Saturday, August 23, 2014

பித்ருக்களின் வலிமையும் - பித்ரு தோஷமும்

Posted On 23/08/14 By Muthukumar
govu
பித்ருக்கள் என்ற சொல் இறந்து போன நமது முன்னோர்களைக் குறிக்கும்.  தந்தை வழியில் மற்றும் தாய் வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பித்ருக்கள் ஆவர்.  தந்தை வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பிதுர் வழி பித்ருக்கள் எனவும், தாய் வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது மாதுர் வழி பித்ருக்கள் எனவும் அழைக்கப்படுவர். மொத்தத்தில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பித்ருக்களே ஆவர்.
நம்முடைய இந்த உடல், உயிர் மற்றும் பொருள் அனைத்தும் நம் பித்ருக்கள் அளித்ததே.  நம்முடன் வாழ்ந்த நம்முடைய முன்னோர்களான நமது பித்ருக்கள் நமக்கு அளித்த இந்த உடல், உயிர் மற்றும் பொருள் இவற்றை நாம் அனுபவித்து வருகிறோம்.  அவ்வாறு நாம் அனுபவிக்கும் போது நமது பித்ருக்கள் செய்த பாவம் மற்றும் புண்ணிய பலனையையும் சேர்த்தே அனுபவித்து வருகிறோம்.  நம்முடன் வாழ்ந்து மறைந்த நமது பித்ருக்கள் எப்போதும் நமது நலனையே விரும்புபவர்கள்.
நமது பித்ருக்கள் நம்முடன் வாழும் போது அவர்களை பேணிக் காத்து பசியினை போக்க வேண்டும்.  அதே போல் அவர்கள் மறைந்த பின்பும் அவர்களின் பசியைப் போக்க வேண்டும்.  இதுவே பிதுர்கடன் எனப்படும்.  இதையே திருக்குறள் தந்த திருவள்ளுவர் நீத்தார் கடன் என்ற அதிகாரத்தில் தெளிவாக எடுத்துரைக்கிறார்.  நமது பித்ருக்களுக்கு நாம் செய்யும் வழிபாடு ஆவி வழிபாடு ஆகும்.  இதுவே நம் பண்டைய தமிழர்களின் முக்கிய வழிபாடு ஆகும்.  இந்த வழிபாடு தற்போது மறைந்து விட்டது.
ஆவிகள் என்றவுடன் நம்மில் சிலர் பயந்து போய் இருக்கலாம்.  பயம் கொள்ள தேவையில்லை.  நமது முன்னோர்களின் ஆவிகள் மறுபிறப்பு எய்தும் வரை நமது நலனில் அக்கறை கொண்டவையாகவே இருக்கும்.  இத்தைகய நம்முடை முன்னோர்களின் ஆவிகளுக்கு நாம் செய்யும் வழிபாடு தான் பிதுர்கடன் எனப்படுகிறது.  நமது பித்ருக்கள் தான் கடவுளரின் அருளை நமக்கு வெகு எளிதாக பெற்றுத் தரும் வல்லமை பெற்றவர்கள்.  நமது வேண்டுதல்களை எளிதில் நிறைவேற்றித் தருபவர்கள் நமது பித்ருக்களே.
எனவே நமது நலனில் அக்கறை கொண்ட நமது பித்ருக்களை நாம் வழிபாடு செய்து அவர்களின் பசியினைப் போக்க வேண்டும்.  அவ்வாறு பசியினை போக்காமல் விட்டுவிட்டால் நமது பித்ருக்கள் பசியினால் வாடுவர்.  அவ்வாறு பசியினால் வாடும் பித்ருக்கள் ஒவ்வொரு அமாவாசையன்றும் நமது இல்லங்களில் உள்ள நீர் நிலைகளில் வந்து தங்குவர்.  அமாவாசையன்று நாம் பித்ருக்களுக்கு வழிபாடு செய்து அவர்களின் பசியை போக்காமலோ இருந்தால் நமது பித்ருக்கள் வருத்தத்துடன் பிதுர்லோகம் செல்வர்.
வருத்தத்துடன் செல்லும் பித்ருக்களில் சிலர் கோபம் கொள்வர்.  அத்தகைய பித்ருக்கள் கோபத்தினால் நமக்கு சாபமும் அளிப்பர்.  இந்த சாபம் தெய்வத்தின் அருளையே தடை செய்யும் வலிமை கொண்டது.  கடவுளின் வரங்களையே தடை செய்யும் ஆற்றல் கொண்டவர்கள் நமது பித்ருக்கள்.  எனவே நாம் அவர்களின் கோபத்திற்கோ அல்லது சாபத்திற்கோ ஆளாகாமல் இருப்பது நல்லது.  மேலும் நமது பித்ருக்களின் பசியைப் போக்கி அவர்களை அமைதி படுத்த வேண்டும்.
பித்ரு தோஷம் என்பது ஜாதகத்தில் உள்ள தோஷங்களிலேயே மிகவும் வலிமையானது.  இந்த தோஷம் உள்ள உள்ளவர்களின் வாழ்க்கையில் படிப்பு, வேலை, திருமணம், மண வாழ்க்கை மற்றும் குழந்தை இவற்றில் ஏதேனும் ஒன்றில் தீராத பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது.  பிதுர் தோஷம் நீங்காமல் மற்ற பரிகாரங்கள் செய்தாலும் பரிகாரங்கள் பலன் தருவதில்லை.  எத்தகைய மந்திர செபங்களும் சித்தியடைவதில்லை.  இதற்கு காரணம் நமது பித்ருக்களின் சாபம் தான்.  எனவே முதலில் பிதுர் தோஷத்தினைப் போக்கிட வேண்டும்.
பிதுர் தோஷம் உள்ளவர்களின் ஜாதகம் பிதுர் தோஷம் நீங்கிய பின்பு தான் வேலையே செய்ய ஆரம்பிக்கும்.  இந்த தோஷம் இருக்கும் வரையில் ஜாதகத்தில் உள்ள எந்த ஒரு யோகமும் தன்னுடைய பலனை தராது.  மாறாக பிதுர் தோஷம் உள்ளவர்களின் வாழ்க்கையில் துன்பமே மிஞ்சும்.  பிதுர் தோஷம் உள்ளவர்கள் முதலில் அதனை போக்கிட வேண்டும்.  அவ்வாறு நீங்கிய பின்னரே அவர்களின் வாழ்க்கையில் எந்த ஒரு முன்னேற்றமும் வரும்.

