகமாக்கிக் கொள்ளாமலிருக்க வழி உண்டு. முதலில் சொன்ன ஞானம் அந்த வழி.
சித்தப்பிரமை பிடித்த ஜடமாகி விட்டால் கஷ்டம் தெரிவதில்லை. பைத்தியத்தின் கஷ்டம் வேரூன்றி நிற்பதில்லை. ஆனால், சித்தப்பிரமையில் நித்திய ஆனந்தமும் இல்லை. தூக்கத்தில் துக்கமுமில்லை. ஆனால், தூக்கத்தில் சுகமாக இருக்கிறோமென்று அறிவும் இல்லை.
ஞானிதான் எப்போதும் விழிப்பிலேயே இருக்கிறான். அவனது தேகத்தில் சிரமங்களே இராது என்பதில்லை. ஆனால், அவனுடைய மனத்தில் கிலேசமே இராது. வெளியே இருக்கிற சிரமம் அவன் உள்ளே பாதிப்பதில்லை.
துக்கம் என்பதே தன்னைத் தொடாமல் எவன் ஒருவன் இருக்கிறானோ, அவன் யோகி. பாபம், அதாவது மனத்தின் அசுத்தந்தான் துக்கத்திற்குக் காரணம்.
மனதில் உள்ள அசுத்தங்கள் எல்லாம் நீங்கினால், அது தானாகவே பரமாத்மாவின் பக்கம் திரும்பி விடும். ஒழுங்கினாலும், கட்டுப்பாட்டினாலும் தான் மனத்தின் அசுத்தங்களை அகற்ற முடியும்.
இந்தச் சரீரக் கூட்டிலிருந்து ஆத்மா பிரிந்து போவதற்கு முன்பு, சரியான கல்வியின் மூலமும் அப்பியாசத்தின் மூலமும் கட்டுப்பட்டு, ஒழுங்காக வாழ்ந்து அசுத்தங்களைப் போக்கிக் கொண்டு விட வேண்டும். அப்படி செய்து ஜயித்தால், கடைசியில் தேக வியோகமே பரமாத்மாவுடன் சேர்ந்து விடுகிற யோகமாகி விடும்.
யோகிக்கு அடையாளம் என்ன? பரமாத்மாவைச் சேர்ந்து விட்ட அவனது மனசு, வேறு எதையுமே சேர்த்துக் கொள்ள நினைக்காது.
மனசு அதற்கப்புறம் ஓடவே கூடாது. அப்படி ஆகிவிட்டால் தான், அதற்கப்புறம் இப்போது இந்த மனசினால் நமக்கு உண்டாகி இருக்கிற அத்தனை தொந்தரவுகளும் தொலைந்து போகும். அந்த நிலையைப் பெறுவதற்கு எதைச் சேர வேண்டும்? மனது எதிலிருந்து உற்பத்தியாயிற்றோ அதைத்தான் சேர வேண்டும்.
மனது, அதன் மூலத்தில் சேர்ந்து விட்டால் அங்கே அப்படியே கரைந்து போய்விடும்; அப்புறம் ஓடாது. அதுவே சகல தொந்தரவுகளிலிருந்தும் விடுபட்ட நிலை.
நதி இருக்கிறது. அதன் மூலம் உண்டான இடம் என்ன? சமுத்திரம். சமுத்திர ஜலம்தான் ஆவியாகப் போய், வேறொரு இடத்திலிருந்து நதியாக ரூபம் எடுக்கிறது. அந்த ஆறு ஓடாத ஓட்டமில்லை. இப்படி ஓடி ஓடிக் கடைசியில், தன் மூலமான சமுத்திரத்தில் வந்து விழுகிறது. அப்புறம்? அதற்குத் தனி ரூபம் உண்டா? ஓட்டம் உண்டா? ஒன்றும் இல்லை.
இப்படி நதிகளுக்கெல்லாம் மூலமாக இருந்து, முடிவில் அவற்றைத் தன்னிலே சேர்ந்துக் கொள்கிற சமுத்திரம் மாதிரி, தம் மக்களை எல்லாம் முடிவான சேர்க்கையில், யோகத்தில் தன்னோடு கரைத்துக் கொள்கிற ஒன்று இருக்கிறதா என்றால் இருக்கிறது; சமாதி நிலையில் ஞானிகள், யோகிகள் தங்கள் தனி மனசைக் கரைத்து விட்டு, வெளிப்பிரக்ஞையே இல்லாமல் இருக்கும் போது, அந்த வஸ்துவை விட்டு விட்ட மாதிரி நமக்குத் தோன்றினால் கூட உண்மையில் இது நீங்காத சேர்க்கைதான். உள்ளூர அந்தச் சேர்க்கையின் அனுபவமேதான்.
அவர் வெளிப் பிரக்ஞையோடு இருப்பது மாதிரி நமக்குத் தோன்றுகிற போது கூட, அதை அடைய வேண்டும் என்ற ஆசை எதுவுமே அவருக்கு இல்லை. ஏதாவது ஒன்று தனக்கு வேண்டுமென்று, கொஞ்சம் கொஞ்சம் ஒருவனுக்குத் தோன்றி விட்டால் கூட, அவன் யோகியில்லை. அவன் ஸ்வாமியைச் சேரவில்லை என்று அர்த்தம்.
