Tuesday, September 30, 2014

திருப்பரங்குன்ற வரலாறு


 மதுரை ரயில்நிலையத்தின் தென்மேற்குப் பகுதியில் சுமார் மூன்று மைல் தொலைவில் உள்ளது இந்த ஆலயம். சுப்பிரமணியர் தான் தங்குவதற்கு புனித இடமாக தேர்ந்து எடுத்துக் கொண்ட ஆறு இடங்களில் இதுவும் ஒன்று. இந்த ஆலயத்தின் மகத்துவம் என்ன என்றால் இங்குதான் அவர் இந்திரனின் மகளான தெய்வயானையை மணந்து கொண்டார். பராசர முனிவரின் ஆறு புதல்வர்களும் ஒரு சாபத்தின் விளைவாக சரவணா பொய்கை நதியில் மீனாகப் பிறந்து இருந்தார்கள். அவர்கள் சாப விமோசனம் பெற வேண்டும் என்றால் சுப்பிரமணியரிடம் வேண்டிக் கொள்ளுமாறு கூறப்பட்டு இருந்தார்கள். அவருடைய தரிசனம் கிடைத்ததும் அவர்கள் சாப விமோசனம் பெறுவார்கள் என்றும் அதனால் அவர் அசுரனான சூரபத்மனை அழித்தப் பிறகு திருப்பரங்குன்றத்துக்கு வருவார் எனத் தெரிந்ததும் அவருடைய வரவை ஆவலுடன் எதிர்பார்த்து அவர்கள் அங்கு காத்துக் கிடந்தார்கள்.
தம்முடைய  கடமையான சூரபத்ம சம்ஹாரத்தை திருச்செந்தூரில் முடித்துக் கொண்டப் பிறகு அவனால் பல்வேறு கொடுமைகளை அனுபவித்துக் கொண்டு இருந்த தேவர்களை விடுவித்து விட்டு அவர்களுடன் சேர்ந்து சுப்பிரமணியர் திருப்பரங்குன்றத்துக்கு வந்து கொண்டு இருந்தார். அவர் அங்கு வந்து சேர்ந்ததும் பராசர முனிவரின்  மைந்தர்கள் அவரை அன்புடன் வரவேற்றார்கள். அவர்களுடைய வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு அவர் அங்கு தங்க முடிவு செய்ததுடன் விஸ்வகர்மாவை அழைத்து தனக்கும் தன்னுடன் வந்துள்ள தேவர்களுக்கும் தங்குவதற்குத் தேவையான அற்புதமான இடத்தை கட்டுமாறு ஆணையிட்டார். அது மட்டும் அல்ல அந்த இடத்தை சுற்றி நல்ல சாலைகளையும் அமைக்குமாறுக் கூறினார்.
தங்களை சூறை ஆடிய சூரபத்மனை சுப்பிரமணியர் அழித்ததின் நன்றிக் கடனாக அவருக்கு தனது மகளான தேவசேனாவை திருமணன் செய்து கொடுக்க இந்திரன் ஆசைப்பட்டார். அங்கு கூடி இருந்த பிரும்மா மற்றும் விஷ்ணு போன்றவர்களிடம்  அதை அவர் தெரிவிக்க அவர்களும் அதை பெரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள். அது குறித்து அவர்கள் சுப்ரமணியரிடம் கூறியவுடன் அவரும் அதை ஏற்றுக் கொண்டார். ஆகவே இந்திரன் தனது மனைவி இந்திரியாணி மற்றும் மகள் தேவசேனாவை அழைத்து வருமாறு தூதுவர் ஒருவரை அனுப்பினார். திருப்பரங்குன்றத்தில் திருமணம் நடப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அந்த திருமணத்திற்கு சிவனும் பார்வதியும் வந்து சுப்ரமணியருக்கு வாழ்த்து கூறி ஆசிர்வதித்தார்கள். அது முதல் அந்த இடம் புகழ்பெற்ற தலமாயிற்று.
அதற்கு முன்னர் சுப்பிரமணியர் கண்டவீரப்பு என்ற இடத்தில் தங்கி இருந்தபோது, மகாவிஷ்ணுவின் இரண்டு புதல்விகளான அமிருதவல்லியும்  சுந்தரவல்லியும் தங்களுக்கு சுப்பிரமணியருடன் திருமணம் நடக்க வேண்டும் என ஆசைப்பட்டு சரவணா பொய்கைக்கு வந்து தவம் இருந்தார்கள். அவர்களது தவத்தை மெச்சிய சுப்பிரமணியர் அமிருதவல்லியிடம்  ''நீ இந்திரனின் மகளாகப் பிறந்தவுடன் தக்க சமயத்தில் வந்து உன்னை மணப்பேன்' என்றார். அது போலவே இளையவளான சுந்தரவல்லிக்கும் காட்சி தந்தார். அவளும் சிவ முனி என்ற முனிவரின் மகளாகப் பிறந்து நம்பி என்ற வேடனால் வளர்க்கப்பட்டு சுப்ரமணியரை மணந்து கொண்டார்.
அமிருதவல்லி ஒரு சிறிய பெண்ணாக வடிவெடுத்து மேரு மலையில் இருந்த இந்திரனிடம் சென்று 'நான் மகா விஷ்ணுவின் மகள் ஆவேன். ஆகவே என்னை வளர்த்து ஆளாக்கும் பொறுப்பை அவர் உங்களிடம் தந்து உள்ளார் என்பதினால் இங்கு வந்தேன் என்றாள். அதனால் மகிழ்ச்சி அடைந்த இந்திரனும் யானை ஐராவதரை வரவழைத்து அந்தக் குழந்தையைப் பாதுகாக்குமாறுக் கூறினார். அந்த யானையும் அதைக் கேட்டு மனம் மகிழ்ந்து அவளை எடுத்து வளர்த்தார். அதனால்தான்  யானையினால் வளர்க்கப்பட்ட அவள் தெய்வ யானை  என்றப  பெயரைப் பெற்றாள். அவளுக்கு திருமண வயது ஆயிற்று. சூரபத்மனை அழித்துவிட்டு சுப்பிரமணியர் திரும்பியதும் அவருடன் அவளுக்கும் திருமணம் ஆயிற்று.



No comments:

Post a Comment