Friday, August 15, 2014

ஆன்மீக முன்னேற்றத்திற்கு நாம் பின்பற்ற வேண்டிய உணவு விதிகள்!!!


Posted By Muthukumar,On Aug 15,2014

நாம் உண்ணும் உணவும் நமது ஆன்மீக முன்னேற்றத்திற்கு அல்லது பின்னடவிற்குக் காரணமாக அமைந்துவிடுகிறது;
சமையல் செய்யும் போது கோபம்,வெறுப்பு,குரோதம்,மனவருத்தம் அடைந்தால் அந்த எண்ணங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும்(கணவன்,குழந்தைகள்) உறுதியாகப் பிரதிபலிக்கும்;தினமும் கவனித்துப் பார்த்தால் உண்ணும் உணவே சமைத்தவரின் எண்ண ஓட்டங்களைத் தெரிவித்துவிடும்;
ஒவ்வொரு முறை உண்ணும் போதும்(காலை,மதியம்,இரவு) அந்த உணவில் அறுசுவையும் இருப்பது முழு ஆரோக்கியத்தைத் தரும்;
ஒவ்வொரு முறையும் உணவு உண்பதற்கு முன்பு பழங்களைச் சாப்பிட்டுப் பழகுவது நன்று;(உண்டபின்னர் பழங்கள் சாப்பிடுவது தவறு)
குக்கரில் சமைக்கும் சாதத்தைத் தவிர்ப்பது அவசியம்;சாதத்தை வடித்து,அந்த வடிநீரை அருந்துவது நமது உடலுக்கு அளவற்ற நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும்;மட்டை அரிசி,பாலீஷ் செய்யாத அரிசியை வீட்டுச் சமையலுக்கு வாங்கிப் பழகுங்கள்;பூரண ஆரோக்கியம் உறுதியாகும்;சாதாரண பாத்திரத்தில் சமைக்கப் பழகுவது அவசியம்;திறந்த பாத்திரத்தில் சமைத்துச் சாப்பிடுவதுதான் சிறப்பு;திறந்த நிலையில் பிரபஞ்சத்தின் அனைத்து சக்திகளும் அந்த உணவின் மீது தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்துகின்றன;இந்த சக்திகள் நமது கண்களுக்குப் புலப்படாது;
மிக்ஸியில் அரைக்கப்படும் சட்னியானது விரைவில் கெட்டுப்போய்விடுகிறது;சுவையும் அவ்வளவு சிறப்பாக இருப்பதில்லை;ஆனால், ஆட்டு உரலில் அல்லது அம்மிக்கல்லில் அரைத்த சட்னியின் சுவை அற்புதமாகவும் நமது உடல் நலத்தை தொடர்ந்து பராமரிக்கும் விதமாகவும் இருக்கும்;
மிக்ஸியில் சட்னி அரைக்கும் போது ஜாரினுள் தேங்காய்த் துண்டுகள்,பொரிகடலை,மிளகாய்,வெள்ளைப்பூண்டு,உப்பு போன்றவைகளை போட்டு மூடியை இறுக மூடிவிட்டு அரைக்கிறோம்;அப்போது அந்த மூடியினுள் இருக்கும் காற்றுடன் தேங்காய்த்துண்டுகள்,பொரிகடலை சிலநொடிகளில் அரைபட்டு திப்பி திப்பியாக நுரை நுரையாக வந்துவிடுகின்றன;
ஆனால்,அம்மிக்கல்லில் அரைக்கும்போது இரண்டு ராட்சத கற்கள் இவைகளை அரைக்கின்றன;திறந்தவெளியில் அரைக்கும் போது பிரபஞ்சத்தின் அத்தனை கதிர்களும் நமது கண்ணுக்குத் தெரியாமல் இத்துடன் கலந்துவிடுகின்றன;மேலும்,இதை அரைக்கும் நமது தாயின் பரிவு,பாசம்,விட்டுக்கொடுக்கும் தன்மை போன்ற எண்ணங்களும் ஊடுருவி நமது உணவாகிறது;ஆக,நாம் எங்கிருந்து வந்தோமோ, அந்த பிரபஞ்சத்தின் சத்துக்கள் சட்னியில் கலந்துவிடுகின்றன;