யோகியின் அடையாளத்தை வேறு விதமாகவும் சொல்லலாம். அவனுடைய சித்தம் பரமாத்மாவிடமே நிலைத்து விட்டது என்றால், அதற்கப்புறம் எந்தப் பெரிய துக்கம் வந்தாலும் அது துளி கூட ஆடக் கூடாது. அசையக்கூடாது. அழக்கூடாது. இப்படியில்லாமல் சித்தம் கொஞ்சம் சலித்து விட்டால் கூட, அவன் பரமாத்மாவை அடையவில்லை என்றே அர்த்தம்.
யோகிக்கு அநேக துக்கம் வரும்; அதாவது ஊர் உலகத்துக் கெல்லாம் அது துக்கமாகத் தோன்றும். ஆனால், அவனுக்குத் துக்கம் லவலேசமும் தெரியாது. பட்ட கட்டை மாதிரி இருப்பான். பட்ட கட்டை என்பது கூடச் சரியல்ல. அது உணர்ச்சியே இல்லாத நிலையல்லவா? யோகி ஒருத்தன்தான், பூரண பிரக்ஞையோடு இருக்கிறவன். அவன் ஸ்தானந்தனாக இருக்கிறவன். அது வேண்டும், இது வேண்டும் என்பதே இல்லாமல் சதா ஆனந்தமாக ஒருவன் உட்கார்ந்து கொண்டிருந்துவிட்டால் அது தான் யோகம்.
அவனுக்கு ஸ்வபாவமாகவே கருணை மாத்திரம் சுரந்து கொண்டிருக்கும், யாரிடத்திலும் கோபம் வெறுப்பு வராது. இன்னொரு பிராணிக்குத் தன்னால் இம்மியும் ஹிம்சை வரக்கூடாது என்கிற எண்ணம் மட்டுமே இருக்கும்.
வெளி உலகத்தின் பார்வைக்கு, அவன் என்னென்ன காரியம் செய்தாலும் அதிலெல்லாம் அவனுக்குத் `தான் செய்கிறோம்' என்ற அகங்கார எண்ணமே இராது. சொந்தப்பற்றே இல்லாமல் பரம காருண்யம் மட்டுமே அவனுடைய காரியங்களில் இருக்கும். வெளியே பார்க்கிற காரியம் கடுமையாக இருந்தாலும் கூட, உள்ளுக்குள்ளே அதுவும் பரம காருண்யம் தவிர வேறாக இராது.
மகா யோகியான பரமேஸ்வரன் இப்படித்தான் சம்ஹாரம் செய்கிறார். நமக்கு அது கொடுமையாகத் தெரியலாம்.
ஒவ்வொரு ஜீவனும் எத்தனை பாப ஜீவனாயிருந்தாலும் சிறிது காலமாவது கர்ம கதியிலிருந்து விடுதலை அடைந்து தன்னிடம் லயித்திருப்பதற்கு அவர் சம்ஹாரம் செய்கிறார். தினமும் நமக்குத் தூக்கத்தைக் கொடுத்து, அந்த நேரத்தில் சுக துக்கங்களிலிருந்து நமக்கு விடுதலை தருகிற மாதிரி, இந்தச் சரீரம் விழுந்த பின்னும் கொஞ்ச காலம் சிரம பரிகாரம் தருகிறார்.
தினமும் தூங்கிவிட்டு மறுநாள் விழித்துக் கொண்டு பழையபடி நல்லது கெட்டதுகளில் விழுகிற மாதிரி இச் சரீரம் போய்ச் சிரம பரிகாரம் ஆனபின், இன்னொரு சரீரத்தில் விழித்துக் கொள்கிறோம். இந்த அலைச்சல், புனரபி மரணம்- கூடாது.
இந்தச் சரீரம் போனால், இன்னொரு முறை சரீரம் வரக் கூடாது. அப்படிச் செய்து கொள்ள வேண்டும். கட்டுப்பாடு, ஒழுங்கு, பரம கருணை, தபஸ், பூஜை, யக்ஞம், தானம் எல்லாம் அதற்குத்தான்.
குழந்தையாக இருக்கிற காலத்தில் இருந்தே இவற்றில் எல்லாம் பழக்கம் வேண்டும். அப்படிப் பழகினால்தான். கோடானுகோடி ஜனங்களை இந்த மாதிரி படிப்படியாக உயர்த்துவதற்கு முயன்றால்தான் எங்கேயாகிலும் ஒரு யோகி, ஒரு ஞானியாவது பூரணமாக உண்டாவார். அப்படி ஒருத்தர் உண்டாவதுதான் இத்தனை மனுஷ்ய சிருஷ்டிக்கும் பலன்.'
ஆகவே,
நிம்மதியற்ற மனிதனாக நீங்கள் இல்லாமல் ஒரு யோகியாக, ஞானியாக மாறுங்கள்.
கோடிக்கணக்கான மக்களைப் பழக்குவதற்குக் குருவாக மாறுங்கள்.
இந்திய சமுதாயத்தை ஆனந்த மயமான சமுதாயமாக்க ஒத்துழையுங்கள்.
உள்ளத்தில் உண்மை ஒளியைக் காண்பதற்கு உலகத்திற்கு வழிகாட்டுங்கள்.

No comments:

Post a Comment