அனைத்துப் பருப்புகளையும் தோல் நீக்காமல் உண்ணப் பழகவேண்டும்;
புளிக்குப் பதிலாக எலுமிச்சையை பயன்படுத்தப் பழக வேண்டும்;
மிளகாய்க்குப் பதிலாக மிளகை உபயோகிக்கப் பழக வேண்டும்;
வெள்ளைச் சீனி நமது உடல் ஆரோக்கியக் கட்டமைப்பை மெதுவாகக் கொல்லும் ஸ்லோபாய்சன்;அதற்குப் பதிலாக கருப்பட்டி,பனைவெல்லம்,பனங்கல்கண்டு,வெல்லம்,நாட்டுச் சர்க்கரை போன்றவைகளை பயன்படுத்தப் பழக வேண்டும்;
எள் எண்ணையில் வாரம் ஒருமுறையாவது குளிக்க வேண்டும்;வேக வைத்த உணவுகளைச் சாப்பிட்டுப் பழக வேண்டும்;பொறித்த மேல்நாட்டு உணவுகள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்,நோயை இலவசமாக வாங்குவதாக அர்த்தம்;
கொழுப்பு தரும் உணவுகளை அதிகம் சாப்பிடாமல் இருப்பது அவசியம்;
அதேபோல,பூமிக்குக் கீழே விளையும் கிழங்குகளை அதிகம் சாப்பிடாமல் இருக்க வேண்டும்;
ஒவ்வொரு நாளும்,ஒவ்வொரு முறையும் சாப்பிடத் துவங்கும் முன்பு பிரார்த்தனை செய்துவிட்டு சாப்பிட வேண்டும்;இந்த பிரார்த்தனை நேரம் வீடு எனில் ஒரு நிமிடம் வரையிலும்,வெளியிடங்கள் எனில் சில நொடிகள் வரை இருக்கலாம்;
தினமும் புதிய காய்கறிகளையும்,கீரைகளையும் சாப்பிடப்பழக வேண்டும்;
சாப்பிடும் போது ஒருபோதும் புத்தகம் படிக்கக் கூடாது;
சாப்பிடும் போது ஒரு போதும் டிவி பார்க்கக் கூடாது;
சாப்பிடும் போது ஒருபோதும் போனிலோ,நேரிலோ பேசவே கூடாது;
சாப்பிடுவதற்கு முப்பது நிமிடங்கள் முன்பும்,பின்பும் தண்ணீர் அருந்தக் கூடாது;
பசி இல்லாத போது ஒருபோதும் சாப்பிடக்கூடாது;அதேசமயம்,பசி உணர்வு வந்த கொஞ்ச நேரத்திலேயே சாப்பிடப் போய்விட வேண்டும்;அதிகநேரம் பசி உணர்வுடன் இருக்கக்கூடாது;பசிக்கும் போது ஒரு போதும் காபி,டீ,பால்,வடை,குளிர்பானங்கள் சாப்பிடவே கூடாது;
நாம் உண்ணும் உணவில் கசப்பு சேர்ப்பதை ஒதுக்கிவிட்டோம்;அதனால் தான் உடலானது நோய்வாய்ப்படுகிறது;
சைவ உணவில் தானிய உணவு,பருப்பு வகை உணவு,காய்கறிகள் மற்றும் கிழங்குகள், கீரை வகைகள் என்று நான்கு வகைகள் இருக்கின்றன;இவைகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நமது ஆரோக்கியமும் ஆன்மீக முன்னேற்றமும் உறுதிப்படும்;
புடலங்காய்,தேங்காய்,பிஞ்சாக இருக்கும் வெண்டைக்காய்,முருங்கைக்காய்,பீட்ரூட்,காரட் கிழங்கு,சேமைக்கிழங்கு,சேனைக்கிழங்கு,முள்ளங்கி,வெள்ளைப்பூண்டு,தூதுவளை,   தண்டுக்கீரை,சிறுகீரை,கறிவேப்பிலை,பசலைக்கீரை,பொன்னாங்கண்ணிக்கீரை,    வெங்காயம் சேர்த்த மசால்வடை,திராட்சைப் பழம்,மாதுளம்பழம்,காசினிக்கீரை,ரோஜாப்பூ,பிஸ்தாப் பருப்பு,சாதிக்காய்,கோரைக்கிழங்கு,லவங்கப்பட்டை,கிச்சிலிக்கிழங்கு,ஏலக்காய், அகிற்கட்டை,வெள்ளாட்டுப்பால்,வாதுமைப்பருப்பு,சுரைவிதை,நெல்லிக்காய்,       நாரத்தம்பழம்,இஞ்சி,சந்திஅனம்,கஸ்தூரி,முத்து,புதினா இலை,மிளகு,நாவல்பழம்,குங்குமப்பூ மற்றும் சில உணவுப்பொருட்களே காலம் காலமாக நம்மையும்,நமது முன்னோர்களையும் ஆரோக்கியமாக வாழ வைத்து வருகின்றன;
உணவு உண்பதற்கான விதிகளை இங்கே தந்திருக்கிறோம்;இந்த விதிகளை முடிந்தவரையிலும் பின்பற்றுவதன் மூலமாக வளமான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்;இந்த உணவு விதிகளைப் பின்பற்றுவதன் மூலமாக நமது ஆன்மீக முன்னேற்றம் ஒவ்வொரு நாளும் உறுதிப்படும்;
இயற்கை உரங்களால் விளைவிக்கப்பட்ட உணவுப்பொருட்கள் தமிழ்நாடு முழுவதும் கிடைக்கின்றன;இவைகளை ஆர்கானிக் ஃபுட்ஸ் என்ற பெயரில் ஒவ்வொரு சிற்றூரிலும் கூட விற்பனை ஆகின்றன;சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை முடிவடைந்த 20,000 ஆண்டுகள் வரை இம்மாதிரியான உணவுகளையே நமது முன்னோர்கள் சாப்பிட்டுவந்துள்ளனர்;
டப்பாவில் அடைக்கப்பட்ட உணவுகள்,ரெடிமேட் உணவுகளை தவிர்க்கவும்;
ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக விளம்பரங்களில் வரும் எந்த பொருளையும் வாங்க வேண்டாம்;அந்த விளம்பரங்கள் மிகைப்படுத்தப் பட்டவை;
சிப்ஸ்,நொறுக்குத் தீனிகள்,எண்ணெய்ப்பலகாரங்கள் போன்றவற்றை நாமும் ஒதுக்க வேண்டும்;நமது குழந்தைகள் இந்த மாதிரியான உணவுப்பொருட்களுக்கு அடிமையாகாமல் பார்த்துக் கொள்வது நமது கடமை;இவைகளுக்குப் பதிலாக ஆர்கானிக் பழங்கள்,கொட்டைகள்,பச்சைக்காய்கறிகளை உண்ணப் பழகவும்;குழந்தைகளுக்குப் பழக்கவும்;
இயந்திரங்களால் சமைக்கப்பட்ட உணவுகளை அறவே ஒதுக்கவும்;மனிதர்களால் சமைக்கப்படும் உணவில் இருக்கும் சுவையும் அக்கறையும் இயந்திரச் சமையலில் இராது;
அந்தந்தப் பருவகாலங்களில் விளைகின்ற பழங்கள்,காய்கறிகள்,கீரைகளை உண்ணவும்;கோடையின் வெப்பத்தைத் தணிக்க டிவி விளம்பரங்களில் வரும் குளிர்பானங்களை அருந்த வேண்டாம்;மோர்,தர்ப்பூசணி,இளநீர்,செவ்விளநீர்,குல்கந்து(ரோஜாத் தேனூறல்),திராட்சைப்பழம்,திராட்சைப் பழச் சாறு,காரட்,காரட் சாறு போன்றவைகளே நமது உடலுக்கு குளிர்ச்சியைத் தருபவை;

ஆட்டுக்கறி,மாட்டுக்கறி போன்றவைகள் சாப்பிடுவதை நிரந்தரமாகக் கைவிடவும்;இவைகளை கடையில் வாங்கிச் சாப்பிடுவதையும் கைவிடவும்;ஏனெனில்,இவைகளில் சேர்க்கப்படும் செயற்கைச் சுவையூட்டிகள் நமது உடலுக்குள் செல்லும் போது நோய்களை உருவாக்கக் காரணியாக அமைந்துவிடுகிறது;
உப்பு,சர்க்கரை,காரம் கலந்த உணவுகளை அளவோடு சாப்பிடப் பழகவும்;
மருத்துவருக்கு கொடுப்பதை விட வாணிகனுக்குக் கொடு என்ற பழமொழியின் உள்கருத்து என்னவெனில்,ஆரோக்கியமான உணவுப் பொருட்களைத் தேர்ந்தெடுத்து சாப்பிட்டால் நோய்கள் வராது என்பதே !!!



Sunday, August 3, 2014

ஆந்திர அறுபடை வீடுகள்!

Posted On Aug 3,2014,By Muthukumar
முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்ததை கந்தபுராணம் விரிவாகக் கூறுகிறது. இந்த புராணச் சம்பவத்தை விளக்கும் வகையில் திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்), திருப்பரங்குன்றம், திருவாவினன்குடி (பழநி), திருவேரகம் (சுவாமிமலை), குன்றுதோறாடல் (திருத்தணி), பழமுதிர்சோலை என்று ஆறுபடைவீடுகள் இருக்கின்றன அல்லவா? இதே போன்று முருகப்பெருமான் தாரகாசுரன் என்ற கொடிய அரக்கனை வதம் செய்ததைக் குறிக்கும் வகையில் ஆந்திரப் பிரதேசத்தில் ஆறு திருத்தலங்கள் இருக்கின்றன.
தாரகாசுரன் கொடியவனாக இருந்த போதிலும் ராவணனைப் போன்றே சிவபக்தியில் மிகுந்த ஈடுபாடுகொண்டவனாக இருந்தான் அவன் தனது தொண்டையிலேயே அபூர்வமான சிவலிங்கத்தை வைத்து சிரத்தையுடன் பூஜித்து வந்தான். முருகப் பெருமான் அவனை சம்ஹாரம் செய்தபோது வேலாயுதம் அவன் தொண்டையில் பட்டதால், அதில் இருந்த சிவலிங்கம் பல துண்டுகளாகச் சிதறி விழுந்தது. அப்படி விழுந்த துண்டுகளே திருத்தலங்களாகி ஆராமக் கோயில்கள் என்று அழைக்கப்படுகின்றன.
அந்த ஆறு துண்டுகளும் முருகப் பெருமானால் சிவலிங்கங்களாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவை அமராவதியில் உள்ள அமரராமம், சாமல் கோட்டில் உள்ள பீமராமம், அருகில் உள்ள திராக்ஷாராமம், கோடிப் பள்ளியில் உள்ள குமாரராமம், பாலக்கொல்லுவில் உள்ள க்ஷீரராமம், பீமாவரத்தில் உள்ள சோமராமம் ஆகியவை. இங்கெல்லாம் சிவபெருமானே மூலவராக இருந்தாலும், திருமுருகனுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது